Quantcast
Channel: Dial for Books
Viewing all 3876 articles
Browse latest View live

கற்றாழை

$
0
0

கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 438, விலை 335ரூ.

மதுப்பழக்கத்தினால் வாழ்க்கை சீரழிந்த ஒரு பெண், தன்னுடைய மகளுக்கும் அதுபோன்ற வாழ்க்கை அமைந்துவிடக்கூடாது என்று போராடுவதே இந்நாவல்.

படிக்க விரும்பியும் படிக்க இயலாமல் போன ஒரு பெண்ணின் ஆதங்கத்தையும், இளம் பருவத்தில் அவளுக்கு நேர்ந்த கொடுமைகளையும் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதன் மூலம் பெண் சுதந்திரத்திற்கான போராட்டங்களுக்குதோள் கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர்.

எந்தவிதமான வறட்சியிலும் துவண்டு போகாமல் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வாழும் கற்றாழை போன்றதுதான் பெண்களின் நிலை. நாவலில் வரும் மணிமேகலை ‘கற்றாழை’ போன்றவள் என்கிறார் நாவலாசிரியர்.

தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணோடு சென்றுவிட்ட கணவனைப் புறக்கணித்து விட்டு வேறோர் ஆணுடன் வாழச் சென்றுவிட்ட செகதாம்பாளை அவளுடைய உறவினர்கள் புறக்கணிக்கிறார்கள். ஆனால் அதே நிலையை உடைய கண்ணகி ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போராடுகிறாள்.

பெண்ணின் அவலநிலை, போராடும் தன்மை என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது இந்த நாவல்.

நன்றி: தினமணி, 23/3/2015.


அம்ருதா

$
0
0

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 448, விலை 335ரூ.

கங்கை கொண்ட ராஜேந்திர சோழ சக்கரவர்த்தியின் மகளான அம்மங்கையின் வயிற்றில் பிறந்தவர் அபயன். தெலுங்கு ராஜாவான அபயன் சோழ தேசத்து ஆட்சியை எப்படிப் பிடித்தார், பரந்து விரிந்த சோழ தேசத்தை எப்படி ஆட்சி செய்தார் என்பதே கதைக்களம்.

சோழர்கள் காலத்தில் உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்படவும், நிலையான ஆட்சிக்கும் பயன்பட்டு வந்த திருமணம், எப்படி சோழர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக மாற்றியது, பெண்கள் அரசியலில் எவ்வாறெல்லாம் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர் என்பதை விளக்கும் வண்ணம் கதை அமைந்துள்ளது.

சாதிப் பிரிவினையைத் தூண்டிவிட்டு இடங்கையினர், வலங்கையினர் எனப் பிரித்து மக்களிடம் பகைமையை ஏற்படுத்தியது போன்றவை அரசியல் செய்வோருக்கு எவ்வாறெல்லாம் உதவியது என்பதைத் தெளிவுபடுத்தியது.

வரலாற்று ஆதாரப் பின்புலமும், நூலாசிரியரின் கற்பனையும் இந்நாவலின் கதையை அழகுறச் செய்துள்ளது.

நன்றி: தினமணி, 23/3/2015.

மது விழிப்புணர்வுக் கல்வி

$
0
0

மது விழிப்புணர்வுக் கல்வி, கோ. பெரியண்ணன், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், சென்னை, பக். 160, விலை 100ரூ.

மது விற்பனை இலக்கு, மதுவினால் ஏற்படும் விபத்துகள், மதுப்பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள், நிதானம் இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் – மற்றவரைக் கொன்றவர்கள், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அசிங்கப்படும் இன்றைய இளம்தலைமுறையினர், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் பற்றிய செய்திகள் போன்றவற்றையெல்லாம் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.

மது உருவான வரலாறு, புராணங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் காணக்கிடைக்கும் குடிப்பழக்கத்தின் கொடுமைகள் பற்றிய குறிப்புகள், நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த முனைந்த விவரங்கள், மதுவுக்கு எதிராகப் போராடிய சான்றோர் பற்றிய விவரங்கள் நூலுக்கு வலு சேர்க்கின்றன.

குடிப்பழக்கத்திலிருந்து குடி நோயாளிகளை திருத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முயலும் தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள், குடிநோய் மீட்பு மையங்களின் விவரங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளதன் மூலம் குடி நோயாளிகளுக்கு வழிகாட்டியிருக்கிறது இந்நூல்.

இன்றைய சூழலில் மது பற்றிய விழிப்புணர்வும் முயற்சியாக நூல் அமைந்திருக்கிறது. பாராட்டுகள்.

நன்றி: தினமணி, 23/3/2015.

ஞாயிறு போற்றுதும்

$
0
0

ஞாயிறு போற்றுதும், எ.வேலாயுதன், முருகம்மை இல்லம், புதுக்கோட்டை, பக். 72, விலை 25ரூ.

உலக இருளைப் போக்கி ஒளி வழங்கி, உயிர்களை உய்விக்கும் சூரியனை, சூரிய வழிபாடு என்ற பெயரில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தொன்றுதொட்டு வணங்கி வருகின்றனர்.

பகைவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும், போரில் வெற்றிபெறவும் பாராயணம் செய்ய வேண்டிய வடமொழி மந்திரப்பாடல் ‘ஆதித்த ஹிருதயம்’தான் என்று கூறுவர். இதை வான்மீகி தன் காப்பியத்தில் வழங்கியுள்ளார்.

