Quantcast
Channel: Dial for Books
Viewing all 3876 articles
Browse latest View live

இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும்

$
0
0

இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும், பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 368, விலை 200ரூ.

அருட்பிரகாச வள்ளலாரின் வரலாற்றையும், அவர் அருளிய திருஅருட்பாக்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் தாங்கிய விரிவான ஆய்வுப் புத்தகம் இது.

வள்ளலார் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்கள், அவரது சத்திய ஞான வாக்குகள், அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இராமலிங்கர் சென்னை, ஏழுகிணறு, வீராசாமிப்பிள்ளை தெருவில் பழைய கதவு எண் 39இல் வசித்தது முதல் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் உள்ள அறைக்குள் அமர்ந்து திருக்காப்பிட்டுக் கொண்டு, கதவை வெளிப்பக்கம் பூட்டிவிடுமாறு அணுக்கத் தொண்டர்களிடம் கட்டளையிட்டது வரை நம் மனக்கண் முன்னே இராமலிங்கரின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.

இராமலிங்கரின் திருவுருவம் கொண்ட பல அரிய புகைப்படங்கள், இராமலிங்கர் தங்கியிருந்த இடங்கள், அணுக்க சீடர்களுக்கு ஞானத்தலம் பயிற்றுவித்த மலைக் கோயில்கள், திருஅருட்பாவைக் காத்த ஆ. பாலகிருஷ்ணப் பிள்ளை, மாணிக்கவாசகர் அருளிய தமிழ்த் தாழினை உள்ளிட்ட தகவல்கள் புதியவை.

இராமலிங்கர் அன்றைய சமயவாதிகளின் எதிர்ப்புகளைச் சகித்து ஞான தவம் புரிந்த சூழலையும், துருஅருட்பாவின் ஆறு திருமுறைகளிலும் விரவிக் கிடக்கும் அரிய கருத்துக்களையும் நூலாசிரியர் புதிய கோணத்தில் அணுகி அழகுற வடித்துள்ளார்.

நன்றி: தினமணி, 30/12/2013.

 

—-

 

உடல் உண(ர்)வு மொழி, தே. சவுந்தரராஜன், விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் 1, விலை 80ரூ.

எப்போது உண்ணக்கூடாது, எதை உண்ணவேண்டும், எப்படி உண்ண வேண்டும், எதனுடன் சேர்த்து உண்ணவேண்டும், உண்டபின் என்ன செய்யக்கூடாது போன்ற பல குறிப்புகள் விவரமாக விளக்கப்பட்டுள்ளன. நமக்கு என்னென்ன சிறு சிறு கோளாறுகள் நேரிடும். அதை எப்படி போக்க வேண்டும், மேலும் வராமல் எப்படி தடுக்க வேண்டும் என்றும் விளக்கப்பட்டுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 2/1/2014


உனக்காக காத்திருந்தேனே

$
0
0

உனக்காக காத்திருந்தேனே, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, சென்னை 108, விலை 250ரூ.

இது புதுமையான கவிதை நூல். நூலாசிரியர் எஸ். விஜயராஜ், பத்திரிகையாளராக இருந்தவர். வானொலி நாடகங்களும்,மேடை நாடகங்களும் எழுதியவர்.

இதயம் தேடும் உதயம், சித்திரம் பேசுதடி என்ற இரண்டு திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்கள் எழுதியதுடன் இயக்கவும் செய்தவர். படங்களுக்கு எழுதிய கவிதைகளும், தனியாக எழுதிய கவிதைகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

இதில் புதுமை என்னவென்றால், ஒவ்வொரு கவிதைக்கு முன்னாலும், கவிதை உருவான சூழ்நிலை, படத்தில் இடம் பெற்ற பாடல் என்றால் அது, எத்தகைய காட்சியில் வருகிறது என்பதை சுவைபட எழுதியுள்ளார்.

வெற்றிகரமான புதிய முயற்சி.

 

—-

 

செல்வச் செழிப்போடு வாழ ஏற்றுமதி வணிகம், கே.எஸ். பப்ளிஷர்ஸ், 43, முதல்மாடி, சுந்தர்ராஜ் தெரு, முதலியார்பேட்டை, புதுச்சேரி 605004.

படித்துவிட்டு, வேலை கிடைக்காமல் திண்டாடும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாய் இந்த நூலை எழுதியிருக்கிறார் பி. சோமசுந்தரம்.

ஏற்றுமதி மூலம் செல்வச் செழிப்போடு வாழலாம் என்று கூறும் இவர் ஏற்றுமதி வணிகத்தின் பொருட்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ரஷியா, சிங்கப்பூர், வியட்நாம் முதலான நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தவர். தான் பணியாற்றிய நிறுவனத்தின் ஏற்றுமதியை, ஐந்தாண்டு காலத்தில் 10 மடங்கு உயர்த்தி சாதனை புரிந்தவர்.

ஏற்றுமதி செய் யவிரும்புவோர், எதை, எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியுள்ள்ர். ஏற்றுமதிக்கு வேண்டிய தகவல்கள் கொண்டட ஒளிப்பேழை (சி.டி) யும் புத்தகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினத்தந்தி, 2/1/2014

அனுமனின் கதையே

$
0
0

அனுமனின் கதையே, இந்திரா சவுந்திரராஜன், சாருபிரபா, பக். 464, விலை 250ரூ.

ஊழிதோறும் புதிது புதிது தோன்றும் சீர்த்தியன் என்று கம்பர் அனுமனைப் போற்றுவார். அது உண்மைதான். பல யுகங்கள் கடந்து, இன்றும் அனுமன் புதிய புதிய உருவப் பொலிவுடன் தோன்றி அருளுகிறார்.

பக்தியும், தொண்டும் தவிர ஏதும் அறியாத அனுமனின் ஆளுமையும், அதை வரிகளில் படம் பிடித்து, படிப்பவர் மனதில் திரைப்படமாய் காட்டும் இந்திரா சவுந்திரராஜனின் எழுத்தின் திறமை சிறப்பானது.

இடை இடையே ஓவியங்கள், எழுத்துக் காவியத்தை தூக்கி நிறுத்துகின்றன. சீதையை கண்டு வந்த செய்தியை, அனுமன், ராமனிடம் கூறிய போது, நடக்கும் காட்சியை உன்னதமாக எழுத்தோவியமாகத் தீட்டியுள்ளார்.

அனுமனைப் பற்றி அழைத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டார். ஒருவருக்கு செய்யும் மிகப் பெரிய மரியாதையே, அவரை மார்போடு அணைத்து சரிநிகர் சமானமாகக் கருதி, தன்னையே அவர்களிடம் ஒப்படைப்பது தான்.

இந்தச் செயலை, ஆலிங்கனம் என்பார்கள். இங்கே ராமாலிங்கனம் ஆன்மாவிற்கே சிலிர்ப்பு ஏற்படுத்தியது. (பக். 340). வால்மீகியா? கம்பனா? துளசிதாசரா எந்த ராமாயணம் இங்கே பின்பற்றி எழுதப்பட்டுள்ளது என்ற வினாவுக்கு விடை வாசகருக்காகவே ஒரு புனைக்கதை புதினம்போல் எழுதப்பட்டுள்ள இந்த நூல், வாசக ராமாயணம், அனுமன் கதை ஆகும்.

