Quantcast
Channel: Dial for Books
Viewing all 3876 articles
Browse latest View live

முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள்

$
0
0

முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள், திருமதி. ஜாய்ஸ்ரேகா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 60ரூ.

விபத்து, தீக்காயம், மூச்சுத்திணறல் போன்ற சம்பவங்கள் நிகழும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதல் உதவி செய்வத அவசியம். இது குறித்த செயல்பாடுகள் பற்றி இந்த நூலில் விளக்கப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல்.

 

—-

 

வரலாறாய் வாழ்ந்தவர்கள், வெற்றித்தமிழன், நீர் வெளியீடு, 10, 6லது தெரு, கே.கே. நகர், சென்னை 78, விலை 175ரூ.

பேரறிஞர் அண்ணா, அரவிந்தர், கணிதமேதை ராமானுஜம், நடிகர் சிவாஜி கணேசன், கிருபானந்தவாரியார், வ.உ.சி. பகத்சிங், புத்தர், முத்துராமலிங்கத்தேவர், வள்ளலார், விவேகானந்தர், ப. ஜீவானந்தம் உள்ளிட்ட 57 தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சாதனைகள், தேதி விவரங்களுடன் ரத்தினசுருக்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

 

—-

 தாய்தான் என் முதல் தெய்வம், விவின் பாரதி, மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 90ரூ.

370 சிறுகதைகள் அடங்கிய நூல்.

நன்றி: தினத்தந்தி, 2/1/2014.


ஆசியாவின் பேரொளி

$
0
0

ஆசியாவின் பேரொளி, எம்.ஏ. பழனியப்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 55ரூ.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, அரசியல் பிரவேசம், சுதந்திர தாகம், பேச்சாற்றல், தைரியம் ஆங்கிலேயரை எதிர்த்து போராட்டங்கள், சிறைவாழ்வு, நிர்வாகத்திறன், இறுதி நாட்கள், மறைவு ஆகிய விவரங்கள் ஆகியவை படிக்க சுவாரசியமாக உள்ளன.

நன்றி: தினத்தந்தி, 2/1/2014.

 

—-

 

சங்கீத சற்குரு தியாகராஜர், ஜெ. அரவிந்த்குமார், லதா பதிப்பகம், ஜி3, பத்மா காம்ப்ளெக்ஸ், 2, கன்னியப்பன் தெரு, வடபழனி, சென்னை. பக். 344, விலை 200ரூ.

கர்நாடக இசை உலகின் மும்மூர்த்திகள் என்று சொல்லப்படுபவர்களுள் முதன்மையானவரான தியாகராஜரின் வாழ்க்கைச் சரித்திரத்தை நூலாகத் தந்துள்ளார் அரவிந்த் குமார். நூலின் உச்சககட்ட சிறப்பு தியாகராஜ கீர்த்தனைகளைச் சொல்லி, அவற்றிற்கு அகான எளிய தமிழில் விளக்கங்களை இணைத்திருப்பதுதான்.

ஒவ்வொரு கீர்த்தனைகளிலும் உள்ள பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகியவற்றிக்கு விளக்கம் தந்துள்ளது சிறப்பு. இது சாதாரண பணியன்று. புதிதாக இசை பயிலுபவர்கள் மட்டுமின்றி, இசையில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் இந்நூல் உதவும்.

தியாகராஜரின் சரித்திரம், மகான் ராமர் மீதிருந்த பக்தியை எப்படி கீர்த்தனைகளாக வடித்து மனமுருகப் பாடினார் போன்ற விஷயங்கள் நூலை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. ஹரிணி இசைப்பள்ளி மூலம் பல இசைக் கலைஞரை உருவாக்கியவர் நூலாசிரியர் என்பது கூடுதல் சிறப்பு.

நன்றி: குமுதம், 8/1/2014.

குப்பை உலகம்

$
0
0

குப்பை உலகம், சேவ் (Save), 5, அய்ஸ்வர்யா நகர், கே.பி.என்.காலனி, திருப்பூர், பக். 96, விலை 50ரூ.

சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றி அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருப்பூர் சுற்றுச்சூழல், தொழிலாளர் பிரச்னைகள் குறித்தும் நூலின் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

சாயப்பட்டறைகளாலும், மின் குப்பைகளாலும் நெகிழி குப்பைகளாலும், நியூட்ரினோ ஆய்வுகளினாலும் இந்த உலகம் எவ்வளவு குப்பைக்காடாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது என்பதை அதன் தீவிரம் குறையாமல் எச்சரிக்கும் கட்டுரைகள் அதிகம்.

மனிதனின் நாகரீக வளர்ச்சி இயற்கை மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராக வாதாடுகிறது இந்நூல்.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 8/1/2014.

 

—-

 

அழகுக் குறிப்புகள், கண்ணப்பன் பதிப்பகம், 4/20, திருவள்ளுவர் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 40ரூ.

மனிதனுக்கு உடல்நலம், மனநலம் மிகவும் முக்கியம். இதில் உடல்நலம் பேணிப்பாதுகாத்திட அருமையான ஆலோசனைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

ரசாயனம் இல்லாத இயற்கை பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் நூலாசிரியர் எஸ். லீலா. உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உணவுமுறை, உண்ணும்முறை, தவிர்க்க வேண்டிய உணவுகள் என அனைத்து ஆலோசனைகளும் சிறப்பு.

நன்றி: தினத்தந்தி, 2/1/2014.

தமிழ்நாட்டுப் பறவைகள்

$
0
0

தமிழ்நாட்டுப் பறவைகள், முனைவர் க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், விலை 300ரூ.

அழியா அழகான இயற்கைக்கு அணி சேர்ப்பது பறவையினம். மொபைல் டவர் பாதிப்பால், சிட்டுக்குருவிகள் காணாமல் போனதாக பேசுகிறோம். சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நமது வாழ்வில், அழகான பறவைகள் பற்றி அறிய இந்த நூல் உதவிடும்.

பைனாகுலர் கையில் இருந்தால் தூரத்தில் உள்ள பறவைகளையும் பார்த்து மகிழலாம். ஆனால் அதன் வண்ணம், சிறகுகளின் சிறப்பு, அலகுகள், அதன் பெயர், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கின்றனர்.

தமிழகத்தில் எங்கே அவைகளை காணலாம் என்ற பல கேள்விகளுக்கு விடை தருவது இந்த நூலின் சிறப்பாகும். பறவையின் வண்ணப்படத்துடன், இத்தகவல்களும், வழுவழு தாளில் வண்ணக் கலவையுடன் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் முயற்சி பாராட்டுதற்குரியது.

பதினொரு ஆண்டுகளுக்கு பின், இரண்டாம் பதிப்பாக நூல் அமைந்த போதும், இன்றைய இளைய தலைமுறையினர் இந்த நூலை ஆர்வத்துடன் வாங்கி பயனடையலாம்.

-பாண்டியன்.

 

—-

வெற்றி வெளியே இல்லை, வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், பக். 224, விலை 100ரூ.

வெற்றி என்பது வெளியே எங்கும் இல்லை. அது நமக்குள்ளே, விதைக்குள்ளே மிகப் பெரிய மரம் உறங்கிக் கொண்டு இருப்பதைப்போல் இருக்கிறது. நமது முயற்சியும், உற்சாகமும், உழைப்பும், ஊக்கமுமே அந்த விருட்சத்தை வெளிப்படுத்த வல்லவை.

இந்தக் கருத்தைப் பல்வேறு எடுத்துக்காட்டுடன் உறுதியாக நிறுவுகிறார் ஆசிரியர். வாழ்வில் ஏற்றம் பெற விரும்புவோர் தவற விட்டுவிடக்கூடாத நூல் இது.

-மயிலை சிவா.

நன்றி: தினமலர், 19/1/14.