இராமன் ஆதித்திய ஹ்ருதயம் படித்தே இராவனணைப் போரில் வென்று, சீதையை மீட்டான் என்கிறது வான்மீகி ராமாயணம். ஆண்டுக்கு ஒரு முறை சூரியனைப் போற்றும் விழாவைப் பொங்கல் விழாவாக மக்கள் பன்னெடுங் காலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

சூரிய வழிபாட்டுத் தொன்மையை தமிழ் இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. ‘சுடர்விட்டுளன் எங்கள் சோதி, மாதுக்கம் நீங்கலுறவீர் மனம்பற்றி வாழ்மின்’ என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு.

“இறைசுடர் சோதியை மிக்கு ஆராய்ந்து தெரிவதினும் அறிவுணர்வின் மனம் பற்றுதுலே மாதுக்கம் நீங்கலுறும் முறை என்று இறையுணர்வில் தமிழ் மக்களின் அறிவுணர்த் திறத்தையுணர்த்துகின்றது. இத்திறம் தமிழ் மக்களின் செஞ்சுடர் ஞாயிறு வழிபாட்டினுக்கும் பொருந்தும்” என்கிறார் நூலாசிரியர்.

ஞாயிற்றைப் போற்றும் பாயிரம், ஆதித்திய ஹிருதயச் செய்யுளும் தமிழாக்கமும், ஆதித்தனருள் வெண்பா, ஞாயிறும் இமனும், சங்கத் தமிழில் செங்கதிர்ச் செல்வன், இராமாயணம், சிலப்பதிகாரம், தொல்காப்பியம், நன்னூல், திருவாசகம், புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, பாரதியார் கவிதைகள், பொங்கல் வழிபாடு முதலியவற்றில் சூரியன் பெருமை எவ்வாறு பேசப்பட்டுள்ளன என்பதை விரிவாகவும் விளக்கமாகவும் ஆராய்ந்துள்ளது இச்சிறு நூல்.

நன்றி: தினமணி, 23/3/2015.

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

$
0
0

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 115ரூ.

என்னுடைய வாரிசு ஜவஹர்லால் என்று காந்தி சொன்னார். இரண்டு பேருக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் காந்தியச் சிந்தனைக்கு மாற்றாக நேரு நடக்க மாட்டார் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்கு இருந்தது.

அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியது மட்டுமல்ல, இந்தியாவை வடிவமைத்தவர் நேரு. இந்தியா தனது முதலாவது விடுதலை நாளைக் கொண்டாடியபோது, அதைச் செய்தியாக வெளியிட்ட பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று. ‘அடுத்த ஆண்டு இப்படி ஒரு நிகழ்ச்சி இந்தியாவில் நடக்காது’ என்று தலையங்கம் தீட்டியது.

இதனை மொழி, இனம், மதம் வேறுபாடு கொண்டதாக ஒரு நாடு தொடர்ந்து நீடிக்க முடியாது என்பது அவர்களது எண்ணம். அதைத் துடைத்து முதல் 18 ஆண்டுகள் இந்தியாவைக் காப்பாற்றிய பெரும் பெருமை நேருவையை சேரும்.

அந்த வரலாற்றைத் திரட்டிக் கொடுத்துள்ளார் ரமணன். இன்றைய காங்கிரஸ் கறைகளுடன் நேருவையும் பார்க்க நேர்ந்த அரசியல் சூழ்நிலையில் இந்தப் புத்தகத்தின் தேவை கூடுகிறது. “வாழும் காலத்தில் மிகையாகத் துதிக்கப்பட்ட நேருவின் சாதனைகள் அவரது மரணத்துக்குப் பின் காலப்போக்கில் குறைவாக மதிப்பீடு செய்யப்படுகிறது” என்று மிகச் சரியாகவே மதிப்பீடு செய்துள்ளார்.

மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்துக் கொடுத்து, அத்தனை மாநிலங்களையும் இந்தியப் பற்று மூலமாகப் பிரித்து வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர் நேரு. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் எழுந்தபோது, இந்தி திணிக்கப்பட்டாது என்று வாக்குறுதி கொடுத்தவர் நேரு. இந்து நம்பிக்கைகளுக்கு விரோதம் இல்லாமல், அதனை சீர்திருத்தும் வகையில் சட்டங்கள் உருவாக்க அடித்தளம் இட்டவர் நேரு.

பாசிஸம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகிய மூன்றையும் கடுமையாக எதிர்ப்பதை தன்னுடைய லட்சியமாக நேரு கொண்டிருந்தார். அதையே இந்திய அரசின் கொள்கையாகவும் வடிமைத்தார். இதன் தொடர்ச்சியாக ஜனநாயக சோஷலிசம் என்பதை தன்னுடைய அரசின் லட்சியமாக அறிவித்தார்.

அரசுத் துறையை அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அமைப்பாக மாற்றி, கம்யூனிஸ ஆட்சியையே வேறொரு கோணத்தில் அமைக்க நேரு முயற்சித்தார். அதற்கு அவரது அமைச்சரவை சகாக்களே முறையாக ஒத்துழைக்கவில்லை. ஆனால் ‘அதிகார அரசியல்’ நேருவின் ஆட்சியிலும் தலைதூக்கியது.