மாத இதழில் வந்தது போலவே தந்திராமல், தனித்தனி தலைப்புகளுடன் எழுதி இருக்கலாம். தலைகாட்டும் ஒரு சில எழுத்துப் பிழைகள் (சாம வேத தான தண்டம்) சாம பேத (பக்கம் 339), தவிர்க்கப்பட வேண்டும். அனுமனின் அருள் வாழ்வை, சுவைபட பக்தி ரசத்துடன் காட்டும் கதை நூல் இது.

-முனைவர் மா.கி. ரமணன்.

 

—-

 

இப்பொழுது, எகார்ட் டோலே, தமிழில்-என். கனகமணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 256, விலை 160ரூ.

ஆசிரியரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட The Power of now என்ற நூலின் தமிழாக்கம் இந்த நூல். தங்கள் உள்ளத்தின் உள்ளே மாற்றத்தை கொண்டு வந்து, உள ரீதியாக மாற நினைப்போருக்கு, இந்தப் புத்தகம் ஒரு கிரியா ஊக்கியாக இருக்கும் என்று நம்புவதாக, ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுகிறார் நம்புவோம்.

-சிவா.

நன்றி: தினமலர், 5/1/14.

மகாபாரதம் ஒரு கண்ணோட்டம்

$
0
0

மகாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர்.குப்புசாமி, பக். 552, விலை 350ரூ.

மகாபாரதத்தின் நீள அகலங்களில் ஆழங்கால் பதித்துள்ள நூலாசிரியர், 40 அத்தியாயங்களில், இந்தக் காப்பியத்தின் இதிகாசத்தின் அற்புதச் சொல்லாடங்களை, கருத்துச் செல்வங்களை எழுதியிருக்கிறார்.

படிப்பதற்கு சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கிய மகாபாரதத்தில் தர்ம-அதர்ம யுத்தம் கவனத்தை கவரக்கூடியது. படிக்கப் படிக்க இனிக்கும் மகாபாரத நூல் வரிசையில், இந்தப் புத்தகத்திற்கு முன்னுரிமை வழங்கலாம்.

குறிப்பாக சமஸ்கிருத சுலோகங்களைத் தமிழிலேயே எழுதி அதற்கான விளக்கம், விரிவுரையே பழகு தமிழில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதிகாசங்கள் மீது நூலாசிரியருக்கு உள்ள ஈடுபாடும், புலமையும் பாராட்டிற்குரியது.

-ஜனகன்.

 

—-

 

காக்கியின் கதீர்வீச்சு, பெ. மாடசாமி, டிபிஎஸ், விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் 641001, பக். 248, விலை 140ரூ.

பெ. மாடசாமி தமிழில் கட்டுரை, கவிதை எழுதுவது மட்டுமின்றி நல்ல பேச்சாளர், 34 ஆண்டுகள் தமிழக காவல் துறையில் பணியாற்றியவர். தம் வாழ்க்கை அனுபவங்களை, புதுக்கவிதை தமிழில் மிகவும் சுவைபட எழுதியிருக்கிறார்.

இயல்பாய் காக்கிக்கு ஒரு கவர்ச்சியுண்டு. கவன ஈர்ப்புண்டு. 50பேர் நடுவில் ஆங்கொரு காவலரைக் கண்டிட்டால், அனைவரும் கலைந்திடுவார். அவர் பார்த்துக் கொள்வார் என, அப்படியொரு அதிகாரத்துவம் காக்கிக்கு என்று எழுதிச் செல்கிறார்.

-எஸ். குரு.

நன்றி: தினமலர், 5/1/14.

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்

$
0
0

செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல், முனைவர் மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இளம் அறிஞர் விருது பெற்றவர் இந்நூலாசிரியர். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், திருக்குறள் தொடர்பான, 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

இணையம் வழியாக தமிழ் பரப்பும் முனைப்பு மிக்கவர். ஆய்வு நெறிகளில் ஆர்வமும், ஊக்மம் கொண்டவர் என்பதை இக்கட்டுரைகள் உறுதி செய்கின்றன. பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆய்வுக் கருத்தரங்குகளில், கட்டுரைகள் படைத்தவராதலின் நூலின் தரம் உயர்ந்துள்ளது.

தமிழர்களின் பண்டைக்காலத்து ஆவணமாகப் பட்டினப்பாலை விளங்குவதை விரித்தெழுதியுள்ளார். ஈழத்து அறிஞர்கள் ஆற்றிய திருக்குறள் பணிகளை விளக்கிப் போற்றியுள்ளார். மலைபடுகடாம் நூலின் வரலாறு திரித்துரைக்கப்படும் போக்கினைப் பலப்படுத்தியுள்ளார்.

சிலப்பதிகாரம் தமிழர்களின் இசைக்கருவூலம் என்பதைப் புலப்படுத்திய பாங்கு நன்று. சிலப்பதிகார உரைகளை ஆராய்ந்தும் பஞ்சமரபு வெண்பாக்கள் பற்றி குறிப்பிட்டும் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க பெருமுக்கல் என்னும் மலை பற்றிய அரிய தகவல்களை வழங்கியுள்ளார்.

திண்டிவனம் மரக்கணம் இடையே அமைந்த இவ்வூரின் பழைய பெயர் கங்கை கொண்ட நல்லூர். மலேசியக் கவிஞர் சி. வேலுசாமியின் திருக்குறள் உரைத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு கட்டுரைக்கும் பயன்பட்ட நூல்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஆக ஆய்வு நூல் என்பது, பலரது கருத்துகளில் இருந்து எடுத்து தொகுக்கப்படுவதாக அமைகிறது.

நூலின் மொழி நடை ஓங்கி நிற்கிறது. பிழைகள் இல்லாத செம்பதிப்பாக நூல் வெளிவந்திருப்பது பாராட்டிற்குரியது, தமிழ் ஆர்வலர்களுக்கு விருந்தாகும் நூல் இது.

-கவிக்கோ ஞானச்செல்வன்.

 

—-

 

மௌனியின் கதைகள், கி.அ. சச்சிதானந்தம், சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 192, விலை 110ரூ.

தமிழ்ச் சிறுகதையை உலகத் தரத்திற்கு கொண்டு சென்றவர் மவுனி. இலக்கிய உலகம் ஆசானாகப் போற்றிக் கொண்டாடும் மவுனியின் அழியாச்சுடர், தவறு, மனக்கோட்டை உள்ளிட்ட, 13 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்துள்ளார் கி.அ. சச்சிதானந்தம்.

பல நூல்களை எழுதியுள்ள, சிறந்த இலக்கிய படைப்பாளியான இவர், மவுனியுடன் நெருங்கிப் பழகியவர். 1967ல் தீபம் இதழில் வெளியான மவுனியன் நேர் காணலும், நூலாசிரியரின் தொகுப்புரையும் அதில் இடம்பெற்றுள்ள மவுனியின் பல பக்க கையெழுத்து, நகலும் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.

-கவுதம நீலாம்பரன்.

நன்றி: தினமலர், 5/1/14.

துக்காராம்

$
0
0

துக்காராம், பாலசந்திர நெமதே, தமிழாக்கம்-ஆர்.கே.நாகு, சாகித்ய அகாடமி, டில்லி, விற்பனை-குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600018, பக். 136, விலை 50ரூ.