பாரதி ஒரு திருப்புமுனை

$
0
0

பாரதி ஒரு திருப்புமுனை, முனைவர் அ. அறிவுநம்பி, சித்திரம், 15, கலைவாணி நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ.

பாரதியார் ஒரு வைரச் சுரங்கம். அவரது கவிதை வரிகளில் மின்சாரம் எடுக்கலாம். அந்த முயற்சியில் புதுவை ஆய்வு அறிஞர் அறிவு நம்பி புதுமை தோய்ந்து, பத்து கோணங்களில் பாரதியாரை பதிவு செய்துள்ளார்.

பாரதி உருவாக்கிய பாராட்டுப் பரம்பரை, புதுக்கவிதை முதலில் தந்தது, பாரதியின் பேனா புதுமையை நிரப்பி சிறுகதை புனைந்து, வேதத்தை புதுக்கியது, சோதனை முயல்வுகள் போன்ற கருத்துப் புரட்சியால், பாரதி ஒரு திருப்புமுனை என்று முதலிலேயே முத்தாய்ப்பு வைக்கிறார்.

சமத்துவம் இல்லாத பள்ளித் தலம் அனைத்தையும் சமநிலை பெறும் கோவில் ஆக்குவோம் என்று நுட்பாக விளங்கிய திறன் போற்றத்தக்கது.

-முனைவர் மா.கி. ரமணன்.

 

—–

 

பகவத் கீதை (விளக்க உரை), சுவாமி ராமா, கண்ணதாசன் பதிப்பகம், பக். 560, விலை 300ரூ.

ஒப்பற்ற பகவத் கீதைக்கு ஸ்ரீமத் சங்கரர், ஸ்ரீமத் மத்வர் ஆகிய மூவர் விரிவுரை செய்துள்ளனர். வேறுபட்ட வழிகளை இவர்கள் கூறிய போதிலும் சென்றடையும் இடம் ஒன்றாகவே கண்டனர்.

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் எழுதிய உரை, தத்துவார்த்தமானது என்பர். ஸ்ரீ அரவிந்தர் தம் விரிவுரையில் ஞானோதயம், கர்மயோகம், பக்தி யோகம் ஆகிய மூன்றையும் கீதை அளிக்கிறது என்கிறார்.

பாலகங்காதர திலகர், தாம் எழுதிய கீதா ரகசியத்தில், கர்மயோகத்தை கீதை வலியுறுத்தவதாகக் கூறுகிறார். வினோபா தமது கீதை விரிவுரையில் பற்றற்ற முறையில் செயல் புரிவதை கீதை கூறுகிறது என்கிறார்.

சுவாமி ராமா எழுதியுள்ள இந்நூல் கீதையின் உளவியல் கோட்பாடுகளை விளக்கிக் கூறுகிறது.

-கலியன் சம்பத்து.

நன்றி: தினமலர், 19/1/14.

ஆனந்த தாண்டவம்

$
0
0

ஆனந்த தாண்டவம், குமரன். கே, கே.டிரீம் வேர்ல்டு, பக். 150, விலை 150ரூ.

மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட இளைஞரான ஆசிரியர் கோவை பாரதியார் பல்கலையில், உளவியல் முதகலைப் பட்டம் படித்தவர்.

இவர் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் மருத்துவமனை ஒன்றில் உளவியல் ஆலோசகராக இருக்கிறார். இவரது இளவயதில் பெற்றோர் சிந்திய கண்ணீர் ஏராளம். ஆனால், இவருக்கு கிடைத்த பெண் ஆசிரியர்கள். கணினி உதவி, அத்தை, பாட்டி என்ற உறவினர் அனைவரும் இவரை நேசத்துடன் வளர்த்த பாங்கு, இவரை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.

மாற்றுத் திறனாளியாக இருந்து, சமூக அந்தஸ்தை பெற்ற இந்த இளைஞரது முயற்சி, மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும். அன்பு சாம்ராஜ்யத்தில் வாழ்ந்தால், முன்னுக்கு வரலாம் என்பதற்கு இவர் வாழ்க்கை ஓர் அடையாளம். அதற்கு இவரது இந்த சுயசரிதை நிச்சயம். ஒரு முன்னோடியாக அமையும் என்றால் மிகையாகாது.