இந்திராவின் கணவர் ஃபெரோஸ் கிளப்பிய புகார்கள், நேருவுக்கு கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றிக் கொள்வதை முழுச்சிந்தனையாக மாற்றியது. ஆனாலும் தனது பரந்துபட்ட லட்சியத்தை நேரு இழக்கவில்லை என்பதற்கு உதாரணம் அவரது பஞ்சசீலக் கொள்கை இந்தியாவை உலக அரங்கில் கவனிக்க வைத்த கொள்கை அது.

இது வரலாறுகள் அனைத்தையும் விமர்சனப் பார்வையுடன் இந்தப் புத்தகம் பேசுகிறது. ‘நேரு முழுவதும் நிறைவேறாத அழகிய கனவு’ என்று நேரு மறைந்தபோது வாஜ்பாய் எழுதிய வரிகளை ரமணன் நினைவுபடுத்தியிருக்கிறார். அந்த அழகிய கனவு ஏக்கம் கொடுப்பதாகவே இன்றுவரை இருக்கிறது.

-புத்தகன்.

நன்றி: ஜுனியர் விகடன், 25/3/2015.

சக்கர வியூகம்

$
0
0

சக்கர வியூகம் (சிறுகதைகள்), ஐயப்பன் கிருஷ்ணன், அகநாழிகை பதிப்பகம், பக். 96, விலை 80ரூ.

இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணம் மகாபாரதம் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை உத்தி.

கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. இதிகாசக் கதையை மீட்டுருவாக்கம் செய்கையில் பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்பாந்தம், சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம், சறுக்கிவிடாமல் கத்தி மேல் நடப்பது போன்றதான இந்தச் சவாலை எந்தச் சாமர்த்தியங்களும் தேவைப்படாமல் மிக இயல்பாகத் தன் நேர்மையான எழுத்தினால் கடந்திருக்கிறார் ஐயப்பன் கிருஷ்ணன்.

இளம் பாண்டவர்களைத் தவறுதலாகக் கொன்றுவிட்ட அஸ்வத்தாமனிடம் ‘குரு வம்சத்தைக் காக்கக் கடைசியாக இருந்த சிறார்களையும் அழித்து விட்டாயே’ எனக் கதறியபடியே துரியோதனன் உயிரை விடுவது ஒரு உதாரணம்.

தலைப்புக் கதையான சக்கர வியூகத்தில் ஒரு வரிவரும். ‘அனைத்தையும் பார்த்துக்கொண்டு காலம் தன் வட்டத்திகிரியை மேலும் சுழற்றிக்கொண்டே இருக்கிறது’ என்று. அட! எத்தகைய மெய்யான வார்த்தைகள்.

இந்நூலில் மொத்தம் ஏழு கதைகள். தான் வாசித்த வியந்த இதிகாசங்களை, தான் வியந்து மதித்த கதாபாத்திரங்களை தன் எழுத்தின் மூலமாக வாசகருக்கக் கொண்டுசேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் அதையும் தாண்டி இவற்றை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் இந்த மாபெரும் காவியங்களை முழுமையாக அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட வேண்டுமென விரும்புகிறார். அவரின் இந்த இதிகாசக் கடமை நிச்சயம் நிறைவேறும்.

-சுப்ர. பாலன்.

நன்றி: கல்கி, 29/3/2015.

அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்

$
0
0

அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள், மௌலானா முகம்மத் ஃபாரூக் கான், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், பெரம்பூர், விலை 240ரூ.

கவிதை மாதிரி ஓர் அறநூல்

“மனிதர்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே. தவறிழைப்பவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் மீள்பவர்தான்.” இதற்கான விளக்கம் தவறிழைத்த பிறகு அதிலேயே உழன்று கிடைக்காமல் கணப்பொழுதுக்குள்ளாக செய்த தவறை உணர்ந்து, வருத்தப்பட்டு, மனம் நொந்து, வேதனையடைந்து, என்ன இப்படி ஆகிவிட்டதே என மனம் பதைத்து அந்தக் கணத்திலேயே இறைவன் பக்கம் திரும்புகிறவர்கள் மனிதர்களில் சிறந்தவர்களாவர் என்பதே.

‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்று ஒரு கேள்வியை ஓர் அடியார் நபிகளாரிடம் கேட்டதுண்டு. அதற்கு அண்ணலின் பதில் நறுக்குத் தெறித்தமாதிரி வந்தது. “தூய்மையான, உயர்ந்த சொல்லும் பசித்தவர்களுக்கு உணவளித்தலும்.” ஓர் அழகிய கவிதையை அனுபவிப்பதுபோல் இந்த நிகழ்வை அனுபவிக்கலாம்.

அனஸ் (ரலி) அறிவித்தது இது. “நாங்கள் அண்ணல் நபிகளாருடன் இருந்தோம். அப்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. அண்ணல் நபிகளார் (ஸல்) வெளியே வந்தார்கள். தம்முடைய மேலாடையைக் கழற்றினார்கள். மழைத்துளிகள் அண்ணல் நபிகளாரின் மீது விழுந்தன. இதனைப் பார்த்து நாங்கள் கேட்டோம்.

‘இறைத் தூதரே! நீங்கள் ஏன் இவ்வாறு நடந்துகொண்டீர்கள்?’ அண்ணல் விடையளித்தார்கள். ‘ஏனெனில் இவை புத்தம் புதிதாக நம்முடைய அதிபதியிடமிருந்து நேராக வந்து இறங்கியுள்ளன.’

