Quantcast
Channel: Dial for Books
Viewing all 3876 articles
Browse latest View live

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

$
0
0

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், பக். 400, விலை 250ரூ.

கும்பகோணத்தில் பிறந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற, டில்லியில் தமிழ்ப் பேராசிரியராக கல்லூரியில் பணிபுரிந்து, தமிழில் நிறைய எழுதி, புகழ் பெற்ற இ.பா. கட்டுரைகளின் தொகுப்பு.

அவரே கூறியுள்ளதுபோல, வெங்காயத்லிருந்து வெடி குண்டுவரை என, அனைத்து விதமான விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, விமர்சித்து, பின்னிப்பெடலெடுத்து எபதப்பட்டுள்ள கட்டுரைகள். சவை, சுவாரஸ்யம், காரசாரம், வம்பு என எல்லாம் அடக்கம்.

இந்த நூலில் செம்மொழி நாடகம் மூலம் ஒரு குட்டு வைக்கிறார். அரசியல்வாதிகளுக்கு ஆங்கில நாவல் வாசித்து ஆஹோ ஓஹோ என அலப்பறை செய்வோருக்கு புக்கர் பரிசு பெற்ற ஓயிட் டைகர் என்ற நாவலை கிழி கிழி என கிழித்திருக்கிறார்.

விடை தேடுவோம் என்ற கட்டுரையில் நாடக இலக்கியத்திற்கும் சமஸ்கிருதம்தான் முன்னோடி என்று உறுதிபடக் கூறி நியாயப்படுத்தியுள்ளதை தமிழர்கள் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும். பொதுவாகவே நாடகம் பற்றி இ.பா. கூறியுள்ளவை அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

பயனுள்ள பல யோசனைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். கலை, இலக்கியம், மொழி, சினிமா, அரசியல் என எல்லாம் இந்தத் தொகுப்பில் அலசி, கரைத்து, துவைத்து, காயப்போடப்பட்டுள்ளது.

-ஜனகன்.

 

—-

 

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், வேளுக்குடி கிருஷ்ணன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, பக். 216, விலை 115ரூ.

கண்ணபிரான் திவ்ய சரித கதைகள் என்றாலே திகட்டாதது. அதிலும் வேளுக்குடி கிருஷ்ணன் என்னும் தேன் மழை பொழிகிறது என்றால், இனிமை பற்றி சொல்லவும் வேண்டுமா? ஓவியர் மாருதி வரைந்த ஏராளமான வண்ணப் படங்களும், நூல் நெடுக இடம் பெற்றுள்ளன.

-பவானி மைந்தன்.

நன்றி: தினமலர், 18/12/13.


ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கவுரை

$
0
0

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கவுரை, டாக்டர் சுதா சேஷய்யன், கிரி டிரேடிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட், பக். 660, விலை 300ரூ.

அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் அன்னை லலிதா. அம்பாளை வணங்கும் பேறு, பலருக்கு கிடைக்க வேண்டும் என்ற கருத்தில் எழுதப்பட்ட விளக்கவுரை இது.

டாக்டர் சுதா சேஷய்யன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், காலம் காலமாக இந்த நாட்டில் போற்றப்படும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திற்கு சிறப்புரை எழுதியிருக்கிறார். ஸ்ரீ என்று கூறினாலே அது காலத்தோடு கற்பனை கடந்த பரம்பொருளான அன்னையைக் குறிக்கும்.

அப்படிப்பட்ட அன்னையை வணங்க உதவிடும் ஆயிரம் பெயர்களை, பல்வேறு தலைப்புகளில் விளக்கியிருப்பது சிறப்பான தெய்வீகப்பணியாகும். இமவான் பெற்ற மகளான அன்னைய வணங்குவோருக்கு இடர்கள் எளிதாக தீரும் என்பது காலம்காலமாக கண்ட உண்மையாகும்.

அதை இந்த விளக்கஉரை நூல், தமிழ் வாசகர்களுக்கு உணர்த்தும் என்பதில் ஐயமில்லை. புவனம் கடந்து நின்ற ஒருவனாகிய, சிவபெருமான் உள்ளத்தில் நிலைத்திருக்கும் அன்னையான அவர், உலகம் காக்க ஆலகால விடத்தை சிவபெருமான் உண்டபோது, அதை அவரது தொண்டையில் நிறுத்தி, நஞ்சை அமுதமாக்கிய பெருமாட்டி.

காலம் காலமாக அந்த அன்னையை வழிபடும் தொண்டர் திருக்கூட்டம், இந்த நாட்டின் அடித்தளமாக இருப்பதால் அறிவு மேம்பட்டு, ஆன்மிகம் தழைத்து, அதனால் அறமும் நிலைத்து நிற்கிறது. அந்த அறம் மென்மேலும் சிறந்து, எல்லா உயிர்களும் வாழ, வளர இந்த நூலில் காணப்படும் தெய்வீகக் கருத்துக்கள் உதவிடும். ஆசிரியரின் ஈடுபாடும், வெளியிட்ட கிரி பதிப்பகத்தாரின் அக்கறையும் பாராட்டுதற்குரியது.

-எம்.ஆர்.

 

—-

 

ஹாரி பாட்டரும் ரஸவாதக்கல்லும், ஜே.கே.ரோலிங், தமிழில் பி.எஸ்.வி. குமாரசாமி, மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பிரைவேட் லிட், இரண்டாவது மாடி, உஷா ப்ரீட் காம்ப்ளக்ஸ், 42, மாளவியா நகர், போபால் 426003, பக். 340, விலை 299ரூ.

மாயா ஜாலக் கதைகள் மூலம், சிறுவர்களைக் கவர்ந்த ஜே.கே. ரோலிங்கின் புத்தகம், தமிழில் வெளிவந்திருக்கிறது. நல்ல முயற்சி, மொழி பெயர்ப்பாளரும், எடிட் செய்துள்ள நாகலட்சுமி ஷண்முகமும் பாராட்டுக்குரியவர்கள்.

நன்றி: தினமலர், 18/12/13.

செவ்விலக்கிய சிந்தனைப் புதையல்

$
0
0

செவ்விலக்கிய சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம், இடைக்கட்டு உள்கோட்டை அஞ்சல், கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம் 612901, பக். 160, விலை ரூ.150.

இந்த நூல் தமிழர் வரலாறு. பண்பாட்டு செய்திகளைப் பற்றியது. இதில் அமைந்துள்ள இருபது கட்டுரைகளும், இனியவை இருபது என்று சொல்லத்தக்க அளவில் சிந்தனையைத் தூண்டுவனவாக உள்ளன.

சங்க கால மன்னர்களான கரிகாலன், நன்னன், மலையமான் பற்றிய தகவல்களும், நவிர மலை, கபிலர் குன்று, பெருமுக்கல் மலை அரிக்கமேடு ஆகிய வரலாற்றுத் தலங்களைப் பற்றிய அரிய செய்திகளும், குறுந்தொகை மலைபடுகடாம், பட்டினப்பாலை, சிலம்பு, திருக்குறள், சங்கப் பாடல்களில் வாய்மொழி இலக்கியத்தின் தாக்கம் ஆகியவை பற்றியுமான நுண்ணிய பார்வைகளும், சிந்தனைக்கு விருந்தாக அமைவன.