 

—-

 

ஸ்ரீ காஞ்சீ மஹிமை, காஞ்சிபுரம் கோயில்களின் திருத்தல வரலாறு, யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ்.

காஞ்சி மாமுனிவருக்கு நெருக்கமானவரும், ஸ்ரீ வித்யா உபாசனையில் சிறந்து  காஞ்சிகாமகோடி அம்மனை தொடர்ந்து உபாசித்தவருமான ஸ்ரீ நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் கருத்தை தாங்கி வெளிவந்த நூல்.

நகரங்களில் காஞ்சி என்ற புகழ்பெற்ற தெய்வாம்சம் நிறைந்த இந்நகரின் எல்லைகள், காஞ்சி காமாட்சியின் அருள்திறம், அதை தெளிவாக்கும் புராணத் தகவல்கள், வண்ணப்படங்கள் ஆகியவற்றுடன் இந்த நூல் வெளிவந்திருப்பது சிறப்பாகும்.

ஆன்மிக அன்பர்கள் பெரிதும் விரும்பும் நூல்.

நன்றி: தினமலர், 19/1/14.

தனிநாயக அடிகளாரின் படைப்புகள்

$
0
0

தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், 127/63, பிரகாசம் சாலை, சென்னை 108, பக். 397, விலை 200ரூ.

இலங்கையில் பிறந்து, தமிழகத்தில் கல்வி கற்றத் தமிழ் மொழியின் சிறப்பை, உலகம் அறியச் செய்த பெருமைக்குரியவர் தவத்திரு தனிநாயக அடிகள், அவரின் நூற்றாண்டு விழா நினைவாக வெளிவந்திருக்கிறது இந்நூல்.

இந்த நூலில் உள்ள ஐந்து கட்டுரைகளில் பயணக் கட்டுரையான ஒன்றே உலகம் தவிர, மற்ற நான்கும் தமிழ் இலக்கியம், பண்பாடு பற்றியவை. அடிகள் தாம் மேற்கொண்ட உலகப் பயண அனுபவங்கள் குறித்துச் சொல்லியுள்ள தகவல்கள், மிகுந்த பயனுடையவை.

கிரேக்க நீதி இலக்கியம், புத்தரின் கருத்தியல் முதலியவற்றோடு திருக்குறளை ஒப்பிட்டிருக்கும் சிறப்பைத் திருவள்ளுவர் பற்றிய கட்டுரையில் காணலாம். மேலும், புத்த நூல்களோடு, பண்டைய தமிழ் இலக்கியத்தை ஒப்பிடும்போது, புத்த நூல்கள் துறவறத்தின் சாசனமாக விளங்க, பண்டைத் தமிழ் நூல்கள் இல்லறத்தின் சாசனமாக விளங்குகின்றன என்று, கூறும் கருத்தும் ஆழமாகச் சிந்திக்கப்பட்டுள்ளது.

தமிழர் பண்பாடும், அதன் சிறப்பியல்புகளும் என்ற கட்டுரை, பண்பாடு பற்றிய விளக்கத்தைத் துல்லியமாக ஆராய்கிறது. தமிழரிடம், மக்கள் நலக் கொள்கை சிறப்பாக நிலவியிருந்ததை எடுத்துக்காட்டுகளுடன் தருகிறது.

தமிழ்த் தூது என்ற இறுதிப் பகுதி, எட்டுக் கட்டுரைகள் அடங்கிய தனித் தொகுதியாக உள்ளது.

-ராம. குருநாதன்.

 

—-

 

மாட்டின் நோய்களும் மருத்துவ முறைகளும், டாக்டர் எஸ். சுவாமிநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 300, விலை 245ரூ.

உலகில் அதிக கால்நடைகள் எண்ணிக்கை நம் நாட்டில் இருந்தபோதும், அவற்றின் மூலம் கிடைக்கும் பணவரவு, அல்லது செழுமை முழு அளவில் இல்லை என்பதே உண்மை.