புதுமழைத்துளிக்குத்தான் எவ்வளவு தெய்வீக கௌரவம் பாருங்கள்! இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு, சமூகவியல், ஒழுக்கவியல் போன்ற ஆறு தொகுதிகளில் நூற்றுக்கணக்கான நபிமொழிகளைக் ‘கலாமே நுபுவ்வத்’ என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறார் மௌலானா முஹப்பத் ஃபாரூக் கான். அவற்றுள் ஒன்றுதான் இப்போது ‘ஒழுக்கவியல் – முதல் தொகுதி’யாக மலர்ந்துள்ளது.

-சுப்ர. பாலன்.

நன்றி: கல்கி, 29/3/2015.

கருநாவு

$
0
0

கருநாவு, ஆழியாள், மாற்று வெளியீடு, சென்னை, விலை 60ரூ.

‘எங்கள் நாள் வரும்’ ஈழத் தமிழப் பெண் கவிஞர் ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘கருநாவு’. இரண்டாம் தொகுப்பு வெளிவந்து ஆறு ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.

கனவிலும் நனவிலும் சதா தன்னைப் பின்தொடர்ந்தவற்றுக்கு இந்தத் தொகுப்பின் வாயிலாக வரிவடிவம் கொடுத்திருப்பதாக ஆழியாள் குறிப்பிடுகிறார்.

ஆழியாள் மொழிபெயர்த்த ஆஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. வாழ்வு குறித்து இந்த உலகம் கட்டமைத்திருக்கும் பிம்பங்களைக் கேள்விக்குட்படுத்துகிறார் ஆழியாள்.

பிறப்பின் பொருள் என்ன? பொருளீட்டுவதும், பிள்ளை பெறுவதும், ஓய்வெடுப்பதும் மட்டும்தானா? அந்த வரை படத்தை மாற்றுவதற்கான வழிகளை நோக்கி மர்ம முறுவலுடன் நீள்கின்றன இவரது கவிதைகள்.

காற்றையும் வெளிச்சத்தையும் மழையையும் உட்புகாமல் அடைத்துவைக்கிற சதுர வடிவ வீடுகளைத் தவிர்த்து, வட்ட வடிவ வீட்டைக் கேட்கிறார் ஆழியாள். தன் தாய்நாட்டின் நிலையையும் தம் மக்களின் வலிமையையும் இவர் பதிவு செய்திருக்கிறார். ஆனால், இவரது பார்வையும் கோணமும் வேறு. மணிக்கூண்டு கோபுரத்துக்குக் கீழே வீசப்பட்ட செல்லம்மா பாட்டியும் இயக்கத்துக்குப் போனவர்களும், காணாமல் போனவர்களும் ஷெல் வெடிச் சத்தங்களினூடே முகம் காட்டிச் செல்கிறார்கள்.

முள்வேலிக் கம்பிகளுக்குப் பின்னால் கண்ணாமூச்சி ஆடும் குழந்தைகளை அத்தனை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியுமா என்று தெரியவில்லை. உதவி கேட்டு உயர்ந்த விரல்களை ஆறுதலாகக்கூடப் பற்றிக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்தவர்களை நிந்திக்கவில்லை. தங்களை முற்றிலும் கைவிடச் சொல்லிப் பேரானந்தப்படுகிறார், எங்கள் நாள் வரும் என்ற நம்பிக்கையுடன்.

-பிருந்தா.

நன்றி: தமிழ் இந்து, 21/3/2015.


வெற்றிப் படிக்கட்டு (பாகம்1, 2)

$
0
0

வெற்றிப் படிக்கட்டு (பாகம்1, 2), ஹெச். வசந்தகுமார், வெற்றி பவுண்டேஷன் மற்றும் வசந்த் அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-1.html

வசந்த் டிவி ஆசிரியர் வழங்கி வந்த, சுயமுன்னேற்றம் தொடர்பான சொற்பொழிவுகள், இரண்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. முதல் பாகத்தில், 50 கட்டுரைகள் இடம்பெற்றன. இரண்டாம் பாகத்தில் 76 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

சின்ன கோடு-பெரியகோடு தத்துவத்தைக் கூறி அதற்கு, வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால், அவன் மற்றவரை மறைக்காமல், அழிக்காமல் தன் நிலையை உயர்த்திக்கொள்ளும் சுய முன்னற்றத்தில் கவனம் செலுத்தி, மற்றவரை விட தன் நிலையை உயர்த்திக் காட்டுவதுதான் சிறப்பான சாதனை என்கிறார் (பக். 54).

தமிழக அரசின் கஜானா காலியாக இருந்த போது, மதுவிலக்கை அமல்படுத்தியதால்தான் பணச்சிக்கல் என பலர் கூறினர். ஆனால் அப்போதைய முதல்வர் ராஜாஜி ஒரு போதும் மதுவிலக்கை தளர்த்த ஒப்புக்கொள்ளவில்லை. நிதி நிர்வாகத்தை சீர் செய்ய, விற்பனை வரியை அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவிலேயே விற்பனை வரியை அமல்படுத்திய மாநிலம் தமிழகம்தான். ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெற்றுள்ள, கருத்தை விட்டு விலகாமல், நேர்த்தியாக ஓவியங்கள் வரைந்திருக்கிறார் ஓவியர் ஸ்யாம்.

– சி.கலாதம்பி.