சங்கப் பாக்களைப் பின்னாளில் பாடுவாரின்மையால், அவை வாய்மொழியாகப் பாடப்பட்டன என்ற ஆசிரியர்களின் கருத்து, சிந்திக்கத்தக்கது. சிலம்பில் இசை தொடர்பான தகவல்களை இரு கட்டுரைகள் உணர்த்துகின்றன.

திருக்குறளுக்கு உரை எழுதியோர் அதை எவ்வெவ்வகையில் எதிர்கொண்டனர் என்பதைச் சில கட்டுரைகளில் தெரிவிக்கிறார் ஆசிரியர். பரிமேலழகரின் நிறை குறைகளைப் பாவாணர் எவ்வாறு உணர்த்துகிறார் என்பதனையும், திராவிட இயக்க உணர்வினர் குறளைத் தங்களது கருத்தியலுக்கான கருவூலமாகக் கொண்டு உரை எழுதியிருப்பதையும் விரிவுபட விளக்குகிறார்.

குறுந்தொகை பற்றிய கட்டுரையில், அந்நூலில் இடம் பெறும் குளகு, குறியிறை போன்ற சொற்களுக்கு பொருள் முடிபு காண்பது பாராட்டுக்குரியதாய் உள்ளது.

-ராம.குருநாதன்.

நன்றி: தினமலர், 18/12/13.

 

—–

 

கண் நோய்களும் பாதுகாப்பு முறைகளும், டாக்டர் வி.எம்.லோகநாதன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை ரூ.90.

மனித உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்றான கண்களின் அமைப்பு வண்ணப் படங்கள் மூலமாக விளக்கப்பட்டுள்ளது. கண் நோய்களில் இருந்து கண்களை காப்பது, மாறுகண் சிகிச்சை, கண் வங்கி முகவரிகள், கண் தான விவரங்கள், கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் போன்ற விவரங்கள் எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 18/12/13.

அனுபவச் சுவடுகள்

$
0
0

அனுபவச் சுவடுகள், டாக்டர், கு. எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை ரூ.125.

வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களையும் அவர்களால் ஏற்பட்ட அனுபவங்களையும் பற்றியும் நினைவு கூர்தலே இந்நூல். கல்லூரி படிப்புக்கு வழிகாட்டும் ரங்க ஐயங்கார், ஆங்கிலம் தெரியாத கண்ணுச்சாமி, வெளிச்சத்தை உருவாக்கிக் கொள்ளும் கந்தசாமி, சந்துருவின் மனைவி, மகள் எனப் பலவகையான மகத்தான மனிதர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன். அத்துடன் ஒவ்வொரு சம்பவத்தையும் ஒரு குட்டி சிறுகதைபோல் சுவாரசியமாக தொகுத்து அளித்திருப்பது சுகமானது.

நன்றி: தினத்தந்தி, 18/12/13.

 

—-

 

விஸ்வ பிரம புராணம், பிரம்மஸ்ரீ அ. முத்துச்சாமி பாரதியார், பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஆச்சாரியார் பவுண்டேஷன், பக். 510, விலை 650ரூ.

தீபாவளி மலர் போன்ற பெரிய சைஸ் புத்தகமான இது, 119 ஆண்டுகளுக்குப் பின் மறுபதிப்பாக வெளிவந்துள்ள புராண நூல்.

சுவிரத மகராஜாவுக்கு காளஹஸ்தி முனிவரால் கூறப்பெற்ற வடமொழி சுலோக வடிவிலான, இப்புராண நூலை அருமையான தமிழ்ப் பாக்களாக்கி அதற்கு விரிவான உரையும் எழுதி வெளியிட்டிருக்கின்றனர்.

45 அத்தியாயங்களில் உலகின் தோற்றம் மனித குலத்தின் வருண தருமங்கள், கோத்திர வகைகள், சாத்திரங்கள், சடங்குகள்ள ஆகியவை விவரிக்கப் பெற்றுள்ளன. கடவுளர்கள் பற்றியும், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் போன்ற திருத்தொண்டர்கள் பற்றிய செய்திகளும் உள்ளன.

விரும்பியவர்கள் படிக்கலாம்.

-கவுதமநீலாம்பரன்.

நன்றி: தினமலர், 18/12/13.

சீனா அண்ணன் தேசம்

$
0
0

சீனா அண்ணன் தேசம், சுபஸ்ரீ மோகன், விகடன் பிரசுரம், பக். 136, விலை 100ரூ.

அதிக மக்கள் தொகையும், மிகப் பெரிய நிலப்பரப்பும் கொண்ட சீனாவை நாம் அனைவரும் ஒரு கம்யூனிச நாடு (செஞ்சீனா) என்ற அளவில் மட்டும் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், இந்தச் சிறிய புத்தகத்தைப் படித்து முடித்த பின், நமக்கு சீனாவைப் பற்றிய பல அரிய சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வருகின்றன.

குறிப்பாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை மற்றும் முதியவர்களைப் போற்றி மகிழும், குடும்பத்து இளந் தலைமுறையினர் பற்றிய விஷயத்தையும் பற்றிச் சொல்ல வேண்டும். பெற்றோர் சம்மதமில்லாமல் அங்கு ஒருவரும், காதல் வயப்பட்டிருந்தாலும்கூட, திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற தகவல் வியபூட்டுகிறது.

ஆனால், அவர்களிடையே நிலவிவரும் மூடநம்பிக்கை (சென்டிமென்ட்) குறித்த தகவல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சீனா குறித்து, பல அரிய தகவல்களுடன் கூடிய இந்தப் புத்தகம், நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறது. நூலாசிரியை பாராட்டுக்குரியவர்.

-ஜனகன்.

 

—-

 

27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் பைரவர் வழிபாட்டின் பலன்களும், எஸ்.எல்.எஸ். பழனியப்பன், எஸ்.எல்.எஸ் பதிப்பகம், பக். 134, விலை 80ரூ.

சிவனின் வீரவடிவமே, பைரவர் கோலம், அந்தப் பைரவரின் வடிவங்களில், ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் ஒவ்வொரு வடிவத்தை தரிசித்து வணங்குவது, அதிக பலன் தரும் என்பது ஐதீகம். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான, 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு உரிய பைரவர் வடிவங்களும், அவர் உறையும் தலமும் நூலில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன.

அழகிய வண்ணப்படங்கள், நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன

-சிவா.

நன்றி: தினமலர், 18/12/13.

வாரம் ஒரு பாசுரம்

$
0
0

வாரம் ஒரு பாசுரம், சுஜாதா, கிழக்கு பதிப்பகம், பக். 144, விலை 100ரூ.

To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-960-6.html

வைணவ பக்தி நூல்களில் தலைசிறந்தது நாலாயிரத்திவ்யப் பிரபந்தமாகும். அந்நூலின் பாசுரங்களுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளில் மிகச் சிறந்தது, பெரியவாச்சான் பிள்ளையின் உரை என்பர் பெரியோர்.

அவ்வுரையை இன்றைய இளைஞர்கள் பலரால் படித்துப் பொருள் உணர்வது கடினம். காரணம் அவ்வுரை வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது.