அக்கண்ணோட்டத்தில் தற்போது எழும் பல வினாக்களுக்கு, உரிய அடிப்படை பதில், மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் அவற்றை சீராக்கும் வழிகளாகும். அதை இந்த நூல் தெளிவாக தருகிறது. தற்போது எல்லாருக்கும் கோமாரி நோய் பாதிப்பு கறவை மாடுகளை பாதித்திருப்பது பற்றி தெரியும்.

பால் கறக்கும் தொழிலில் இருப்போருக்கு கைகளில் ஏற்படும் பரு பாதிப்பை கணுநோய் என்று கூறி, அதுபோன்ற பல விஷயங்கள் இந்த நூலில் சிறப்பாக தரப்பட்டிருக்கின்றன.

நன்றி: தினமலர், 19/1/14.

மாணவர்களுக்கு வள்ளுவர்

$
0
0

மாணவர்களுக்கு வள்ளுவர், என். வீரகண்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 168, விலை 100ரூ.

இந்த நூலில், அறத்துப் பால், பொருட்பால் ஆகியனவற்றில் இடம் பெற்றுள்ள, 108 அதிகாரங்களில் உள்ள, 1080 குறட்பாக்களின் எளிய, இனிய உரைகள் இடம் பெற்றுள்ளன.

உதாரணமாக, கற்கக் கசடற என்ற குறளை, கற்க வேண்டிய நூல்களை மிகத் தெளிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் கற்ற கல்விக்குத் தக்கபடி நல்வழியில் வாழ வேண்டும் என்று சொல்கிறார். மாணவ, மாணவியர் படித்துப் பயன் பெறலாம்.

-எஸ். குரு.

 

—-

 

ஐஸ்டிஸ் ஜெகதீசன், ராணிமைந்தன், கலைஞர் பதிப்பகம், பக். 208, விலை 200ரூ.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜெகதீசனின் வாழ்க்கை வரலாறு. இந்த நூலில் சுவைபட எழுதப்பட்டுள்ளது. கனிவும், கண்டிப்பும் மிக்க இவர், வழக்காளர்களின் வீண் அலைச்சல், வீண் செலவுகள், வீணாகும் நேரங்களை மனதில் கொண்டு, விரைந்து நீதி வழங்கிய அனுபவங்கள், படிப்பவரை சிந்திக்க வைக்கின்றன.

கடந்த 30 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 9 ஆண்டுகள் நீதிபதியாகவும் இருந்தார். ஓய்வுக்குப் பின் இந்திய அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

சமூக சேவையில் ஆர்வம் மிக்க, இவர் எத்திராஜ் மகளிர் கல்லூரித் தலைவராக, பத்தாண்டுகள் இருந்து கல்விப் பணியாற்றியுள்ளார். அட்வகேட் ஜெனரலாக இருந்தபோது, இவர் மேற்கொண்ட துணிச்சலான, ராஜினாமா சம்பவம், நேர்மைக்கு சான்று கூறும். மிகவும் பரபரப்பான, அதிமுக்கியமான வழக்குகளில், சிறிதும் மனசாட்சி தடுமாறாமல் இவர் வழங்கிய தீர்ப்புகள், நீதிமன்றத்தில் ஆவணமாக நூல்களில் உள்ளன. நீதிபதியின் ஆத்ம சோதனை ஆவண நூல்.

-முனைவர் மா.கி. ரமணன்.

நன்றி: தினமலர், 19/1/14.


கனவு மெய்ப்பட வேண்டும்

$
0
0

கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 29.

இந்நூலாசிரியர், இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றியவர்.

இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை படம்பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், இவற்றைக் களைந்து இந்தியாவை செழிப்பான ஒரு நாடாக ஆக்கிக் காட்டும் வழிகளை இந்நூலில் கூறியுள்ளார்.

வாசகர்களுக்குப் போரடிக்காமல் இருக்க, விறுவிறுப்பான நாவலாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் இறையருளால் பிரதமராகி, நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் கதைக்கரு.