மராத்தி இலக்கிய படைப்பாளர்கள் சமய சீர்திருத்தமும், சமுதாயச் சீர்திருத்தமும் ஏற்பட நூல்கள் பல எழுதினர் என்பர். இந்நூல், துக்காராமின் காலச்சூழல், அவர் வாழ்க்கை வரலாறு, கவிஞர் திருத்தொண்டர் என்ற நிலையில் வாழ்ந்த துக்காராம் என்று பல தலைப்புகளில் விளங்குகிறது.

துக்காராமின் மராத்தி பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. படிப்போருக்கு மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. நூலின் இறுதியில் உள்ள அருஞ்சொற்களும், அவற்றின் விளக்கங்களும் எனும் பகுதி, நூல் படிப்போருக்கு மிகவும் உதவும். படிக்கப் பயனுள்ள நூல்.

-டாக்டர் கலியன் சம்பத்து.

 

—-

 

இறை அருளாளர் இராமலிங்கர் வாழ்வும் வாக்கும், பா.கமலக்கண்ணன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 368, விலை 200ரூ.

வடக்கில் தோன்றும் பகவான் ராமகிருஷ்ணருக்கு இணையாக, தென்னகத்தில் அவதரித்த வள்ளல் ராமலிங்க அடிகளைப் பெரியோர் கூறுவர். இந்நூல் வள்ளலார் குறித்து, நாம் முன்பு அறிந்த செய்திகளை தவிர, பல புதிய செய்திகளை தருவதும், வள்ளலாரின் உண்மை வரலாற்றை கூறுவதும், நம்மை வியக்க வைக்கிறது.

பகு என்ற சொல்லிற்கு தரும் விளக்கத்தையும் (பக். 117), ஆதி பகவனே அல்லாஹ் என்று கூறுவதும் (பக். 230), நெற்றியில் திருநீறு இடுவதன் உட்பொருளை விளக்குவதும் (பக். 250), நூலாசிரியரின் நுட்பமான ஆய்வுத் திறனுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

வள்ளலாரின் வாழ்க்கையை, 48 தலைப்புகளில் கூறியுள்ளார்.

-டாக்டர் கலியன் சம்பத்து.

நன்றி: தினமலர், 5/1/14.

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.

$
0
0

தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷிணி, மித்ரஸ் பதிப்பகம், ஸ்ரீனிவாசன் என்க்ளேவ்,10/18, வாசன் தெரு, தி.நகர், சென்னை 600017, பக். 400, விலை 250ரூ.

ராமன் கம்பனுக்குள் வந்தார், கம்பன் டி.கே.சி.க்குள் வந்தார் என்றும், தமிழ் உரைநடை உயிரோட்டமுள்ளதாயும், உணர்ச்சியை வெளிப்படுத்துவதுமாக அமைவதற்கு டி.கே.சி. தான் வழிகாட்டி என்று, மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பெற்றவர்.

என்னருமை நண்பா, இனிய கலை ரசிகா, தென்னர் தமிழ் வளர்க்கும் தேசிகா, என்றெல்லாம் நாமக்கல் கவிஞரால் பாராட்டப் பெற்றவர். குற்றாலம் என்றாலே, ரசிகமணியும் அவர் கண்ட வட்டத் தொட்டியும்தான் இலக்கிய ஆர்வலர்களுக்கு நினைவுக்கு வரும்.

தமிழ் வளர்த்த வழக்கறிஞரான டி.கே.சி.யின் வரலாற்றை ஒரு பகுதியாகவும் டி.கே.சியின் கண்ட கவி உருவம், டி.கே.சியின் பன்முகங்கள், டி.கே.சி.யும் சான்றேர்களும், டி.கே.சியும் நினைவுத் தடங்கள், டி.கே.சிக.யின் கடிதங்கள், டி.கே.சி.யின் ஆனந்த அலைகளில் இப்படி பல தலைப்புகளில் கட்டுரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முறையாக பொருளடக்கம் தந்து, தலைப்புகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து வரிசைப்படுத்தியிருந்தால், நூல் இன்னும் செம்மையாக ஒரு கோவையாக அமைந்திருக்கும்.

ரசிகமணி டி.கே.சி.யைப் பற்றி அறிந்து கொள்ள, இந்நூல் பயன்படும்.

-பின்னலூரான்.

 

—-

 

சித்தர்களின் ஜீவ சமாதி ரகசியங்கள், கைலாசநாதன், ஸ்ரீ ஆனந்த நிலையம், 7/14, புகார் முதல் தெரு, அசோக் நகர், சென்னை 600083, பக். 528, விலை 450ரூ.

தன்னைத்தானே அறிதல் இறைத்தன்மை உணர்தல். தான் வேறு இறை வேறு என்ற நிலை அறிந்து, இரண்டுக்கும் ஒன்றாமே பரிபூரண நிலையே எல்லா மனிதர்களும் அடைந்து ஆனந்தம் பெற வேண்டும் என்பதே, சித்தர் நெறிகள் உணர்த்தும் இறைக்கொள்கை.

இதற்கான அடயோகம், லயயோகம், குண்டலினி யோகம் போன்ற வழிமுறைகளை ஆசிரியர் விளக்குகிறார். பக்தி இலக்கியப் பொக்கிஷம்.

-எஸ். கே. குரு.

நன்றி: தினமலர், 5/1/14.

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழ்

$
0
0

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழ், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அறக்கட்டளை, சென்னை 4, பக். 146, விலை 25ரூ.

ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தின் இந்த இதழ், 2 லட்சம் பிரதிகள் காணும் சிறப்பிதழாகவும், சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டு சிறப்பிதழாகவும் வெளிவந்துள்ளது.

சுவாமி விவேகானந்தர் குறித்து பிரபலங்கள் எழுதிய 60 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும் என்று சுவாமிஜி எழுதிய கட்டுரை முத்தாய்ப்பாகத் திகழ்கிறது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. தமிழக முதல்வர் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆகிய அரசியல் துறைப் பிரபலங்கள் சுவாமிஜி குறித்து எழுதிய கட்டுரைகளின் வித்யாசமான தொகுப்பு.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமிஜிகள் சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரைகள், மாதா அமிர்தானந்தமயி, சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி ஓம்காரானந்தர் என ஆன்மிகத் துறையின் வெவ்வேறு சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் பார்வையில் சுவாமிஜி குறித்த கட்டுரைகள், கவிஞர் வைரமுத்து, ஸ்டாலின் குணசேகரன், நீதிநாயகம் சந்துரு, சுகிசிவம், தமிழருவி மணியன், இறையன்பு என வெவ்வேறு சிந்தனை கொண்டவர்களின் கட்டுரைகள், மௌலானா வஹிதுதீன் கான் எழுதியுள்ள இஸ்லாமிய அறிஞரின் பார்வையில் விவேகானந்தர் என்ற கட்டுரை ஆகியவை இந்தச் சிறப்பிதழின் நோக்கத்தை உயர்த்திப் பிடிக்கின்றன. சுவாமி விவேகானந்தர், குறுகிய வட்டத்துக்குள் அமர்ந்துவிட்டவரில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரின் பரந்து விரிந்த பார்வையை, உலகத்துக்குப் பொதுவான மனிதராக தெய்வீகத்தை உணர்த்தும் ஆசார்யராக இந்தக் கட்டுரைகள் அவரை வெளிக்காட்டுகின்றன.