பழகு தமிழில், சுஜாதா இந்நூலை 68 பாசுரங்களுக்கு மிக எளிமையாக உரை எழுதியுள்ளார். படிப்பதற்கு சுவையாக உள்ளது.

-டாக்டர் கலியன் சம்பத்து.

நன்றி: தினமலர், 18/12/13.

 

—-

 

தமிழ் வழிபாடும் சிறு தெய்வங்களும், கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், அவ்வைக் கோட்டம், திருவையாறு, தஞ்சாவூர்மாவட்டம், விலை ரூ.500.

திருக்கோவில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் 11வது அனைத்துலகத் தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்குக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று, கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா, கோபுர தரிசனம் கோடி புண்ணியம், மக்கள் வாழ்வின் கலங்கரை விளக்கம் திருக்கோவில்கள் இத்தகைய சிறப்புமிக்க திருக்கோவில்களில் தெய்வத்தமிழ் வீற்றிருக்கும் மாண்புகளையும், மாட்சியினையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் கட்டுரைகள் அமையப்பெற்றுள்ளன.

இவை தெய்வ வழிபாட்டுக் குழுக்களின் ஒற்றுமையையும், மக்களின் பண்பாட்டையும், இறை நம்பிக்கையையும் காட்டுவனவாய் உள்ளன.

நன்றி: தினத்தந்தி, 18/12/13.

சிறுகதைகளும் குறுநாவல்களும்

$
0
0

சிறுகதைகளும் குறுநாவல்களும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 185ரூ.

உலகப் புகழ் பெற்ற ரஷிய எழுத்தாளர் அந்தோன் சேகவ். பிற்போக்கு சிநத்னைகள் மேலோங்கியிருந்தபோது அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தவர். எழுத்துக்களுக்கு உயிர் கொடுத்தவர்.

மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கும் உளவியல் படைப்பாளர். அவர் எழுதிய சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆக ஒன்பது கதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. மேலிடம் என்றதும் பல்லைக் காட்டும் மனோபாவத்தை நயம்பட எடுத்துரைத்து நகைக்கிறது பச்சோந்தி என்னும் கதை, மற்றொரு கதை இயோனிச். இது இளம் வயதில் நகருக்கு வந்து வேலை ஏற்கும் ஒரு டாக்டரின் கதை. இக்கதை மனித ஆன்மா சிறுகச் சிறுக நலமிழந்து மரத்துப் போவதைக் காட்டுகிறது.

மணமகள் என்னும் கதை நாதியா என்றொரு நங்கையின் கதையைக் கூறுகிறது. கேசுவின் கதைகள் படிப்போரைக் கலங்கச் செய்கிறவை. துயரம் தோய்ந்த புன்னகை புரிகிறவை. மென்மையானவை. மனித மாண்புக்குரிய வாழ்வை மலரச் செய்ய வேண்டுமென்ற ஊக்கத்தை அளிப்பவை.

ரஷிய படைப்பை சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருக்கின்றனர் பூ. சோமசுந்தரமும், ரா. கிருஷ்ணையாவும்.

 

—-

 

ஆஸ்திரேலிய ஆதிவாசிக் கதைகள், தமிழ்க்குரல் பதிப்பகம், 10, புலிபோன் பஜார், 2வது சந்து, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 180ரூ.

ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தர்களான கறுப்பின ஆதிவாசிகளின் மரபுகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் குட்டிக் குட்டிக் கதைகளின் தொகுப்பு நூல்.

இக்கதைகள் மூலம் பழங்குடி தமிழர்களுக்கும் ஆஸ்திரேலிய ஆதிவாசகளுக்குமான பண்பாட்டுத் தொடர்புகளையும் ஆதிவாசிகளின் நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள், வணக்க வடிவங்கள் ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறார் மாத்தளை சோமு.

நன்றி: தினத்தந்தி, 18/12/13.

வெற்றி வெளியே இல்லை

$
0
0

வெற்றி வெளியே இல்லை, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 100ரூ.

தன்னம்பிக்கை கட்டுரைகள் கொண்ட நூல். விதைக்குள்ளே மரம் மறைந்திருப்பதைப்போல முயற்சியும், உற்சாகமும், உழைப்பும், ஊக்கமும் நமக்குள்ளே மறைந்து இருக்கின்றன. அயராத முயற்சியால், மூடி இருப்பதை அகற்றி ஆற்றலை வெளிப்படுத்தினால் வெற்றிதான் என்பதை எளிமையான கட்டுரைகள் மூலம் கூறுகிறார் வழக்கறிஞர் த. இராமலிங்கம்.

நன்றி: தினத்தந்தி, 18/12/13.

—-

 

தமிழ் இன்பம், ரா.பி. சேதுப்பிள்ளை, பூம்புகார் பதிப்பகம்.

தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளையைப் பற்றி தெரியாதவர்கள் இல்லை. உலக இலக்கியங்களில் தமிழில்தான், உயிரோட்டம் வாய்ந்த இலக்கியங்கள், தமிழில்தான் உயிரோட்டம் வாய்ந்த இலக்கியங்கள் நின்று நிலவுகின்றன.

அவற்றை ஆரம்ப கட்ட வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த நூலை சேதுப்பிள்ளை எழுதினார். இதில் கம்பன், சேக்கிழார், திருவருட்பா, புறநானூறு, சிலப்பதிகாரம், கந்த புராணம், பெரியபுராணம் ஆகிய இலக்கியங்களின் சொற்சுவை பொருட்சுவையை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

செய்யுள் நடையில் அமைந்த இலக்கியங்களை படிப்பதற்கு பயிற்சி தேவை. இன்றைய நிலையில், அது எல்லாரும் வாய்ப்பது இல்லை. சேதுப்பிள்ளையின் இந்த நூல், இலக்கியத்தில் ஆர்வம் உடையவர்களுக்கு வழிகாட்டியாக இன்றும் திகழ்கிறது.

200 பக்கங்கள் கொண்ட தமிழ் இன்பம் நூல், எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் படிக்க கிடைக்கிறது.

நன்றி; தினமலர், 22/12/13.


அழகைத் தேடி

$
0
0

அழகைத் தேடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, பக். 224, விலை 125ரூ.

பெண்கள் காதல் என்னும் பெயரால் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதை நாளிதழ்களில் நாம் அன்றாடம் காணும் செய்திகள் எடுத்துரைக்கின்றன.

இக்கருவை மையமாக வைத்து எழுத்துலகில் தனிச்சிறப்பிடம் பெற்றுள்ள ஜோதிர்லதா கிரிஜா இச்சமூகப் புதினத்தை எழுதியுள்ளார். சூர்யா என்கிற இளம்பெண் முன்பே திருமணமான ஒருவன் சாமர்த்தியமாக அதை மறைத்துக் கூறும் பொய்யை நம்பி, எப்படிக் காதல் வலையில் விழுந்து ஏமாந்து போகிறாள் என்பதை படு யதார்த்தமாகவும், இயல்பான சம்பவப் போக்குகளுடனும் புதினம் மனம் நெகிழத்தக்க வகையில் விவரிக்கிறது.

-கவுதம நீலாம்பரன்.

