தொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம், மூதறிஞர் தமிழண்ணல், தமிழ்ப் பேராயம், ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர் 603203, பக். 80, விலை 45ரூ.
தொல்காப்பியம் தமிழின் தொன்மையான நூல், தமிழின் பண்பட்ட இலக்கணச் செறிவைக் காட்டுவதோடு, தமிழர் வாழ்வியல் பற்றியும் விளக்குவது இது. எழுத்திற்கும், சொல்லிற்கும் எல்லா மொழிகளிலும்இலக்கணம் உண்டு.
அகம்,புறம் என வாழ்வுக்கும் இலக்கணம் வகுக்கும் நூல் தொல்காப்பியம். மூதறிஞர் தமிழண்ணல் புலமையருள் புலமையர் தொல்காப்யித்தை முழுதுணர்ந்து கற்று உரை கண்ட அறிஞர். தொல்காப்பியத்துள் தலைவன் தலைவியர் இலக்கணம் வகுத்துள்ளபாங்கில், இருவர்க்கு இடையிலான பொருத்தங்கள் பேசப்பட்டுள்ளன.
பிறப்பு, ஒழுக்கம், ஆள்வினை, அகவை, அழகு, அன்பு, அடக்கம், அருள், அறிவு, செல்வம் என்னும் பத்தும் தலைவன், தலைவியரிடையே அமைய வேண்டிய ஒப்புமைகள். இவற்றுள் அகவை என்னும் வயது இருவருக்கும் சமமாய் இருத்தல் எனப் பொருள் கொள்ளலாகாது.
பன்னிரண்டு, பதினாறு (பெண், ஆண்) என்னும் தன்மையே ஆகும். பொருத்தங்கள் பற்றி மட்டும் பேசாது, தமிழர் காதல் வாழ்வின் மேன்மை பற்றியும், தமிழர் திருமண முறை பற்றியும் தெளிவாக, நுட்பமாக ஆராய்கிறது இந்நூல். தமிழுணர்வாளர் யாவரும் படித்தறிந்து மகிழத்தக்க நல்ல நூல் இது.
-கவிக்கோ ஞானச் செல்வன்.
நன்றி: தினமலர், 1/12/13.
—-
இந்திய ஆங்கில இலக்கிய வரலாறு, எம்.கே. நாயக், தமிழாக்கம்-வெ.அயோத்தி, கு.குணசேகரன், சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 260ரூ.
இந்தியாவில் பிறந்தவர்கள், ஆங்கில மொழியில் எழுதிய கவிதை, கதை, வாழ்க்கை வரலாறு போன்ற இலக்கியங்களின் தொடக்கம் முதல் தற்போது வரையிலான வரலாற்றை விளக்குகிறது இந்த நூல். இந்திய ஆங்கில இலக்கியத்தில் மகாத்மா காந்தி, நேரு, அரவிந்தர், சரோஜினி நாயுடு, பக்கிம் சந்திர சட்டர்ஜி உள்பட பலரின் பங்களிப்பை இதில் காணமுடிகிறது.
18ம் நூற்றாண்டின் இறுதி முதல் தற்போது வரை உருவான இந்திய ஆங்கில இலக்கியங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன என்பது விரிவாக அலசப்பட்டுள்ளது. மாணவர்களுக்கும் இந்திய ஆங்கில இலக்கிய வரலாறு பற்றி ஆய்வு நடத்துபவர்களுக்கும் இந்த நூல் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 4/12/13.