கர்ணனின் கவசம், கே.என்.சிவராமன், சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 600004.
நாடி நரம்புகளில் எல்லாம் மகாபாரதமும், ராமாயணமும், பொன்னியின் செல்வனும் சாண்டில்யனின் சரித்திர நாவல்களும் ஊறிக்கிடக்கும் ஒருவர் விறுவிறுப்பான தொடர்கதை எழுதத் தொடங்கினால் எப்படி இருக்கும்? கர்ணனின் கவசம் என்ற நாவல் இதற்குப் பதிலாக இருக்கிறது.
முதல் அத்தியாயத்தில் தொடங்கும் ஓட்டம் சரித்திரத்தில், பூகோளத்தில், புராணத்தில், சொர்க்கத்தில், வைகுண்டத்தில் என எங்கெங்கு மனிதன் யோசிக்க முடியுமோ அங்கெங்கெல்லாம் சஞ்சரித்து கடைசியில் கபாடபுரத்தில் முடிவடைகிறது.
முடிவடைகிறது என்று சொல்வது தவறு. மீண்டும் ஆரம்பிக்கிறது. ஓர் அத்தியாயத்தில் காணாமல் போகும் பாத்திரம் சில அத்தியாயங்கள் கழித்து மீண்டும் தோன்றுகிறது. அது மீண்டும் காணாமல் போய் திரும்பவும் ஏதோ ஒரு பக்கத்தில் கண்விழிக்கிறது.
எல்லாம் எதிர்பாராத ஆச்சரியங்கள், திருப்பங்கள்தான். ராமாயண ஜடாயு, ஆதித்யாவையும் தாராவையும் தூக்கிக் கொண்டு பறக்கிறது. பிறகு அதைக் காணவில்லை. கடைசியில் சகுனி உருட்டும் தாயம் ஜடாயுவாக மாறி மாளிகையை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது.
குந்தி, திரௌபதி, அம்பா, பீஷ்மர், கிருஷ்ணர், ஆதித்ய கரிகாலன், குந்தவை, ரவிதாசன், வியாசர், கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கணிதப் புதிர்கள், சிற்ப சாஸ்திரம், வெள்யிம்பல நடராஜர் சிலை, கிராபீன் மனிதன், எரிகல் மனிதன், நவக்கிரக மனிதன், எல்லா இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கங்கள் என நூலாசிரியர் தூள் கிளப்புகிறார்.
ஜெர்மனியிலிருந்தும் சீனத்திலிருந்தும் பொக்கிஷத்தைத் தேடி வரும் மனிதர்கள் நிலை, நாவலில் பெருந்திண்டாட்டமாக இருக்கிறது. யார் யார் வடிவை எடுக்கிறார்கள் என்பதே குழப்பமாக இருப்பதால் நாமும் நாம் படிக்கும் எதையும் நம்பாமல் ஒரு ஆச்சரியத்தை எதிர்பார்த்து காத்திருப்புடன் மேலே வாசிக்க பழகிவிடுகிறோம்.
பீஷ்மரிடம் இருக்கும் அஸ்வத்தாமன் ஏவிய பிரம்மாஸ்திரத்தைப் பெறுவதற்கு அசோகரின் ரகசியப் படை வீரர்கள் போடும் ஆள்மாறாட்ட உத்தி போன்ற பல சிலிர்ப்பூட்டும் சம்பவங்களுடன் ஜெட் வேகத்தில் பறந்து செல்கிறது நாவல். வாசித்துக் கொண்டிருக்கையில் அருகில் இருக்கும் நபர்கூட ஒரு மகாபாரதப் பாத்திரமாக மாறிவிடும் சாத்தியம் இருக்கிறது. ஜாக்கிரதை.
—-
துளிவிஷம், ஆனந்த் ராகவ், வாதினி, 19/29, ராணி அண்ணா நகர், ஆஃப் பி.டி.ராஜன் சாலை, கே.கே. நகர், சென்னை 78, விலை 120ரூ.
அவளைப் பார்த்தான். வசீகரமாயிருந்தாள். ஊதா நிற பளபளப்பு சிக்கன உடை, மெல்லிய மார்பு ஒட்டிச் சரிந்து, வயிற்றில் நின்று மஞ்சள் நிற வயிறு காட்டி, தொப்புள் கடந்தவுடன் இடுப்பில் தொடர்ந்து முழங்காலுக்குச் சற்று மேலே முடிந்து மெல்லிய கால்களை விடுவித்தது – இது எழுத்தாளர் ஆனந்த் ராகவின் துளிவிஷயம் சிறுகதைத் தொகுப்பில் முகம் என்ற சிறுகதையில் ஒரு பெண்ணைப் பற்றிய விவரிப்பு.
இப்படி செதுக்கிச் செதுக்கி எழுதுவதில் வல்லவராக இருக்கும் இவரது துள்ளலான மொழிநடை இத்தொகுப்பு முழுக்க விரவிக் கிடக்கிறது. முகம் சிறுகதை இறுதியில் தரும் அதிர்ச்சி அனுபவம் ஆக்குகிறது.
பல்வேறு ஊர்கள், நாடுகள், கலாச்சாரங்களின் பின்புலங்களில் அமைந்த 15 சிறுகதைகளின் தொகுப்பாக இது மலர்ந்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசவிடாமல் அவதிப்படுத்துவதை மெல்லிசைக் கல்யாணம் என்ற கதை எள்ளலுடன் சித்தரிக்கிறது.
ஒரு கிரிக்கெட் வீரனின் சரிவைச் சொல்லும் சுழல்பந்து, படித்த பின் மனதைப் பிசையும் துளிவிஷம் போன்ற கதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
நன்றி: அந்திமழை, 1/12/2014