 

—-

 

சிந்தாமணி நிகண்டு, வ. ஜெயதேவன், ரா. பன்னிருகை வடிவேலன், நோக்கு, 259, நேரு நகர், 2வது முதன்மைச் சாலை, சென்னை 600096, பக். 157, விலை 100ரூ.

அகராதியில் ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் உண்டு. ஆனால் நிகண்டு தொடர்புடைய சொல்லுக்கு பல பொருள்களை வரிசையாக கூறும் தமிழில், செய்யுள் வடிவில் பல நிகண்டுகள் வெளிவந்துள்ளன.

மொழி வளம் சேர்க்கும் நிகண்டு வரிசையில், 170 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த யாழ்ப்பாணம், வல்வை, ச. வயித்திய லிங்கரின் சிந்தாமணி நிகண்டு பழமையும், பெருமையும் மிக்கது.

137 ஆண்டுகளுக்கு பின், இந்த நூல் மறுபிறவி எடுத்து மலர்ந்துள்ளது, தமிழ் மொழி செய்த தவப்பயனாகும். 386 செய்யுள்கள் மூலம் 3088 தமிழ்ச் சொற்களுக்கு அகராதிப் பொருள் தருகிறது. இந்த சிந்தாமணி நிகண்டு. 400 ஆண்டுகளுக்கு முன், மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டினைப் போல், இந்த சிந்தாமணி நிகண்டும், ககர எதுகை முதல் னகர எதுகை வரை சொற்களுக்கு, விளக்கம் தருகிறது.

ஒரு அடிக்கு இரு சொல் வீதம், ஒரு பாட்டில் 8 சொற்கள் விளக்கம் பெற்றுள்ளன. சில எடுத்துக்காட்டுகள்- வம்பல்-திசை, வாம வர்த்தம், இடம்புரிச் சங்கு, விம்பு-கழுகு, வேம்பின் தாரோன்-பாண்டியன், அம்புலி-சந்திரன், அமிச்சை-ஞானம், சிம்புள்-என்கால்புள், சிம்மதம்-பாம்பு (பாடல் 212). இறுதியில் அகராதிச் சொற்பட்டியல் பொருளுடன் தரப்பட்டுள்ளது. படிப்பவருக்கு மிகுபயன் தரும்.

அகராதிபடித்தவன் அறிஞன், வாதாடுவதில் வல்லவன், எதையும் எளிதில் ஏற்கமாட்டான். அதனால்தான், அகராதி படித்தவன் என்று பாராட்டாமல் அகராதி பிடித்தவன் என்று ஆணவக்காரனாய் அவனைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். சிந்தாமணி நிகண்டு கேட்டது எல்லாம் தரும் தமிழ் அகராதி.

-முனைவர் மா.கி. ரமணன்.

நன்றி; தினமலர், 22/12/13.

சங்க இலக்கிய மாண்பு

$
0
0

சங்க இலக்கிய மாண்பு, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 186, விலை 85ரூ.

சங்க இலக்கியத்தின் மாண்பும், அதன் ஆளுமை பண்பும், இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு புனையப்பட்டிருக்கின்ற பாங்கும், இளைய தலைமுறை அறிய வேண்டியது அவசியம்.

சங்க இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் சொற்கள், பொருள் கடினமாக, நடை சிரமமாக இருப்பதால், அதன் கருத்துக்கள் இன்றைய தலைமுறையை எளிதாக எட்டவில்லை.

எனவே, அவை கூறும் அரிய கருத்துக்களை, எளிய தமிழ் நடையில் கட்டுரையாக தந்துள்ளார் ஆசிரியர். ஆழிபெருஞ்சித்திரனாரின் சான்றாண்மையும், கோப்பெருஞ்சோழனின் கவித்திறமும், சங்க சான்றோர்களின் ஆளுமைத்திறனும் இந்த கட்டுரைகள் வழியே நமக்கு புலப்படுகின்றன.

இல்வாழ்க்கைக்கு இமாலய படிப்பினை தரும் நற்றிணை பாடல்களின் நயம், இலக்கியம் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல, இல்லறம் விரும்புவோருக்கும் உதவும்.

-ஜீ.வி.ஆர்.

 

—-

 

தமிழ் இலக்கிய வரலாறு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், முல்லை நிலையம், பக். 320, விலை 140ரூ.

எந்த இலக்கிய வரலாற்றையும் போல் அல்லாமல், புது இலக்கிய வரலாறாக தெ.பொ. மீனாட்சிசுந்தரனாரால் படைக்கப்பட்டது இந்த நூல். மொழியையும், இலக்கியத்தையும் மிக எளிமையாக நமக்கு உணர்த்துகிறது.

பண்டைத் தமிழ் இலக்கியங்கள் என்றாலும் அவையும் மனிதனால் படைக்கப்பட்டவை என்ற உண்மையை உணர்த்தி, நம்மை அவற்றிற்கு மிக அருகில் அழைத்துச் செல்லும் தன்மை கொண்டு விளங்குகிறது.

திருக்குறளைப் படைத்த திருவள்ளுவரும் மனிதர், நாமும் மனிதர் என்னும் ஒற்றுமையை முதலில் விளக்கி, பின்னர் வேற்றுமைக்குள் அழைத்துச் செல்கிறது.

பண்டைய இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்களாகப் பாதுகாத்து நமக்கு கொடுத்த மரபினைச் சேர்ந்தவர்கள் பாணர்கள் என்றம் அந்தப் பாணர்கள், பறை அறைவோர் முதலானோர் தற்காலத்தில் இழிவாகக் கருதப்படுவதையும் தெளிவுபடுத்துகிறார் தெ.பொ.மீ. நான்க நிலப்பிரிவு ஐந்து நிலப்பிரிவுகளாக பிரிவானது, ஐந்து திணைப்பிரிவு ஏழு திணைப்பிரிவானது முதலா னதிணைச் செய்திகளை நுணுக்கமாக ஆராய்வதுடன் எளிமையாக தருவது இந்த நூலின் சிறப்பு. எத்தனை தமிழ் இலக்கிய வரலாறு நூல்களைப் படித்திருந்தாலும் இந்த நூலை படித்தால் புதிய அனுபவத்தைப் பெற முடியும் என்பது உறுதி.

-முகிலை ராசபாண்டியன்.

நன்றி; தினமலர், 22/12/13.

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்

$
0
0

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 532, விலை 300ரூ.

புலிகளை வேட்டையாடாமல், புள்ளிமான்களை வளர்ப்பதில் பயனில்லை எனும் கட்டுரையில் துவங்கி, சுத்த ரத்தம் உடையவன் சும்மா இருகக முடியுமா? என்பது முடிய 40 கட்டுரைகள் டாடா, பிர்லா, பஜாஜ், அம்பானி, மிட்டல், டால்மியா, விஜய மல்லையா என்று பெரு முதலாளிகளின் மறுபக்கத்தை, வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் நூலாசிரியர்.

ஊழ்வினையை விட ஊழல் வினையில் நம்பிக்கையில் உள்ள அன்றைய, இன்றைய அமைச்சர்களும், பிரதமர்களும் இக்கட்டுரைகளில் நிறையவே இடம்பிடித்துள்ளனர். தவிரவும், உலக முதலாளிகள், இந்தியாவிற்குள் வந்து, நம் பொருளாதாரத்தை சுரண்டும் தகவல்களும் ஏராளம்.