இந்த இதழ் பிரெய்லி முறையில் வடிவமைக்கப்பட்டு, பார்வையற்றோரும் வாசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அது சுவாமிஜியின் பிறந்த தினமான ஜன.12 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்றும் வெளியிடப்பட்டுள்ள தகவல், வியப்புக்குரிய ஒன்று.

ஒரு கால் இன்றி இமயமலை ஏறி சாதித்த அருணிமா சின்ஹா, தாம் நொறுங்கியபோது தம்மை நிமிர்த்தியவராக சுவாமிஜியைக் காட்டுகிறார்.

ஓரு குடும்பத்தில் சுவாமிஜியின் தாக்கம் எப்படி, அந்தக் குடும்பத்தை சாதிக்கும் குடும்பமாக உயர்த்தியுள்ளது என்ற கட்டுரையைப் படிக்கும்போது நமக்கும் நம்பிக்கை பிறக்கிறது. சுவாமிஜியின் 150ஆவது ஆண்டில் மலர்ந்துள்ள இந்தச் சிறப்புத் தொகுப்பு.

அன்பர்களின் மனத்தை உருக்கும் விதமாய் அமைந்து, சிறப்பிதழின் தயாரிப்பில் உள்ள உழைப்பை வெளிக்காட்டுகிறது.

நன்றி: தினமணி, 6/1/2014.


நீராதிபத்தியம்

$
0
0

நீராதிபத்தியம், சா. சுரேஷ், எதிர் வெளியீடு.

கனடாவைச் சேர்ந்த மாட் விக்டோரியா பார்லோவின் Blue Covenant நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சா. சுரேஷ். உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தண்ணீர் அரசியலின் பன்முகப் பரிமாணங்களை பொளேரென உணர்த்தும் நூல்.

ரோஜாப் பூ வணிகத்துக்காக ஓர் ஏரியின் நீராதாரத்தை யானைகளுக்கு மறுப்பது முதல், சாமானியனுக்கு குடிநீர் வழங்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையைச் செயலாக்குவது வரை புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், நீர் அருந்தும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள்.

இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு, நீங்கள் குடிநீர் குழாயை இறுக மூடாமல் இருக்க மாட்டீர்கள் என்ற வரிகள் அத்தனை உண்மை. மூலநூலிலேயே இல்லாத குறிப்புகளையும் சேர்த்துக்கொண்டு, பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரத்தை, தரமாக தமிழுக்குக் கொண்டுவந்திருக்கும் சுரேஷின் உழைப்பு, தலைமுறைகள் கடந்தும் நிற்கும்.

நன்றி: ஆனந்த விடகன், 8/1/2014.

 

—-

 

நம் ஊன் உடம்பு ஓர் ஆலயம், அ.சொ.சுப்பையா, மீனாட்சி பதிப்பகம், 3, அனந்தராயன் தெரு, சிதம்பரம் 1, பக். 184, விலை ரூ.155.

உடம்பே இறைசவன் விரும்பிக் கோயில் கொள்ளும் இடமாகும். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர். உடம்பெனும் மனையகத்துள் உள்ளமே தகளியா என்றார் அப்பரடிகள். நம் உடலில் இறைவன் கோயில் கொண்டுள்ள திறத்தை பல அருளாளர்களும் அடியார்களும் பாடியுள்ளனர்.

இறைவனைப் போற்றி வழிபடத்தக்க மிகச்சிறந்ததொரு கருவி. மானிடப் பிறப்பில் வாய்த்த இந்த உடம்பேயாகும். இதனை விளக்கமாக விளக்கவே இந்நூலில் இடம்பெற்றுள்ளன, நம் உடம்பு ஓர் இன்பச் சுரங்கம், ஓர் அற்புதப்படைப்பு, ஓர் பஞ்சகோச வடிவமைப்பு, ஓர் ஆலயம் என்னும் முதன்மைத் தலைப்புகளைக் கொண்டு ஒவ்வொரு தலைப்புகளின் உள்ளேயும், மூதாதையரின் கூர்மதி, ஐம்பூதங்களின் கட்டமைப்பு, அண்டமும் பிண்டமும், ஈரேழு பதினான்கு உலகங்கள், உயிர் ஓர் விளக்கம், ஒடுங்கு களம், இன்ப ஊற்று, நம் உடம்பு ஓர் மருத்துவமனை, உடம்பு ஓர் மருத்துவமனை, உடம்பு ஓர் சிறைச்சாலை, உடம்பை வளர்க்கும் உபாயம், பஞ்சகோச அமைப்பு, குருவருளும் திருவருளும், மூலப்பொருளின் சிறப்பு, இறைவனின் ஆலயங்கள், திருக்கயிலையும் தில்லை அம்பலமும், கோபுர வாயில்கள், உடம்பில் உள்ள இருவகை சக்திகள், ஒழிபியல், மரபியல், வரைபடங்கள் என 188 பக்கங்களுக்குள் ஒரு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துத் தகவல்களையும் விஞ்ஞான, மெய்ஞ்ஞான,சித்தாந்த, வேதாந்த அடிப்படையில் விளக்கிக் கூறியுள்ளார் சைவ சித்தாந்த ஞான தேசிகரான அ.சொ.சுப்பையா.

நம் உடம்பில் உள்ள உத்தமனை அறிந்துகொள்ளவும், அவ்வுத்தமன் குடிகொண்டுள்ள உடம்பைப் பற்றி அறிவியல் ரீதியாகத் தெளிவாக அறிந்துகொள்ளவும், அதைப் பேணும் வழிவகைகளையும் இந்நூலைப் படித்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். மிகச்சிறந்த அனுபவ, அறிவுப் பொக்கிஷம்.

நன்றி: தினமணி, 6/1/2014.

தகராறு

$
0
0

தகராறு, கடந்து சென்றிடம் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும், யொ. ஹான்கால்டுங், தமிழில்-சுப.உதயகுமாரன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 168, விலை 85ரூ.

தகராறு என்பது தவறானது அல்ல. மனித வாழ்க்கைக்குத் தகராறு மிகவும் இன்றியமையாதது. கருத்து முரண்பாட்டின் அடுத்த நிலை தகராறு. தகராறு முற்றும்போது தீர்வு ஒன்று உருவாகும்.

தகராறுகளுக்கு நிவாரணம் என்ன? என்பதைப் பற்றி இந்த நூல் விரிவாக அலசுகிறது. மனிதனுக்குள் மற்றும் மனிதருக்கிடையே எழும் முரண்பாடுகள், சிறுதகராறுகள், சமூகங்களிடையே எழும் பிணக்குகள் குறுந்தகராறுகள், அரசுகளுக்கும் மக்களுக்கும் இடையே எழும் தகராறுகள், பெருந்தகராறுகள், பிராந்தியங்களுக்கும், நாகரிகங்களுக்கும் இடையேயான சண்டைகள் மாபெரும் தகராறுகள் என தகராறுகள் வகைப்படுத்தப்பட்டு, அவை ஒவ்வொன்றையும் உதாரணங்கள் மூலம் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

ஒரு தகராறு என்பது மனப்பாங்கு-செயல்பாடு-முரண்பாடு என மூன்றாகப் பிரிக்கப்பட்டு அதைப்பற்றி 11 பக்கங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பிரச்னையின் ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டும் பார்ப்பதற்குப் பதிலாக பிரச்னையின் அனைத்துப் பரிமாணங்களையும் பார்ப்பதற்குப் பழக வேண்டும்.