நன்றி: தினமலர், 22.3.2015.

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள்

$
0
0

பல நூற்றாண்டுகளாகப் புகழ்பெற்ற இசைப்பாடகர்கள், எஸ்.எஸ். பாரத்வாஜ், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 204, விலை 175ரூ.

ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் போன்ற சமயாச்சாரியார்களில் தொடங்கி, தேவார மூவர், மணிவாசகர், பன்னிரு ஆழ்வார்கள், தியாகராஜர் முதலான மும்மூர்த்திகள், தமிழிசை மூவர், தாயுமானவர், அருணகிரிநாதர், பட்டினத்தார், திருமூலர் போன்ற 43 அருளாளர்கள் பிறந்த காலம், அவர்களின் தீவிரமான தெய்வ பக்தி, வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், சுருக்கமான வரலாறு, அவர்கள் இயற்றிய நூல்கள் போன்றவை இந்நூலில் சிறப்பாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றோடு நின்றுவிடாமல், அவர்கள் இயற்றிய பாடல்களிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பது மிகவும் சிறப்பு. பிரபலமான பாடல்கள் என்று பார்க்காமல் பொருள் பொதிந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருப்பதன் மூலம் நூலாசிரியர் பக்தி இலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்பது புலனாகிறது.

சங்கீதத்தில் ஸ்வரஜதி என்னும் பயிற்சி வடிவம் தோன்றுவதற்கு ஸ்யாமா சாஸ்திரிகளே காரணம். கம்பர் தனது இராமாயண நூலை அரங்கேற்றம் செய்த ஸ்ரீ ரங்கம் கோயில் மண்டபத்திலேயே அருணாசலக் கவிராயர் தன் இராமநாடகக் கீர்த்தனை நூலை அரங்கேற்றம் செய்தார் என்பன போன்ற பரவலாக அறியப்படாத செய்திகள் தரப்பட்டுள்ளன. இவ்வளவு சிறப்பான நூலில் படங்கள் இடம் பெறாதது ஒரு குறையே.

தமிழ் ஆர்வலர்கள், இசை ரசிகர்கள், இறை நம்பிக்கையாளர்கள் அனைவரையும் கவரும் நூல் இது.

நன்றி: தினமணி, 30/3/2015.

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும்

$
0
0

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் வாழ்வும் படைப்பும், சேவியர், தோழமை வெளியீடு, சென்னை, பக். 184, விலை 150ரூ.

மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தர் பிறந்ததிலிருந்து கல்வி கற்றது, நாடக உலகில் புகுந்தது, திரையுலகில் சாதித்தது என அவரது வரலாறு சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது.

பாலசந்தர் எடுத்த குறிபிடத்தக்க திருப்புமுனைத் திரைப்படங்கள், அவர் அறிமுகப்படுத்தி உயரத்துக்குச் சென்ற கமல்ஹாசன், ரஜினிகாந்த், நாசர், சரத்பாபு, சரிதா, விவேக் போன்ற நட்சத்திரங்கள், அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி சாதனைகள் புரிந்த வசந்த், சுரேஷ் கிருஷ்ணா, ஹரி, செல்வராகவன் ஆகியோரைப் பற்றிய செய்திகள் என பாலசந்தர் சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களும் நம்மை ஈர்க்கின்றன.

பாலசந்தர் அளித்த நேர்காணல்களும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. “கெட்டதை என் படங்கள் மூலமாக புகுத்திவிடக் கூடாது என்ற CONVICTION உடன் இருக்கிறேன். அந்த CONVICTIONதான் சமகாலப் பிரச்னைகளையும் என் படங்களில் வைப்பதற்கான ஊக்கத்தையும் ஆர்வத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்று சொன்னதைப் போல அவர் தன் வாழ்வில் நடந்து காட்டியிருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

கே. பாலசந்தரைப் பற்றிய ஓர் அருமையான ஆவணம் இந்நூல்.

நன்றி: தினமணி, 30/3/2015.

திருவெம்பாவை திருப்பாவை உரையும் ஓவியங்களும்

$
0
0

திருவெம்பாவை திருப்பாவை உரையும் ஓவியங்களும், குமாரதேவர் பதிப்பகம், கோயம்புத்தூர், பக். 120, விலை 200ரூ.

சங்க இலக்கியத்தில், கன்னிப் பெண்கள் நீர்த்துறையில் நீராடி, நமக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டி இறைவனைக் குறித்து நோன்பு நோற்று வழிபாடு நடத்தியதை தை நீராடல், மார்கழி நீராடல், பாவை நோன்பு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளன.

இதை பரிபாடல் கலித்தொகை, ஐங்குறுநூறு முதலிய சங்க நூல்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. சங்ககாலம் தொட்டு இன்றுவரை இப்பாவை நோன்பு பலராலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாணிக்கவாசகரும் ஆண்டாள் நாச்சியாரும் அருளிச்செய்த திருவெம்பாவை, திருப்பாவை ஆகிய இரண்டும் மார்கழி மாதத்தில் கோயில்களிலும் இல்லங்களிலும் படிக்கப்பட்டு வருகின்றன.அதுமட்டுமல்ல, தாய்லாந்து நாட்டில் பதவியேற்பின்போது பாவைப் பாடல்கள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றனவாம்.