புரட்சி பூக்க வேண்டம் என்று, புத்தக பூபாள மிசைக்கும் ஆசிரியர், பொன்னுலகைப் படைக்க கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, போலீசை அடக்கி,  ஒடுக்கவாவத கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வர வேண்டும் (பக். 16) என்று கூறுவது சற்று நெருடலாக உள்ளது.

-பின்னலூரான்.

 

—-

 

ரசவாதி சிறுகதைகள், ரசவாதி, தென்றல் நிலையம், 12 பி, மேல சன்னதி, சிதம்பரம் 608 001, பக். 224, விலை 100ரூ.

கடந்த 1928ம் ஆண்டு பிறந்து, 66 வயது வரையில் வாழ்ந்த ரசவாதி, பல சிறந்த சிறுகதைகளை தமிழாக்கித் தந்திருக்கிறார். 1949ல் அவருக்கு திருமணம் நடைபெற்ற போதே நாடறிந்த புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார்.

அமுதசுரபி நாவல் போட்டியில் அழகின் யாத்திரை என்ற நாவலுக்கு பரிசு பெற்றார். கலைமகள் நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டியில் ஆதார ஸ்ருதி என்ற நாவலுக்கு பரிசு பெற்றது இவரைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்த மிகச் சிறந்த இலக்கியவாதியின், 22 சிறுகதைகள் அடங்கிய தொகுதி இது.

அரங்கேற்றம் என்ற சிறுகதை, இந்த தொகுதியில் உள்ள கதைகளில் மிகச் சிறந்த கதை ஆகும். இலக்கியப் பொக்கிஷம்.

-எஸ். குரு.

டிநன்றி; தினமலர், 22/12/13.

காலம்

$
0
0

காலம் சிறுகதைகள், தேவ விரதன், வசந்தா பிரசுரம், பக். 192, விலை 120ரூ.

பிரபல வார இதழ்களில் வெளியான, பரிசும், பாராட்டுக்களும் பெற்ற ஆசிரியரின் 28 சிறுகதைகளின் தொகுப்பு. தினமலர் வாரமலரில் இவர் எழுதிப் பிரசுரமாகிய கதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்த நூலின் மற்றொரு சிறப்பு, சிறுகதைக்கு ஆரம்ப வரிகள் கிமவும் முக்கியம் என அன்பர்கள் சொல்வதுண்டு. இந்த தொகுப்பில் உள்ள எல்லா கதைகளின் கடைசி நான்கு வரிகளும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதைக் கவனித்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நல்ல சிறுகதைகளின் தொகுப்பு.

-ஜனகன்.

 

—-

 

முதுமையே வா வா வா, பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராசன், விகடன் பிரசுரம், பக். 328, விலை 130ரூ.

தடுக்க முடியாதது முதுமையின் வரவு. முதுமையின்போதுதான் பலரும், பலவித நோய்களுக்க உள்ளாகின்றனர். இந்நூல் முதுமைப் பருவத்தினர் சந்திக்கும் பல நோய்களுக்கும் காரணங்கள் கூறி, அதற்குரிய சிகிச்சைகளையும் கூறுகிறது.

56 தலைப்புகளில் நூலாசிரியர் தகுந்த மருத்துவம் குறித்த செய்திகளைக் கூறியுள்ளார். மருந்துகளைப் பயன்படுத்தும் முறைகளையும், தொற்று நோய்களையும், தொற்று சாரா நோய்களையும் விரதங்களின் நன்மைகளையும் பிராணாயாமத்தின் உயர்வையும், நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகளின் அவசியத்தையும் நோய்களுக்கு ஏற்ற வகையில் இவற்றைப் பயன்படுத்துவது பற்றியும் நூலாசிரியர் விளக்குவது அனைத்து வயதினருக்கும் பயன்படும்.

நூலின் இறுதிப்பகுதியில், இளைஞர்களைச் சிந்திக்க வைக்கும் கட்டுரையும், நீங்களும் நானும் என்ற கேள்வி பதில் பகுதியும் நூலிற்குப் பெருமை சேர்க்கின்றன.

-டாக்டர் கலியன் சம்பத்து.

நன்றி; தினமலர், 22/12/13.

மனம் மகிழுங்கள்

$
0
0

மனம் மகிழுங்கள், நூருத்தீன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600014, பக். 196, விலை 140ரூ.

மனம் மகிழ்ச்சியாக இருக்க, என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை எளிய இனிய நடையில் நூருத்தீன் சொல்கிறார். பொதுவாக மனிதனுக்கு இருவகையான மனோ வடிவமைப்புகள் உள்ளன. அவையே அவனது குணங்களின் அடிப்படை ஆகும்.

ஒன்று ஆக்கப்பூர்வமானது. மற்றொன்று எதிர்மறையானது. ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி உயர்வாகவே கருத வேண்டும். நல்லவற்றையே சிந்திக்க வேண்டும். தம் செயல்களை ஆக்கப்பூர்வமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். மனதில் மகிழ்ச்சி எட்டிப் பார்க்கும் என்கிறார் ஆசிரியர்.

சுய முன்னேற்ற நூல்.

-எஸ். குரு.

 

—-

 

காணாத காட்சி-சிறுகதைகள், மஜீதா மைந்தன், தாழையான் பதிப்பகம், 51, அண்ணாநகர், அப்துல் ரசாக் தெரு விரிவு, சைதாப்பேட்டை, சென்னை 15, பக். 142, விலை 70ரூ.

ஆசிரியரின் பத்தொன்பது சிறுகதைகளின் தொகுப்பு. எல்லாக் கதைகளும் இஸ்லாமிய சமூகப் பின்னணியுடன் கூடியவை.

-வி. பாலு.

 

—-

 

தகவல் பேழை, ச. செல்வ கீதா, சுவாதி பதிப்பகம், 1/188, சோமுகாளை இல்லம், நத்தம் மெயின் ரோடு, பாலாஜி நகர், மதுரை 625 014, பக். 103, விலை 60ரூ.

பண்பலை வானொலியில் தமிழகத்தின் தலைசிறந்த தொகுப்பாளர் என செல்வ கீதாவை 2011ம் ஆண்டு விருது வழங்கி ஆனந்தவிடகன் இதழ் கவுரவித்தள்ளது. மஞ்சள் மகிமை, மதுரா, விரல் நகம் தேடும் மருதாணி, சிதம்பரம் நடராஜர் கோவில் என்றெல்லாம் 102 தலைப்புகளில் மினி தகவல்கள். தகவல் பொக்கிஷம்.

-எஸ். குரு.

நன்றி; தினமலர், 22/12/13.

திரை

$
0
0

திரை, எஸ்.எல். பைரப்பா, விஜய பாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, பக். 470, விலை 250ரூ.

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான இந்நூலாசிரியரின் படைப்பு ஆவரணா இந்த நாவல் வெளியாகி 5 வருடத்திற்குள் 30 பதிப்புகளைப் பெற்று, கன்னட வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நாவல் மராட்டி, ஹிந்தி, சமஸ்கிருதத்திலும், தற்போது திரை என்ற பெயரில் தமிழிலும் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆவரணா என்பதற்கு திரை என்ற பொருளும் உண்டு. அதையே தமிழில் இந்நாவலுக்குத் தலைப்பாக வைத்துள்ளனர்.