இதற்கு டிரான்சென்ட் முறையே பிரதானமானது என்பதை ஆசிரியர் அழுத்தமாகச் சுட்டிக் காட்டுகிறார். தகராறு, தீர்வுகளுக்குத் திருக்குறளிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருவள்ளுவருடன் நூலாசிரியர் சுப. உதயகுமாரன் உரையாடுகிறார்.

கேள்வி பதில் உரையாடலில் 60 குறள்கள் பொருத்தமாக இடம் பெறச் செய்திருப்பது நூலாசிரியரின் நுட்பத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.

நன்றி: தினமணி, 6/1/2014.

 

—–

 

தத்துவவிவேசினி – சென்னை இலௌசிக சங்கம், வீ. அரசு பதிப்பு.

அறியப்படாத தமிழகத்தின் மிக முக்கியமான வரலாற்றை அகழ்ந்த ஆவணமாக்கி இருக்கிறார் பேராசிரியர் வீ. அரசு. 1878ல் உருவான இந்து சுயக்கியானிகள் சங்கம்தான் தமிழகத்தின் முதல் பகுத்தறிவுச் சங்கம்.

பெரியாருக்கு முன்பே இப்படி ஒரு பகுத்தறிவு இயக்க மரபு நம்மிடையே இருந்துள்ளது. முதலில் சுயக்கினியானிகள் என்ற பெயரில் இயங்கிய இவர்கள், பின்னர் தங்கள் அமைப்பை சென்னை இலௌகிக சங்கம் என பெயர் மாற்றிக்கொண்டு தத்துவவிவேசினி, தி திங்கர் ஆகிய தமிழ், ஆங்கில வார இதழ்களை நடத்தியுள்ளனர்.

சென்னையில் நாத்திகர்கள் உருவாகத் தொடங்கிய மரபு முதல் ஆத்திகர் நாத்திகர் இடையிலான உரசல் விவாதங்கள் வரை தொகுக்கப்பட்டுள்ளன. 1878 முதல் 1888 வரை வெளிவந்த இந்த இதழ்கள் தொடர்பான செய்திகள் அப்படியே வரலாற்றில் இருந்து விடுபட்டுவிட்ட நிலையில், தனது 10 ஆண்டுகாலக் கடும் உழைப்பின் மூலம் அவற்றை ஆவணமாக்கி இருக்கிறார் பேராசிரியர் வீ. அரசு.

ஆங்கிலத்தில் இரண்டு, தமிழில் நான்கு என மொத்தம் ஆறு தொகுதிகளாக வெளியாகியுள்ள தத்துவவேசினி இதழ் தொகுப்பு, சுமார் 3500 பக்கங்களைக் கொண்ட அரிய ஆவணம்.

நன்றி: ஆனந்த விடகன், 8/1/2014.

அகமும் புறமும்

$
0
0

அகமும் புறமும், (புதுப்புனலிலிருந்து), கோவை ஞானி, புதுப்புனல், பாத்திமா டவர், முதல் மாடி, 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை 5, பக். 128, விலை 100ரூ.

புதுப்புனல் இதழில் நூலாசிரியர் கோவை ஞானி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

அணுமின் நிலையங்களில் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தியைக் கொண்டுதான் மாபெரும் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்த முடியும் என்பதும் ஒரு பொய்க் கனவு.

அணுசக்தி நிலையங்கள் என்பவை இறுதியில் அணுகுண்டு உற்பத்திக்கான யுரேனியத்தைக் கழிவுப் பொருளெனக் கடைந்து எடுப்பதற்குத்தான்.

மலைப் பகுதிகளில், காடுகளில் நிலத்துக்கு அடியில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுப்பதென்றால் காலங்காலமாக இங்கு வாழும் ஆதிவாசிகளை வெளியேற்றுவதோடு, காடுகளையும் அழித்தாக வேண்டும்.

இந்தியாவில் மாபெரும் இயற்கை வளங்களை பெரும் முதலாளிகளும் அந்நியர்களும் கொள்ளையடிக்க விடுவதன் மூலம் நம் மக்களுக்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும்?

தமிழை அரசும் கல்வி நிறுவனங்களும் தொடர்ந்து புறக்கணித்துவரும் சூழலில் தமிழை, தமிழ் இலக்கியத்தை, தமிழ் வரலாற்றைக் காப்பாற்றி மேம்படுத்தும் முறையில் தமிழுக்குக் கிடைத்த செம்மொழித் தகுதியை நாம் எந்த அளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

இவ்வாறு இந்த நூல் முழுவதும் இன்றைய நாளின் பல்வேறு பிரச்னைகளைப் பற்றி மக்களின் நலன் என்ற அடிப்படையில் தனது கருத்துக்களை தெளிவாகவும், துணிச்சலாகவும் முன் வைக்கிறார் நூலாசிரியர்.

சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவருக்கும் பயன்படும் நூல்.

நன்றி: தினமணி, 6/1/2014.

ஓநாய் குலச்சின்னம்

$
0
0

ஓநாய் குலச்சின்னம்,(சிறந்த மொழிபெயர்ப்பு புனைவு), சி. மோகன், அதிர்வு பதிப்பகம்.

மாவோ தலைமையில் சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியைத் தொடர்ந்து அங்கு அழிந்துபோன அல்லது அழித்தொழிக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களின் தொன்மையை, நாகரிகத்தை, அவை அழித்தொழிக்கப்பட்ட வன்முறையைப் பேசும் வரலாற்று ஆவணம் ஓநாய் குலச்சின்னம்.

2004ம் ஆண்டு வெளியாகி Wolf Totem என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. நாவலின் ஆசிரியர் ஜியாங் ரோங், சீனாவின் ஜியாங்சூவில் பிறந்தவர்.

வெளியான இரண்டே ஆண்டுகளில் 40 லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையான இந்த நாவல், மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் ஞானகுரு, போர்க் கடவுள், காவலன், குலச்சின்னம் என எல்லாமுமாக விளங்கும் ஓநாய்களைப் பற்றி பேசுகிறது.

மனிதனே பிரதானமானவன் என்ற மாவோவின் சிநத்னை ஆதிக்கம், தொன்மையான மேய்ச்சல் நிலத்தைப் பாலையாக மாற்றிய துயரத்தை விவரிக்கிறது ஓநாய் குலச்சின்னம்.

ஆங்கிலம் வழியாக தமிழில் இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கிறார் கவிஞர் சி. மோகன்.

இவர் அடிப்படையில் கவிஞர் என்பதால் வீரியமான வார்தைகளில் வாக்கியங்களை கட்டமைத்திருக்கிறார்.

நன்றி: ஆனந்த விடகன், 8/1/2014.

 

—-

 

தமிழ் இலக்கிய வரலாறு, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், முல்லை நிலையம், சென்னை 17, பக். 320, விலை 140ரூ.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆய்வுகள் துறையில் நூலாசிரியர் ஆற்றிய உரைகளின் அச்சுவடிவம் இந்நூல். தமிழில் இதே தலைப்பில் பல்வேறு காலகட்டத்தில் பலர் எழுதியுள்ள நூல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக, அத்தகைய நூல்களில் இலக்கிய வரலாற்றின் ஏதேனும் ஒரு காலப்பிரிவுக்கே காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும்.