இவ்விரு பக்திப் பனுவல்களுக்கும் இதுவரை எத்தனையோ விளக்கவுரைகள் வெளிவந்திருந்தாலும், இந்நூலாசிரியர் ஓர் உரையாசிரியராக மட்டுமல்லாமல், அப்பாடல்களுக்குரிய தக்க ஓவியங்களைத் தம் கைப்பட வரைந்து பாடல்களுக்கு உயிரூட்டுய ஓவிய ஆசிரியராகவும் திகழ்கிறார்.

ஓவியர் கோபுலுவை மானசீகக் குருவாகக் கொண்ட இவர், அவர் இட்ட அன்புக் கட்டளைக்கு இணங்க வண்ண ஓவியங்களை வரைந்து இணைத்துள்ளதும், வழவழப்பான வண்ணத் தாள்களில் நூல் கட்டமைக்கப்பட்டுள்ளதும், ஒவ்வொரு பாடலுக்கும் எளிமையாக விளக்கவுரை எழுதியிருப்பதும், பொருள், உட்பொருள், குறிப்புப்பொருள் ஆகியவற்றைத் தந்திருப்பதும்தான் இந்நூலுக்குச் சிறப்பு சேர்க்கின்றன.

நன்றி: தினமணி, 30/3/2015.

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும்

$
0
0

விநாயகப் பெருமானின் மகிமையும் திருக்கோயில்களும், சாந்தா வரதராஜன், சாந்தா வரதராஜன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 250ரூ.

விநாயகர் அவதார மகிமை, பிள்ளையார் புராணம் பற்றிய தகவல்கள், விநாயகர் உருவம் உணர்த்தும் தத்துவம், தோப்புகரணம், தலையில் குட்டிக்கொள்ளலின் அர்த்தங்கள் ஆகியவை இந்நூலில் விவரமாகத் தரப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை, சதுர்த்தி விரதம் மற்றும் விநாயகர் விரதங்களின் பலன்கள், விநாயகர் விரும்பும் வன்னி இலை மற்றும் அறுகம்புல்லின் மகத்துவம், விநாயகரை அர்ச்சிக்க உதவும் இலைகளின் பெயர்கள், காணாபத்யம் எனப்படும் கணபதி வழிபாட்டில் செய்யப்படும் ஹோமங்கள், பூஜைகள், நித்ய பூஜை செய்வதன் பலன்கள், விநாயகரின் திருநாமங்கள் அதன் புராணத் தகவல்கள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன.

விநாயகப் பெருமானின் பிரசித்திபெற்ற 108 திருக்கோயில்கள், விநாயகரின் விநோதமான திருப்பெயர்கள், கண்திருஷ்டி கணபதி, இரட்டை பிள்ளையார் வழிபாட்டின் சிறப்புகள் எல்லாம் படிக்க படிக்க அதிசயிக்க வைக்கின்றன.

உச்சிப்பிள்ளையார், வாதாபி கணபதி, பிள்ளையார்பட்டி, வேலூர் சேண்பாக்கம், உப்பூர், ஸ்ரீ வில்லிப்புதூர் மற்றும் ஆந்திர மாநிலம் காசிப்பேட் ஆகிய தலங்களில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெருமைகள், தலங்களின் சிறப்புகள் தனித்தனியாகச் சொல்லப்பட்டிருப்பது அருமை.

நன்றி: தினமணி, 30/3/2015.

மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108

$
0
0

மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108, ந. சண்முகம், நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 208, விலை 100ரூ.

காந்தியடிகளின் வாழ்க்கை சம்பவங்களை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவும் நூல்.

கல்கி இதழில் இதுவரை மகாத்மா காந்தி தவிர, எந்த மனிதரது இறப்பின் புகைப்படமும் பிரசுரமாகவில்லை. கல்கியில் காந்தியின் மரணப்புகைப்படம் மட்டும் ஏன் அச்சிடப்பட்டது என்பதற்கான காரணம் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆவணச் செய்தி.

ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் புத்தகத்தைப் படித்தது, காந்தியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது, சென்னையில் காந்திஜியின் முதல் கூட்டம், முதன்முதலில் மகாத்மா என அழைக்கப்பட்ட நிகழ்வு, விடுதலைக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னரே தாழ்த்தப்பட்டவர்களுடன் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்து அதில் வெற்றி கண்ட காந்திஜியின் தீண்டாமை எதிர்ப்புச் சிந்தனை, காந்தியின் தமிழ்நாட்டுப் பயண விவரங்கள், உலகெங்கும் வெளிவந்திருக்கும் அவரது தபால் தலைகளைப் பற்றிய தகவல்கள், பல மொழிகளைப் பயன்படுத்திய அவரது கையெழுத்து மாதிரிகள் ஆகியவை நூலுக்கு மாலையாக அமைந்துள்ளன.

தினமணியில் பல சமயங்களில் வெளியான காந்தியடிகள் பற்றிய தகவல்களையும் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி, 30/3/2015.

ஏன் என்னைக் கொல்கிறீர்கள்

$
0
0

ஏன் என்னைக் கொல்கிறீர்கள், க. இராமசாமி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், பக். 72, விலை 60ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-197-9.html

கவிஞர் க. இராமசாமி இணையத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ஏன் என்னை கொல்கிறீர்கள்?.