இக்கதையின் நாயகனும், நாயகியும் சினிமா தொழில் சார்ந்தவர்கள். அறிவுஜீவிகள். நாயகன் அமீர் முஸ்லிம். நாயகி ரஸியா ஹிந்து. இருவருமே தங்கள் மதத்தின் மீது பற்று கொண்டவர்கள். காதல் வேட்கையில் லஷ்மி தனது தகப்பனாரின் எதிர்ப்பையும் மீறி ரஸியா என்று பெயர் மாற்றி, மதம் மாறி, அமீரை மணம் புரிகிறாள்.

அதற்குப் பின் அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் ஏற்படும் முரண்பாடுகள், மனக்கஷ்டங்கள் தத்ரூபமாக அலசப்படுகின்றன. குறிப்பாக இவரின் மதச் சடங்குகிளல் உள்ள நிறை குறைகள் இந்த இரு கதாபாத்திரங்களின் மூலமே விவாதிக்கப்படுகின்றன.

இவர்கள் இந்திய வரலாற்று ஆவணப் படம் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், இந்திய சரித்திரத்தை ஆய்வு செய்யும்போது, அதில் வரும் வரலாற்று பிழைகளும் இவர்களால் புள்ளி விவரங்களோடு விவாதிக்கப்படுகின்றன.

இந்த நாவல், மதம் மாறி மணம் புரிவதால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை மட்டுமின்றி,இந்திய சரித்திரத்தின் உண்மைகளை ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

-பரக்கத்.

நன்றி; துக்ளக், 18/12/13

 

—-

 

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள், கே.எஸ்.சுப்ரமணி, புதிய புத்தக உலகம், 52சி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 312, விலை ரூ.120.

அதிக ஆயுளுடன் வாழ, நம் உடலில் ஹோமோசிஸ்டைன் என்ற பொருளும், கார்டிஸோல் என்ற ஹார்மோனும் அளவுக்கு அதிகமாக சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு செரோட்டனின் என்ற பொருள் நம் உடலில் நன்கு சுரக்க வேண்டும் என்று மருத்துவ உலகம் கூறுகிறது.

அதை அடிப்படையாகக் கொண்டு இந்நூலாசிரியர், நீடித்த ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் பெற எத்தகைய உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார்.

300 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்நூலை ஆறு பகுதிகளாகப் பிரித்து, முதல் பகுதியில் என்ன வகையான உணவுகள் ஆயுளை அதிகரிக்கும் என்ற விவரங்களை சுமார் 13 கட்டுரைகளில் விளக்குகிறார்.

இரண்டாவது பகுதியில் இயற்கை உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவக் குணங்களையும் 3வது பகுதியில் பானங்களில் உள்ள மருத்துவக் குணங்களையும் 4வது பகுதியில் எப்போதும் இளமைத் துடிப்புடன் வாழ்வதற்கான வழிமுறைகளையும் 5வது பகுதியில் நம் உடலில் உள்ள நோய்களைக் குணமாக்கவும், 6ஆவது பகுதியில் நோய் வராமல் பாதுகாப்புடன் வாழ்வதற்கான ஆலோசனைகளையும் விளக்குகிறார்.

தவிர, உலகெங்கும் பிரசுரிக்கப்படும் மருத்துவ ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு வேண்டிய குறிப்புகளையும் இடையிடையே குறிப்பிட்டுள்ளது வாசகர்களுக்கு நல்ல பயனைத் தரவல்லது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 11/12/13.

உட்கவர் மனம்

$
0
0

உட்கவர் மனம், மரியா மாண்டிசோரி, தமிழாக்கம்-சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 446, விலை 250ரூ.

குழந்தை நம்மால் நிறைக்கப்பட வேண்டிய ஒரு காலிப் பாண்டம் அன்று. ஓர் அசைவற்ற பொருள் அன்று. அது எதையெதைச் செய்கிறதோ, அத்தனையும் நம்மாலே தான் என்றும் கருதக்கூடாது.

மனிதனை ஆக்குவது குழந்தையே (பக். 29) குழந்தையின் உள்ளத்தில் ஒரு சக்தி குடி கொண்டிருக்கிறது. இந்தச் சக்தியை மலரும்படி செய்வதே கல்வியின் பேருதவியாகும் (பக். 13) இவ்விதமாக குழந்தை ரகசியம் புதல்வருக்கான கல்வியை வழங்கிய இத்தாலி நாட்டவரான மாண்டிசோரி அம்மையார், பல நாட்டுக் குழந்தைகளுடன் நேரடியாகப் பழகி, அவர்களிடம் கண்ட சிறப்பு அம்சங்களை உளவியல் ரீதியாக அணுகி, அறிவியல் அடிப்படையில் அமைந்தக் கல்விக் கொள்கைகளை இந்நூல் படிப்படியாக விளக்குகிறது.

பிறப்பிலிருந்தே கற்பித்தல் என்ற கருத்தை உலகைத் திருத்தி அமைப்பதில் குழந்தையின் பங்கு எனத் தொடங்கி அன்பும் அதன் மூலமும் குழந்தை என 28 தலைப்புகளில் இந்நூல் விரிவடைந்துள்ளது. கல்வியாளர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் பண்படக்கூடிய உளவியல் ஆய்வு நூல் இது.

-பின்னலூரான்.

நன்றி; தினமலர், 1/12/13.

 

—-

 

துளித்துளியாய் பொது அறிவு, டி.எம்.சண்முகவடிவேல், அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல்தெரு, வடக்கு ஜெகநாதன் நகர், வில்லிவாக்கம், சென்னை 49, விலை 40ரூ.

மாணவ மாணவிகளுக்குப் பெரிதும் உதவக்கூடிய பொது அறிவுத் தகவல்கள் கெண்ட புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.


சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 10

$
0
0

சைவ சமயக் கலைக் களஞ்சியம், தொகுதி 10, தோரணவாயில், தலைமைப் பதிப்பாசிரியர்-முனைவர் ஆர்.செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனித வள மேம்பாடு அறக்கட்டளை, 10 தொகுதிகள், 7200 வண்ணப்பக்கங்கள், விலை – 10 தொகுதிகளும் ரூ. 15,000.

சைவ சமயக் கலைக் களஞ்சியம் 10 தொகுதிகளையும் 7200 பல வண்ணப் பக்கங்களையும் 3300 படங்களையும், 1700 பெட்டிச் செய்திகளையும், 22 ஆயிரம் தலைமைப் பதிவுகளையும், 51 ஆயிரம் துணைப் பதிவுகளையும் கொண்ட உலகளாவிய சைவ சமயத்தின் 5 ஆயிரம் ஆண்டுக்கால வரலாற்று ஆவணப் பெட்டகம்.

கலைக் களஞ்சிய்ததின் முதல், 9 தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள அனைத்துச் செய்திகளையும், தொகுதி எண் மற்றும் பக்க எண்களுடன், எளிதில் கண்டறிய உதவும் கைவிளக்கு தோரண வாயில்.