அல்லது, இலக்கியப் போக்குகளை மேலோட்டமாகக் கோடிட்டுக் காட்டும் முயற்சியாகவோ, இல்லையெனில் வெறும் கால வரிசைப்படி அட்டவணைப்படுத்தும் வகையிலோ இருக்கும்.

இது, பாடப்புத்தகங்களை வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அந்த வகை நூல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது இந்நூல்.

இதில் உள்ள கட்டுரைகள் வெறும் தகவல் தொகுப்பாக இல்லாமல் ஆய்வு நோக்கில் ஆழமாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் படைக்கப்பட்டுள்ளன.

ஆய்வு மாணவர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பயன்படும் நூல்

. நன்றி: தினமணி, 6/1/2014.

உபரி வடைகளின் நகரம்

$
0
0

உபரி வடைகளின் நகரம், லிபி ஆரண்யா, சந்தியா பதிப்பகம், (சிறந்த கவிதைத் தொகுப்பு).

அரசியலும் அழகியலும் கவிதையில் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளாத இணைகோடுகள் என்ற விமர்சனத்தை வீறுகொண்டு உடைக்கிறது லிபி ஆரண்யாவின் கவிதைகள்.

விஞ்ஞானத்தால் நிலத்தின் மீது நிகழும் வன்முறையை, குழந்தைகளின் திறமைகளைக் கொன்றுவிட்டு அவர்களை மனப்பாட பொம்மைகளாக்கும் கல்விமுறையை, நமது தேசிய வியாதியாகிவிட்ட நீரிழிவு நோய்க்கும் அந்நிய மோகத்துக்கும் குறிப்பாக, அமெரிக்க மோகத்துக்கும் இடையிலான அரசியலை, அகவிலைப்படி உயர்வுக்கும் மதுரை வடக்கு மாசி வீதி டாஸ்மாக் வாசிலில் ஒருவன் எடுக்கும் வாந்திக்கும் இடையிலான காரணங்களையும் உரத்துப் பேசுகின்றன லிபியின் வரிகள்.

 

—-

 

மாகடிகாரம், விழியன், பாரதி புத்தகாலயம்.(சிறந்த சிறுவர் இலக்கியம்).

நாம் எல்லோரும் கடிகாரம் பயன்படுத்துகிறோம். காலம் காட்டும் அந்தக் கருவிக்கு காலத்தைக் காட்டுவது எது? அதுதான் மாகடிகாரம் என்கிறார் ஹெர்குலிஸ் தாத்தா.

யாவரும் அறிந்திராத ஒரு ரகசிய இடத்தில் இயங்கிவரும் அந்தக் கடிகாரத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சாவி கொடுத்துப் பராமரிக்க வேண்டும். இல்லை என்றால், உலகமே ஸ்தம்பித்துவிடும்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் அதைப் பராமரிக்கும் பொறுப்பு தீமன் என்கிற சிறுவனுக்கு வழங்கப்படுகிறது. சிறுவன் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தானா? எதிர்பார்க்காத திருப்பத்துடன் கதையை முடிக்கிறார் ஆசிரியர்.

சிறுவர்களை அமானுஷ்யமான உலகுக்கு அழைத்துச் சென்று அறிவியல் உலகத்தை அறிமுகம் செய்யும் சாதுர்யமும் சுவாரஸ்யமும் விழியன் எழுத்துகளின் பலம்.

நன்றி: ஆனந்த விடகன், 8/1/2014.

செள்ளு

$
0
0

செள்ளு,செல்வராஜ், பாரதி புத்தகாலயம்.(சிறந்த சிறுகதைத்தொகுப்பு).

தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத கடலோர மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்வை, அதன் அசலான மொழியில் முன்வைக்கிறார் செல்வராஜ்.

கன்னியாகுமரி மாவட்டக் கடலோரக் கிராமமான சைமன் காலனியில் பிறந்த இவர், பாரம்பரிய மீன்பிடிச் சமூகமான முக்குவர்களின் வாழ்வையும், அவர்களின் பாடுகளையும் மிகவும் நெருக்கமாக, உள்ளிருந்து பேசுகிறார்.

தமிழ் இலக்கியப் பரப்புக்குப் புத்தம் புதியதான இந்த மொழி, உள்ளே நுழையும்போது சற்றே மிரளவைக்கலாம். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி, 1990களில் வீச்சுடன் வெளிப்பட்ட தலித் இலக்கிய எழுத்துகளை உள்வாங்க, அப்போது வாசக மனம் திணறியதைப் போலவே, செள்ளுவை ஏற்றுக்கொள்ளுவதிலும் சிரமம் இருக்கலாம்.

ஆனால் அந்த மொழிதான் இந்த தொகுப்பின் சிறப்பே. இது தமிழ் இலக்கியத்தை, கடலை நோக்கி அழைக்கிறது.

 

 

குன்னிமுத்து, குமாரசெல்வா, காலச்சுவடு பதிப்பகம், (சிறந்த நாவல்).

தென்பகுதித் தமிழக மக்களின் அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருக்கும் மதம், நடைமுறையில் எப்படி செல்வாக்குச் செலுத்துகிறது என்பதையும், மதத்துடன் பின்னிப் பிணைந்திருக்கும் அரசியல் ஆட்டங்களையும், விளவங்கோடு மக்களின் கலாசார வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் வட்டார வாசத்துடன் முன்வைக்கும் நாவல்.

குன்னிமுத்து என்பதை குண்டுமணி என்று சொல்வது உண்டு. பெண்மையின் தகுதி என்று சொல்லப்படும் அம்சத்தைப் பூர்த்திசெய்ய இயலாத அருளி என்கிற பெண்ணின் குறியீடாக இந்தச் சொல் கையாளப்பட்டுள்ளது.

இருளியின் கதையாகத் தொடங்கும் நாவல், திராவிட, தேசிய, கம்யூனிஸக் கட்சிகளின் அரசியல் சதுரங்கத்தை சாதாரண மக்களின் குரல் வழியே பேசுகிறது. எளிய மக்களின் கலாசாரத்தை வெகு இயல்பாக முன்வைக்கும் படைப்பு.

நன்றி: ஆனந்த விகடன், 8/1/2014.

தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும்

$
0
0

தமிழகத்தில் மின்வெட்டும் மின்கட்டண உயர்வும் காரணமும் தீர்வும், சா. காந்தி, முகம் வெளியீடு.

தமிழக மின்வெட்டின் 50 ஆண்டு வரலாற்றைத் துல்லியமான தரவுகளுடன் சரியான அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தொகுத்து வழங்குகிறது இந்த நூல். மின்மிகை மாநிலமாக விளங்கிய தமிழகத்தில், 28/11/2008ம் தேதிக்குப் பின்னர்தான் அசுர மின்வெட்டு தொடங்கியது என்று துல்லியமான தரவுகளுடன் விவரிக்கிறார் சா. காந்தி.

மின்சார அரசியலின் பன்முகங்களை, அரசு மின்வாரியத்தை அழித்து தனியார் துறையினர் ஆக்கிரமிப்பதையும், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தை சகாய விலையில் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும் நெஞ்சம் பதைபதைக்க விவரிக்கிறார்.

நன்றி: ஆனந்த விடகன், 8/1/2014.

 

—-

 

அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள், மிகெய்ல் நைமி, தமிழில்-கவிஞர் புவியரசு, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 100ரூ.