நவீன வாழ்க்கை மனிதர்களை இடம் மாற்றிக்கொண்டே உள்ளது. குறிப்பாக கிராமங்களிலிருந்து பெரு நகரங்களுக்கு இப்படி நகரங்களின் இடுக்குகளில் வாழ நேர்ந்துவிட்ட மனிதர்களின் கனவுகள், ஆசைகள், தனிமையின் துயரங்கள், பால்ய கால நினைவுகள், பொய்யான சுகங்கள், காணாமல் போன முரட்டுத்தனமான அன்புகள், அன்பற்றவர்களின் துரோகங்கள், குரூரங்கள், மரணங்கள், வெறுமையான பொழுதுகள், வறுமையின் வடிவங்கள், தாம்பத்தியத்தின் இன்பமான கணங்கள், குழந்தைகள், போலிகள், கொடுமைகள், நட்புகள், தியாகங்கள் என அனைத்தையும் தன் கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

ஒரு வாசகன் படைப்பாளியாக மாற இணையம் பேரூதவியாக உள்ளது. அதை சரியான வகையில் பயன்படுத்தினால் நல் இலக்கியமும் பிறக்கும் என்பதற்கு க. இராமசாமி முன்னுதாரணமாக உள்ளார்.

நன்றி: புதிய தரிசனம், 1/6/2014.

 


எப்படியும் சொல்லலாம்

$
0
0

எப்படியும் சொல்லலாம், இரா. எட்வின், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 65ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-205-6.html

ஆசிரியராக பணியாற்றும் கவிஞர் இரா. எட்வினின் முதல் கவிதை தொகுப்பு ‘எப்படியும் சொல்லலாம்’.

மனைவியின் பெயரில் எழுதும் எழுத்தாளன், தன் கையில் காசில்லாத நிலையை குழந்தைகளிடம் அப்படி(யும்) சொல்லலாம் என யோசிக்கும் ஏழை, மனிதனை மலம் திண்ண வைத்த சாதிய கொடுமை, பாதுகாப்பின் பேரில் ராணுவம் மேற்கொள்ளும் வன்முறை, வட்டி வசூலிக்க வந்தவரிடம் அன்புடன் தாவும் குழந்தை, பள்ளிகளின் நன்கொடை வசூல் என இச்சமூகத்தில் நிலவும் கீழ்மைகளையும், சிதிலங்களையும் இரா. எட்வின் தன் கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

இத்தொகுப்பில் கவிதைகளில் அடியோடும் நகைச்சுவையும், சோகமும் நம்மை பதற வைக்கிறது.

என்ன தெரிந்து என்ன
வகுப்பறையில் பசங்க
எனக்கு
வைத்த பெயர் தெரியாமல்

கவிஞர் தன்னைத் தானே கேலி செய்து கொள்கிறார்.

இறந்த குழந்தையின்
உள்ளங்கையில்
ஆழமாய்
நீளமாய்
ஆயுள் ரேகை.

வாழ்வின் முரண் கொடுமையானது யாரை குறை சொல்ல…

காஷ்மீரில்
குச்சி பொறுக்கிய காகம்
கூடு கட்டும்
கராச்சியில்

காகத்தை யார் கட்டுப்படுத்த முடியும்.
இரா. எட்வினின் கவிதைகள் பல இதழ்களில் வெளிவந்துள்ளது.

-நிவில்.

நன்றி:  புதிய தரிசனம், 1/6/2014.

தொடக்கம் தெரியுமா

$
0
0

தொடக்கம் தெரியுமா, ஜி.எஸ்.எஸ்., விகடன் பிரசுரம், சென்னை, பக். 232, விலை 115ரூ.


To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-291-7.html

பல நிகழ்வுகளின் தொடக்கம் அருமையாகவும், ஆச்சரியமாகவும் கூட இருக்கும். நூலாசிரியர் 59 முக்கிய நிகழ்வுகளை எடுத்து அவற்றின் தொடக்கம் ஏன், எப்படி, எதற்கு என்ற விவரங்களோடு பதிவு செய்துள்ளார்.

குறிப்பாக, மெரீனாவின் முதல் சிலை, உழைப்பாளர் சிலை. அந்த சிலை வர காரணகர்த்தா சிங்காரவேலர், உருவாக்கிய சிற்பி ராய் சவுத்ரி என்ற விவரங்கள் (பக். 231-232), சினிமா ஸ்டுடியோவில் லேப் டெக்னீஷியனாகப் பணியை துவக்கிய இந்தி திரைப்பட பிரபல நடிகர், திலீப்குமாரின் திரையுலக பிரவேசம் (பக். 228), நம் ஜெமினி கணேசனை நினைவுபடுத்தியது.

முதன் முதலில் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் சிவந்த மண் (பக். 165), தஞ்சை பெரிய கோவில்தான் முதன்முதலில் கிரானைட் கற்கள் பயன்படுத்தி கட்டப்பட்ட கோவில் (பக்.151), நாடாளுமன்ற மேலவைக்கு நியமிக்கப்பட்ட முதல் திரையுலக பிரமுகர் எஸ்.எஸ்.வாசன் (பக். 137), எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண்மணி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜீன் கோதயே(பக். 62) உள்ளிட்ட பல சுவாரசியமான செய்திகளை பின்னணியோடு எளிய நடையில் ஆசிரியர் விவரித்துள்ளார்.

-ந.ஆவுடையப்பன்.

நன்றி: தினமலர், 29/3/2015.

எச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை)

$
0
0

எச்சரிக்கை (பற்பசை முதல் பால் வரை), செய்திக்குழு வெளியிடு, புதிய வாழ்வியல் பதிப்பகம், பக். 128, விலை 90ரூ.