தொகுதி எண் ரோமன் வடிவத்திலும், பக்க எண் வழக்கில் உள்ள எண்களின் வடிவத்திலும் தரப்பெற்றுள்ள, அகர வரிசையில் அமைந்த, 51 ஆயிரம் பதிவுகளும், இத்தொகுப்பில் 434 பக்கங்களில் துல்லியமாகப் பதிவு செய்யப் பெற்றுள்ளன.

உதாரணமாக குமரகுருபரர் என்ற பதிவு இத்தொகுப்பு1-187, 271, iv-55, 6vi36, vii-269, viii-119,ix-447 என 6 தொகுதிகளில் வேறு வேறு காரணங்களுக்காக, இடம் பெறச் செய்யப் பெற்றமையை, எளிதில் கண்டறியத் துணை செய்கிறது. இத்தொகுதியை திருவாவடுதுறை ஆதீன, 24வது குருமகாசந்நிதானத்தின் அருளாசியுரை அணி செய்கிறது.

நீதியரசர் டாக்டர் ஏ.ஆர். லட்சுமணன் வாழ்த்துரை சைவ – சமயக் கலைக் களஞ்சிய முயற்சியைத் துல்லியமாக, மதிப்பிட்டு உரைக்கிறது. பதிப்பாசிரியரின் துணைவியார் சந்திரா செல்வக்கணபதி கலைக்களஞ்சிய உருவாக்கத்தின் பின்புலமாக நின்றதையும், மற்றும் உருவாக்கத்தில் உதவிய நன்னெஞ்சினரை எல்லாம், நினைவு கூர்ந்து பாராட்டி நிறைகிறது.

கலைக்களஞ்சியத்தை வாழ்த்திய அருளாளர்களும், ஆதீனங்களும் வழங்கியுள்ள ஆசியுரைகள், தோரண வாயிலுக்குப் பெருமை சேர்க்கின்றன. இன்று தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும், ஏறத்தாழ அறுபது சைவத்தமிழ் அறிஞர்கள் வழங்கியுள்ள வாழ்த்துரைகள், அகர வரிசையில் பதிவாகியுள்ளது சிறப்பாகும்.

சைவ சமயக் கலைக் களஞ்சியத்திற்கு இணையான, பல வண்ணத்தில் அமைந்த, மேலைநாட்டு நூல் கட்டமைப்பைக் கொண்ட பிரமாண்டமான நூல் தொகுதிகள் ஏதும், இதுவரையில் தமிழில் வெளிவரவில்லை என்று, அறிஞர் உலகம் போற்றும் பெருமை மிக்க இம்முயற்சியைத் தமிழ்ச் சைவ உலகம் ஏற்றுப் போற்றும் என்பது நிச்சயம்.

-திருமதி. அல்லியங்கோரை சபாநாயகம்.

நன்றி; தினமலர், 1/12/13.

சைவ சமயக் கலைக் களஞ்சியம்

சோழர் கால ஆடற்கலை

$
0
0

சோழர் கால ஆடற்கலை, ஆர். கலைக்கோவன், சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, பக். 288, விலை 225ரூ.

ஆசிரியர் இலக்கியச் செல்வர் டாக்டர் மா.ராசமாணிக்கனாரின் புதல்வர். சிராப் பள்ளியில் கண் மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ்பால் உற்ற காதலால் முதுகலைத் தமிழ் பயின்று, முனைவர் பட்டம் பெற்றவர். வரலாற்றிலும் முதுகலை நிறைவு.

ஆடற்கல்வி கலைஞர்களும் கருவிகளும் அரங்கம் ஆடற்கலைஞர்களும், அவர் தம் வாழ்க்கையும் போன்ற தலைப்புகளில் சோழர் கால ஆடற்கலையைப் பவு செய்து இருக்கிறார்.

ராஜ ராஜீசுவரம், கங்கைகொண்ட சோழீசுவரம், திருத்தொண்டீசுவரம், மதுரகாளியம்மன் கோவில் போன்ற இடங்களில் காணப்படும் சிலைகளை, ஆழ்ந்து ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். பல அருமையான புகைப்படங்களும், நூலை அணி செய்கின்றன. வரலாற்று ஆய்வு இலக்கிய நூல்.

-எஸ். குரு.

நன்றி: தினமலர், 1/12/13.

 

—-

 

தமிழக்குத் தொண்டு செய்த பிறநாட்டு அறிஞர்கள், தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தி.நகர், சென்னை 17.

சமயப் பணி ஆற்ற தமிழ்நாட்டுக்கு வந்த வெளிநாட்டு சான்றோர்கள் பலர், தமிழ் மொழியின் சிறப்பைக் கண்டறிந்து, தமிழை முழுமையாகக் கற்று, தமிழ்ப்பணி ஆற்றினார்கள்.

இங்கிலாந்ததைச் சேர்ந்த போப், திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். நான் மறைந்தபின் என் கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என்று குறிப்பிட வேண்டும் என்று உயில் எழுதினார். (அவர் விரும்பியபடியே லண்டனில் உள்ள அவர் கல்லறையில் தமிழ் மாணவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.)

போப், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன் பால்கு உள்பட 38 பேர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கொண்ட புத்தகம் இது. தமிழறிஞர் பி. இராமநாதன், ரத்தினச் சுருக்கமாக இந்த வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியுள்ளார்.

புத்தகத்தின் விலை 40ரூ. இதே நூலாசிரியர் எழுதிய பன்னாட்டு அறிஞர்களின் பார்வையில் தமிழும் தமிழரும் என்ற நூலையும் தமிழ் மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை 50ரூ.

தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் இவை.

நன்றி: தினத்தந்தி, 4/12/13

குற்றாலக் குறிஞ்சி

$
0
0

குற்றாலக் குறிஞ்சி, பூம்புகார் பதிப்பகம், 127/63 பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 275ரூ.

சாகித்ய அகாதமி விருது பெற்ற ஓர் அபூர்வ இசையிலக்கியப் புதினம். அபூர்வமாகக் காணப்படும் குறிஞ்சியைப்போல, இந்நாவலும் தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

குறிஞ்சி என்ற ராகத்தின் பெயரையே தன் பெயராகக் கொண்டு, தாழ்ந்த குலத்தில் பிறந்துவிட்ட பெண். அவளின் சீலம், ஞானம், தமிழ்ப் பாட்டையே பாடுவேன் என்கிற வீரம், மக்களுக்காக மக்கள் மத்தியில் மட்டுமே பாடுவேன்.

சமஸ்தானங்களை, ஜமீன்களை, கலெக்டர்களை, வெள்ளைக்காரத் துரைகளை மதியேன். அவர்களுக்காகப் பாடேன் என்ற தியாகம் இவையே குறிஞ்சியின் ஆரோகணம், அவரோகணம், ஆலாபனை எல்லாம். இதில் வரும் ஞானசுந்தரம், ராஜகாந்தி, முத்துசாமி தீட்சிதர், ஆனைய்யா, நெல்சன் துரை, அபிராமபட்டர், தியாகய்யர், கோபாலகிருஷ்ண பாரதியார், சரபோஜி மன்னர் எல்லாம் பிசிரில்லாத பக்க வாத்திய பாத்திரங்கள்.