மிகெய்ல் நைமி என்பவர் லெபனான் நாட்டு ஞானவான். அவரை ஒரு ஞானச்சிகரம் என்று போற்றுவோர் உள்ளனர். பல சீரிய கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

தன் பெயரே தனக்குத் தெரியாத ஓர் இளைஞன் மவுனமே கவசமாகக் பூண்டு, நியூயார்க் நகரின் ஒதுக்குப் புறமான ஒரு காப்பி/மதுக்கடையில் பணியாளனாக இருக்கிறான்.

முகமெல்லாம் கடுமையான அம்மைத் தழும்புகள், அந்த அனாதைப் பையனின் நினைவுப் பதிவுகளாக இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. தங்கு தடையில்லாத மொழி பெயர்ப்பு நடை, நூலை படிக்கத் தூண்டுகிறது.

-சிவா.

நன்றி:தினமலர்,12/1/2014.


கர்ணன்

$
0
0

கர்ணன், எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 380, விலை ரூ.320.

எஸ். விஜயராஜ் ஓர் திரைப்பட இயக்குனர், கதாசிரியர், சிறந்த இலக்கிய விமர்சிகர். அர்ச்சுனன் தர்மயுத்தம் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி, பாரதப் போரில் கர்ணனைக் கொல்ல செய்தானா? என்ற கருத்தை, உள்ளடக்கி அருமையான விமர்சன நூலை எழுதியுள்ளார்.

சிட்டுக் குருவியின் தாவல்போல் சின்னச் சின்ன அழகு வாக்கியங்கள். மதுரமான நடை. புராண இலக்கியப் பொக்கிஷம்.

-எஸ். குரு.

 

—-

 

புதிய நோக்கில் புறநானூறு, பூவை அமுதன், அருள் பதிப்பகம், பக். 240, விலை 100ரூ.

புறநானூறு, பழந்தமிழ்ப் புலவர் பல நூறு பேர், பல்வேறுபட்ட பாடு பொருட்கள் பற்றிப் புனைந்துள்ள தொகுப்பு நூலாகும். ஊர், பேர் தெரியாத புலவர்களின் அருமை பெருமைகளைக் காலாகாலத்துக்கும் காட்டவல்ல, கவிமலர்கள் கொண்ட தொகுப்பே புறநானூறு.

நூறு தலைமுறைகள், கடந்த நிலையிலும் பழந்தமிழ் நாட்டையும், அக்கால மக்கள் வாழ்க்கை, பண்பாட்டையும் நாடாளும் செல்வர், மன்னர், வீரர் முதலியோர் மாண்புகளையும், பல்வேறு நிலைகளால் குறித்துக் காட்டும் அரிய பாடல்களின் தரத்தையும் கொண்டது.

உ.வே.சா. வின் பெருமுயற்சியில் வெளிவந்த பல நூல்களில், புறநானூறு எனும் புதையலும் ஒன்று. பல துறை நூல்களைப் படைத்தளித்து, நாட்டில் நன்கு அறிமுகமானவர் ஆசிரியர் பூவை அமுதன்.

வாழ்த்துக்கள் எனத் துவங்கி, சிறப்புக்குரிய சேதிகள் என்பது வரை முடிந்துள்ள கட்டுரைகள், பதினெட்டு அடங்கிய புத்தகமாகத் தந்துள்ளார். ஆய்ந்து தெளிந்து அனுபவப்பட்ட தேர்ச்சியும், முதிர்ச்சியும் கனிந்து கசிந்த கருத்தோட்டமாக காட்சி தருகிறது கட்டுரை ஒவ்வொன்றும்.

மாணவர்முதலாக ஆய்வாளர் உள்ளிட்ட அனைவரும் படித்தறியத் தக்க பாங்கில், படைக்கப்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன்தருவனவாகும்.

-கா.முருகையன்.

நன்றி:தினமலர்,12/1/2014.

குடும்ப விளக்கும் இருண்ட வீடும் ஒரு பார்வை

$
0
0

குடும்ப விளக்கும் இருண்ட வீடும் ஒரு பார்வை, முனைவர் சரளா ராசகோபாலன், அன்புப் பதிப்பகம், பக். 272,விலை 170ரூ.

பாவேந்தரின் புகழ்மிகு படைப்புகள், இரண்டின் ஆய்வுத் தொகுப்பாக அமைந்த அருமையான நூல் இது. வாழ்வியல் இலக்கியம், பெண்ணிலக்கியம், காதல் இலக்கியம், நான்கு தலைமுறை இலக்கியம் என்று பத்தொன்பது தலைப்புகளில், புரட்சிக் கவிஞரின் படைப்புகளில் காணப்படும் புதுமைச் சிந்தனைகளைப் பட்டியலிட்டு விவரிக்கிறார்.

பேராசிரியை சரளா ராசகோபாலன். ஆழ்ந்த புலமை, நுண்ணிய ஆய்வுடன் படைப்புகளின் கதைச் சுருக்கமும் கூறி, பாடல் வரிகளையும், ஒப்பீட்டுக்கான திருக்குறளையும் ஆங்காங்கு இடம்பெறச் செய்து, மூல நூல்களை முழுமையாக நாமே படித்த மகிழ்வை ஏற்படுத்தும் விதமாக ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

-பவானி மைந்தன்.

 

—-

 

மனிதனாகும் பொருளே, கே.வி.புருஷோத்தமன், செல்வி பதிப்பகம், 14, நான்காவது குறுக்குத் தெரு, வெங்கட்டா நகர், புதுச்சேரி 605011, பக். 134, விலை 100ரூ.

ஆசிரியர் தமக்குத் தெரிந்த அனுபவச் சுவடுகளைத் தொகுத்து, இடை இடையே சிறு சிறு கதைகளை ஆங்காங்கே பொருத்தி எழுதியுள்ள, 31 கட்டுரைகள் அடங்கிய புத்தகம். கல்லூரி மாணவர்கள், இந்த நூலைப் படித்தால் பெரிதும் பயன் அடைவர்.

எளிய தமிழ் நடை, அரிய அருமையான கருத்துக்கள். நூலாசிரியர் தாம் நினைத்ததை எழுத்தில் சிறப்பாக வடித்துள்ளார்.

-ஜனகன்.

நன்றி:தினமலர்,12/1/2014.

பூர்வீக பூமி

$
0
0

பூர்வீக பூமி, சூர்யகாந்தன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 164, விலை 80ரூ.

இந்த நூலில், 1991ல் கர்நாடகா, தமிழக எல்லைகளில் கன்னடியர்கள் ஆடிய வெறியாட்டத்தைத் தத்ரூபமாக சித்தரிக்கிறார் ஆசிரியர். வட்டார வழக்கும் உரையாடல்களோடு கூடிய இந்த நாவல் வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமல்ல. சீரிய சிந்தனைக்கும் உரியது.

-சிவா.

 

—-

 

மனிதனையும் தெய்வமாக்கும் சன்மார்க்க பெருநெறிகள், தெ. ராமநாதன், ஆர். பானுமதி, எண். 1/2, காமராஜர் தெரு, பொன்மலைப்பட்டி, திருச்சி 620004, பக். 168, விலை 50ரூ.