இரண்டு நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் செரிக்க, இரண்டு நாட்கள் ஆகும். சிவப்பழகிற்காக தேய்க்கும் கிரீம்களால் என்னென்ன கேடுகள் வரும், மருதாணியின் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்ட மெகந்தியைக் கையில் பூசிக் கொள்வதால் வரக்கூடிய தோல் நோய்கள் என்ன?

எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் பிராய்லர் கோழி, தந்தூரி சிக்கன் வகையறாக்களால் குழந்தைகளும், பெரியோருக்கும் உண்டாகும் கேடுகள், வேதிப்பொருட்களில் கூட்டாக விஷத்தை விதைக்கும் பாக்கெட் பால்…

இப்படி அன்றாட வாழ்வில் நான் தினசரி உபயோகப்படுத்தும், சாப்பிடும், புழங்கிக்கொண்டிருப்பவற்றால் என்னென்ன வாழ்வியல் பிரச்னைகள் வரும் என, விரிவாக எச்சரித்திருக்கிறது இந்த நூல்.

மொத்தம் 22 விதமான பிரச்னைகளைச் சொல்லி அதிலிருந்து தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவற்றையும் பதிவு செய்திருப்பதில், இந்நூல் நம் கவனத்தை ஈர்க்கிறது.

தன் நலனில், பிள்ளைகள் நலனில், கணவர், குடும்பத்தார், சுற்றத்தாரின் உடல் நலனில் அக்கறை கொண்ட எவரும், அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

ஆயுள் முழுமைக்கும் கையில் வைத்திருந்தால், எந்த நோயையும் நெருங்க விடாமல் செய்ய முடியும்.

-ம. வான்மதி.

நன்றி: தினமலர், 29/3/2015.

பொதிகையில் பிறந்த செந்தமிழ்

$
0
0

பொதிகையில் பிறந்த செந்தமிழ், ஜி.ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 140, விலை 100ரூ.

பொதிகை மலைக்கு அந்த பெயர் வந்தது ஏன் எனும் கேள்வியை எழுப்பி நம்மை சிந்திக்க வைக்கிறார், நூலாசிரியர், பொதியப்பட்ட இடம் போல் தோற்றம் அளிப்பதால், அதை பொதிகை மலை என்று, கால்டுவெல் கூறுகிறார்.

பவுத்த இலக்கியங்களில் பொதிகை மலை, ‘போதல கிரி’ எனப்படுகிறது என்று குறிப்பிட்டு, பொதிகை மலைக்கும், பவுத்தத்திற்கும் உள்ள தொடர்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பொதிகை மலையில் தமிழ் பிறந்ததாகப் போற்றுகிறோம். அதன் அர்த்தம் என்ன? மலை, உயர்வின் அடையாளம். தமிழ் மொழியின் உயர்வை அடையாளப்படுத்துவதற்கு, பொதிகை மலை குறிக்கப்படுகிறது என்கிறார், நூலாசிரியர்.

‘பவுத்த மதம் தமிழ்நாட்டை விட்டு அகற்றப்பட்டு, பவுத்த நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட காலப் பகுதியில், அவலோகிதரைப் பொதிகை மலையோடு தொடர்புபடுத்தி பேசும் சான்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன எனலாம். காலப்போக்கில் அவலோகிதர் வீற்றிருந்த இடத்தில் அகத்தியருக்கு இடந்தரப்பட்டது’ (பக். 17).

– முகிலை ராசபாண்டியன்.

நன்றி: தினமலர், 29/3/2015.

பையர் பிவேர்

$
0
0

பையர் பிவேர், ஆர். குமார், சி. சீதாராமன் அண்டு கோ வெளியீடு, பக். 142, விலை 160ரூ.

சொத்து வாங்கவோருக்கான போதுமான அடிப்படை சட்ட நுணுக்கங்களையும் வழிமுறைகளையும் விளக்கும், வழிகாட்டுதல் நூல் இது. இதில், அசையா சொத்துகளை வாங்கும்போதும், விற்கும்போதும் கடைபிடிக்கப்படும் அனைத்து சட்ட நுணுக்கங்கள், நடைமுறை கோட்பாடுகள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன.

பட்டா, சிட்டா, அடங்கல், கிஸ்தி ரசீது, நிலம் எந்தப் பிரிவின் கீழ் வருகிறது போன்றவற்றின் அடிப்படை அறிவும், இந்த நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மூதாதையர் சொத்தில், பெண்களுக்குரிய சட்டப்பூர்வமான விதிமுறைகளையும், ஆசிரியர் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், ‘லேண்ட் ஷேர்’, அடுக்குமாடிகளில் மேல்தள உரிமை, பொது பகுதி பற்றிய விளக்கம், பவர் ஆப் அட்டர்னி’ ஆவணங்கள் பதிவு மற்றும் வெளிநாடுகளில் செயல்படுத்தப்பட்ட சட்ட முறைகள் பற்றியும் இந்த நூல் விவரிக்கிறது.

பட்டா, சிட்டா, அடங்கல், சொத்துக்கு உரிமை கோரல், ‘சேல் டீட், அடுக்குமாடி குடியிருப்பு உரிமைக்கான மாதிரி படிவங்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

நன்றி: தினமலர், 29/3/2015.

Viewing all 3876 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>