நிழல் இளவரசி, இந்து சுந்தரேசன், தமிழில்-மதுரம் சுந்தரேசன், வானதி பதிப்பகம், பக். 512, விலை 250ரூ.
பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை, கைப்பற்ற ஷாஜஹான் மிகக் கடுமையாகப் போரிட்டு ஈவிரக்கமில்லாமல், தன் சொந்த சகோதரர்கள், உடன் பிறவா சகோதரர்கள் மற்றும் மருமகன்கள் என்று எல்லாரையும் வெட்டிக் கொலை செய்துவிட்டு, முடி சூட்டிக் கொள்கிறார்.
காதல் மனைவி மும்தாஜ் உடன்கூடிக் களித்து, பதினான்கு குழந்தைகளைப் பெறுகிறான். நாவல் ஆரம்பத்திலேயே மும்தாஜ், தன் 38 வயதில் பதினாலாவது குழந்தையை பெற்று விட்டு இறந்துபோகிறாள்.
தந்தையை கவனித்துக் கொள்வதிலிருந்து, அந்தப்புரத்தை நிர்வகிக்கும் பொறுப்பு வரை, மூத்தமகள் ஜஹனராவிற்கும், இரண்டாவது புதல்வி ரோஷனாவிற்கும் ஏகப் போட்டி.
ஜஹனராவே வெல்கிறாள். ஷாஜஹானின் மகன் அவுரங்கசீப், தன் தந்தை எப்படி அரியணையைக் கைப்பற்றுகிறாரோ, அதேபோல் தானும், தன் சகோதரர்கள் அனைவரையும் தீர்த்துக்கட்டிவிட்டு முடி சூட்டிக் கொள்கிறார்.
தந்தையை கொல்லவில்லை. மாறாக சிறை வைக்கிறார். தாஜ்மஹால் உருவான விதம் மிக விரிவாக அழகாக சொல்லப்பட்டுள்ளது. தமிழாக்கம் ஒரே சீராக, தங்கு தடையின்றிச் செல்கிறது. சரித்திர நாவல் பிரியர்கள் தவற விட்டுவிடக் கூடாத நாவல்.
-மயில் சிவா.
—-
நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள், காம்கேர் கே. புவனேஸ்வரி, விகடன் பிரசுரம், பக். 240, விலை 100ரூ.
இது, கம்ப்யூட்டர் யுகம், அதில் சைபர்கிரைம் எனப்படும் நவீன நரகாசுரன் புரியும் அட்டகாசங்கள் பயங்கரமானவை. டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், பேஸ்புக், டிவிட்டர், பிளாக் போன்றவற்றை பயன்படுத்தும்போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அவற்றில் பிரச்னை ஏற்பட்டால், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, யாரை எவ்வாறு அணுக வேண்டும் போன்ற பல நுணுக்கமான விஷயங்களை தெளிவாகப் புரிந்து கொள்ளும்விதத்தில், எழுதியிருக்கும் ஆசிரியர், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர், அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
-சிவா.
நன்றி: தினமலர், 26/1/2014.