திருவருட் பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகள்பால், மிகுந்த ஈடுபாட்டுடன் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. சத்திய விண்ணப்பம் தொடங்கி, வருவார் அழைத்து வாழ் என்பது முடிய 26 அத்தியாயங்கள் நூலில் உள்ளன.

அடிகளாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறிகளும் பிற ஞானியரோடு வள்ளலாரை ஒப்பிட்டு எழுதியவைகளும், மெய்ஞானத்தீ பரவட்டும் என்ற விழைவும் நூலில் காணப்படுகிறது.

தேவாரம், திருவாசகம், சீரடி சாய்பாபா, ஸ்ரீரமணர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் அருளுரைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. திருவருட்பா பாடல்களும் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. ஜோதி சொரூபமான அறிவை எப்போதும் வணங்குவோம் என்ற நோக்கத்துடன் நூல் நிறைவு பெறுகிறது.

ஆன்மிக நாட்டமுடையவர்களுக்குப் பயன் தரும் நூல்.

-கவிக்கோ ஞானச்செல்வன்.

நன்றி:தினமலர்,12/1/2014.

மனிதனாகும் பொருளே

$
0
0

மனிதனாகும் பொருளே, கே.வி. புருஷோத்தமன், செல்வி பதிப்பகம், 14, நான்காவது குறுக்குத் தெரு, வெங்கட்டா நகர், புதுச்சேரி 605011, பக். 134, விலை 100ரூ.

ஆசிரியர் தமக்குத் தெரிந்த அனுபவச் சுவடுகளைத் தொகுத்து, இடை இடையே சிறு சிறு கதைகளை ஆங்காங்கே பொருத்தி எழுதியுள்ள, 31 கட்டுரைகள் அடங்கிய புத்தகம்.

கல்லூரி மாணவர்கள், இந்த நூலைப் படித்தால் பெரிதும் பயன் அடைவர். எளிய தமிழ்நடை, அரிய அருமையான கருத்துக்கள். நூலாசிரியர் தாம் நினைத்ததை எழுத்தில் சிறப்பாக வடித்துள்ளார்.

-ஜனகன்.

 

—-

 

ஸ்ரீ அருணாசல பஞ்சரத்னம், முகவைக் கண்ண முருகனடிமை, ஸ்ரீ ரமண பக்த சமாஜம், பக். 96, விலை 80ரூ.

ஸ்ரீ ரமண மகரிஷியின் மீது, பக்தி கொண்டோருக்கு இந்த விளக்கவுரை புத்தகம் ஒரு அருமையான அருள் பிரசாதம். மகரிஷி அருளியது அரணாசல ஸ்துதி பஞ்சகம். அதில் ஐந்தாவது பாடற் தொகுதி அருணாசல பஞ்சரத்னம்.

முகவைக் கண்ண முருகனடிமை, மகரிஷியின் பக்திப் பனுவல்களில் ஈடுபாடு கொண்ட நல்லறிஞர். அவர் புகழை பேச்சின் மூலமும் எழுத்தின் வாயிலாகவும், பரப்பி வருபவர்

. இந்தப் புத்தகத்தில் அவதாரிகை என்று ஒரு கட்டுரை நூலில் சொல்ல வந்த கருத்துக்களை எல்லாம் கூறுவது அவதாரிகை ஆகும். ஸ்ரீரமணோபதேசங்களின் சாரமாக உள்ள கட்டுரைப் பகுதி இது. நல்ல ஆன்மிகம் பேசும் உயர்தர ஸ்ரீரமண பொக்கிஷம் இது.

-ஜனகன்.

 

—-

 

விகடன் இயர் புக் 2014, விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 600002, பக். 864, விலை 135ரூ.

விகடன் பிரசுரத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த, ஆண்டு புத்தகத்தில், உலகம், இந்தியா, தமிழகம், அறிவியல் தொழில்நுட்பம், பொதுஅறிவு என்ற தலைப்புகளில், பல்வேறு கட்டுரைகள், தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் புத்தகத்தின் இறுதிப் பகுதியில், ஆங்கிலத்தில் சில தகவல்களும், க்விஸ் பக்கங்களும் நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. கூடுதலாக விகடன் பிரசுரம் சார்பில் வெளியான முக்கிய நூல்களின் பட்டியலையும் இணைத்துள்ளனர்.

புத்தகத்தை இணையத்தில் வாசிப்பதற்காக, புத்தகத்தோடு ஒரு ஸ்க்ராட்ச் சார்டும் தருகின்றனர்.

நன்றி:தினமலர்,12/1/2014.

மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர்

$
0
0

மொழிப்போரை விவரிக்கும் உயிருக்கு நேர், ம. நடராசன், தமிழ் அரசி பதிப்பகம், 189, டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 16, விலை 300ரூ.

உயிருக்கு நேராக தாய் மொழியைப் பார்த்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் நீண்ட வரலாற்றில் உணர்ச்சியும் கொந்தளிப்புமாக மொழியைக் காக்க நடந்த போராட்டம் எழுச்சியானது.

தங்களுடைய உயிரைக் கொடுத்து மொழிகாக்க முயன்றவர்களின் உணர்வுகளால் தமிழகம் முழுக்க அலையடித்து எழுந்த போராட்டங்கள், துப்பாக்கிச் சூடுகள், ஏராளமான உயிர்ப்பலிகள், ஆட்சி மாற்றங்கள் என்று துவங்கிய மொழிப் போராட்டம் இந்த மண்ணில் நிகழ்ந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அந்த மொழிப்போராட்டத்தின் பல்வேறு கூறுகளை அந்தந்த காலகட்ட பத்திரிகைகளிலும், நூல்களிலிருந்து தொகுத்துப் பதிவு செய்யப்பட்ட அபூர்வ நூலாகும். இதனை ம. நடராசன் தொகுத்துள்ளார். இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் தமிழர்களின் மொழியுணர்வையும், காலப்போக்கில் நிகழ்ந்த சரிவையும் ஒரு சேர உணரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

நூலை படிக்கும்போது மொழிக்காக உயிர்நீத்தவர்களையும் நினைவு கூர்வதுடன், அவர்களுடைய மொழி உணர்வுக்கு நம்மை தலைவணங்கவும் வைக்கிறது. 528 பக்கங்களில் எழுதப்பட்ட இந்த நூலில், மொழிப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழறிஞர்களின் நேர்காணலும், தமிழ் அறிஞர்களின் அரிய புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

 

—-

 

ராக்பெல்லர், கார்த்தீபன், சிக்ஸ்த்சென்ஸ், 10/2, போலுஸ் குவார்ட்டஸ் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 100ரூ.

சாதாரண மர வியாபாரி வில்லியம் என்பவரின் மகனான ஜான் ராக்பெல்லர், எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக உயர்ந்த வரலாறு.

கொடை உள்ளம் கொண்ட ராக்பெல்லர் நற்காரியங்களுக்கு ஒரு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி வந்தார். புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகம் அவரது முயற்சியில் தோற்றுவிக்கப்பட்டது.

வழக்குகளும், சோதனைகளும் அவரை விடாமல் துரத்தியபோதும் அவற்றை விடா முயற்சியாலும், புத்திக் கூர்மையாலும் திறமையாகச் சமாளித்து வெற்றி கண்டார். ஒரு நாவலைப் படிப்பது போன்ற உணர்வு இந்த நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது.

நன்றி: தினத்தந்தி, 2/1/2014.

Viewing all 3876 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>