நாவலின் ஒவ்வொர் அத்தியாயமும் ஓர் ராகத்தின் பெயரால் அமைந்திருக்கிறது. தாள லயம் பிறழாத சுருதி பிசகாத சுத்தமான சங்கீத நாவலாக படைத்து முத்திரை பதித்திருக்கிறார், இலக்கிய சாம்ராட் கோவி. மணிசேகரன்.

 

—-

 

நறுமணப் பொருட்களின் மருத்துவப் பயன்கள், டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை 4, விலை 100ரூ.

உணவே மருந்து என்ற உண்மையை உரைக்கும் நூல். நம் நாட்டில் கிடைக்கும் மூலிகைகளின் தன்மைகளையும், பயன்களையும் அலசி ஆராய்ந்த உடல் ஆரோக்கியத்திற்கு வழிகாட்டுகிறது இந்நூல்.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.

காற்றோடு சில கனவுகள்

$
0
0

காற்றோடு சில கனவுகள், டாக்டர் ஷியாமளா, டி.எஸ். புத்தக மாளிகை, 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 100ரூ.

23 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு கதையும் யதார்த்த வாழ்க்கையை வைத்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் குடும்ப பெண்ணை சுற்றியே மற்ற பாத்திரங்கள் வலம் வருகின்றன. பொருத்தமான வார்த்தைகள், எடுத்துக்காட்டுகள், வர்ணணைகள் சிறப்பு.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.

 

—-

 

ஜஸ்டிஸ் ஜெகதீசன், ராணிமைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 208, விலை 200ரூ.

சிலரின் வாழ்க்கை வரலாறு, பலருக்கு நல்வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் இந்நூலின் நாயகர் நீதிபதி எஸ். ஜெகதீசனின் வாழ்க்கை வரலாறு, இன்றுள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டம் பயில்வோர் மற்றும் நீதி, நேர்மையுடன் வாழ நினைப்போர் எனப் பலவித நிலையில் உள்ளோர்க்கு, ஒரு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது.

ஆசிரியர்கள், குறிப்பாக, தலைமையாசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், எங்ஙனம் திகழ வேண்டும் என்றும், வழக்கறிஞர்கள் எப்படித் தங்களுக்குள் ஒழுக்கத்தையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்நூல் மிக நயமாக எடுத்துரைக்கிறது.

வீட்டின் சொந்தக்காரருக்கும், குடித்தனக்காரருக்கும் ஏற்பட்ட வழக்கில், நீதிபதி ஜெகதீசன் அளித்த தீர்ப்பைப் படிக்கும்போது, வழக்கறிஞர்கள் சிலரின் தவறான செயல்களையும், நீதிபதியின் மனசாட்சிப்படியான நேர்மையையும் அறிகிறோம்.

நடைபாதை ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிபதியின் கருத்துக்களும், செங்கல்வராயன் அறக்கட்டளை வழக்கில் அவரின் கண்டிப்பும், எத்திராஜ் மகளிர் கல்லூரித் தலைவராக இருந்து ஆற்றிய தொண்டும், படிக்கப் படிக்கச் சுவையாக உள்ளன.

நீதிபதி எஸ். நடராஜன், தம் அணிந்துரையில் இந்நூல் ஜஸ்டிஸ் ஜெகதீசனுக்கு புகழ் சேர்ப்பதற்கு அல்ல. ஆனால் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன் தரும் நூல் என்று கூறுவது முற்றிலும் சரியே.

பழகு தமிழில் பிழையில்லாமல் படிக்கச் சுவையாக எழுதியுள்ள நூலாசிரியரின் பணி போற்றுதலுக்குரியது.

-டாக்டர் கலியன் சம்பத்து.

நன்றி: தினமலர், 1/12/13.

ஏற்றம் தரும் மாற்றம்

$
0
0

ஏற்றம் தரும் மாற்றம், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை ரூ.170.

படிப்பறிவு இல்லாவிட்டாலும் பட்டறிவும், விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் வெற்றி பெற முடியும் என்பதை உணர்த்தும் நூல். எளிய முறையில் மதிப்புக் கூட்டுதல் தொழில் மூலம் வெற்றி பெற்ற பலரது அனுபவங்களை தொகுத்தளிக்கிறார் வீ. அரிதாசன்.

நன்றி: தினத்தந்தி, 4/12/13.

 

—-

 

அவ்வையார் அருளிய நல்வழி (வாழ்வியலுரையும் தத்துவார்த்தமும்), கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, பக். 256, விலை ரூ.150.

பிற்காலத்தில் வாழ்ந்த அவ்வையாரின் பாடல்கள் எளிமையானவை. நீதிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை, சமய நோக்குடையவை. வாழ்வியலுக்கான வழிகாட்டியாகவும் விளங்குபவை.

அவர் இயற்றிய நல்வழி என்னும் நூலை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ.சி.ரகுநாதையரின் தத்துவ விளக்கத்துடன் கூடிய உரையுடன், தம் வாழ்வியல் உரையும் இணைத்து வெளியிட்டுள்ளார் முனைவர் நல்லூர் சா. சரவணன்.

நாற்பது வெண்பாக்களைக் கொண்டுள்ளது நல்வழி. இதற்கு ரகுநாதையர் எழுதியுள்ள உரை, அவதாரிகை, பதவுரை, இலக்கண முடிவு, அகல உரை, விசாரணையினாற் கண்ட தத்துவ விளக்கவுரை, செய்யுட்களின் பேறு என்ற வரிசையில் அமைந்துள்ளது சரவணன் எழுதியுள்ள வாழ்வியலுரை, ஒவ்வொரு வெண்பாவின் கீழும் இடம் பெற்றுள்ளது.

நூலில் பெயர்வைப்பை ஒவ்வொரு பாடலுக்கும் பொருந்தக் கூறி இது இன்ன வகையில், நல்வழி ஆயிற்று என்று இறுதியாக உரைத்திருப்பது எண்ணுதற்குரியது. சாதி இரண்டொழிய வேறில்லை என்ற பாடலை விளக்கும்போது, இச்செய்யுள் நிஷ்காமியத் தவம் செய்வாரை, இன்ப நிலை பெறுதற்கு ஏற்ற கிளர்ச்சி உண்டாகுமாறு உயர்ந்தோர் என, உண்மையைக் கூறுதல் ஆயினும், அங்ஙனம் செய்தாரையும் அதில் தூண்டுமாறு, இடாதார் இழிகுலத்தோர் எனக் கடிந்து கூறுதலானும், நல்வழி ஆயிற்று தத்துவ வார்ப்பில் இவ்வாறு பொருள் கண்டிப்பது, ரகுநாதையரின் ஆழ்ந்த புலமையைக் காட்டும்.

வாழ்வியலின் தத்துவ உண்மை நெறிகளை நல்ல குடிப் பிறந்தார் இடும்பை கூர் வயிறு ஆவாரே யாரே யழிப்பார் இச்சை பல சொல்லி இடுதுதண்கை முதலிய தொடர்களுக்குக் கூறும் விளக்கங்கள் அருமையானவை. பதிப்பாசிரியரின் வாழ்வியல் உரை எளிமையாய் உள்ளன.

-இராம. குருநாதன்.

நன்றி: தினமலர், 1/12/13.

Viewing all 3876 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>