அதற்கு பி.ஜே. (பாப்பநாயக்கன்பாளையம் ஜெகந்நாதன்) என்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, அவருக்கு எப்படி கடவுள் அருள் கிட்டுகிறது, அதற்குப் பின் அவரது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், அதன் விளைவாக அவர் அரசியலில் நுழைந்து, எம்.எல்.ஏ, முதலமைச்சர், எம்.பி., பிரதமர்… என்று படிப்படியாக முன்னேறுவது, ஒவ்வொரு கட்டத்திலும் அவர் சந்திக்கும் அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், ஊழல், மாநிலப் பிரச்னைகள், நதிநீர் பிரச்னைகள், அயல்நாட்டு உறவு, தீவிரவாதப் பிரச்னைகள்… என்று இன்றுள்ள பல பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு முன்னெடுத்துச் செல்கிறார்.

இதில் சிலவற்றுக்கு இவரால் கூறப்படும் தீர்வுகளும், அணுகுமுறைகளும் கருத்து வேறுபாடுகளுக்கு இடமளித்தாலும் நல்லவர் கையில் நாடு சென்றால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது இந்நூல்.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 8/1/2014.

 

—-

 

இலக்கியத் திறனாய்வும் படைப்பு இலக்கியமும், முனைவர் ந. வெங்கடேசன், குகன் பதிப்பகம், 5, வி,கே.கே. கட்டடம், வடுவூர் 614019, பக். 208, விலை 150ரூ.

இலக்கியத் திறனாய்வு முறைகளையும், அதன் வகைகளையும், படைப்பு இலக்கியங்களையும், மேனாட்டு, நம் நாட்டுப் பார்வையில் இந்நூல் காட்டுகிறது. சிறுகதை, புதினம், கவிதை ஆகிய படைப்பிலக்கியம் பற்றியும், அதன் திறனாய்வு பற்றியும் இந்நூல் தெரிவிக்கிறது. ஆய்வு மாணவருக்கு இந்நூல் வழிகாட்டும்.

நன்றி: தினமலர், 19/1/14.

 

பூ மலரும் காலம்

$
0
0

பூ மலரும் காலம், ஜி. மீனாட்சி, பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட், விலை 85ரூ.

இலக்கிய வெளியில் பெண் எழுத்தாளர்கள் குறைந்துவிட்ட நிலையில் ஜி. மீனாட்சி போன்ற சிலரின் சிறுகதைகள் புதிய தெம்பூட்டுகின்றன. இவரின் பூ மலரும் காலம் என்னும் தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

இச்சிறுகதைக் குறித்து, எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் கருத்து- எழுத்தை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஓர் எழுத்தாளரின் தொகுதி என்பதை இதிலுள்ள படைப்புகள் புலப்படுத்துகின்றன.

வணிக நோக்கில்லாமல் தனி மனிதனையும், சமுதாயத்தையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இவரின் கதைகள் எழுதப்பட்டுள்ளன என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை எனலாம்.

இத்தொகுப்பில் வளையல்காரம்மா என்ற சிறுகதை இன்றையச் சூழலில், வீடு தேடி வரும் வளையல் வியாபாரிகள் இல்லாமல் போன சோகத்தை நெஞ்சம் நெகிழும் வகையில் சொல்கிறது.

இந்தத் தொகுப்பின் மிக முக்கியமான கதைகளில் ஒன்று, பூ மலரும் காலம் என்னும் சிறுகதை யதார்த்தமான எளிய காதல் கதையாய் நெஞ்சில் நிறைகிறது.

வலி இல்லாத வழி, ஒரு மழைக் காலம், மறுபக்கம் போன்ற கதைகள் கட்டாயம் சுவாரசிய வாசிப்புக்கு உகந்தவை. வெளிப்படையான பாலியலைப் பேசும் பெண்ணியமாக இல்லாமல், வீட்டுக்குள் முடங்கிப் போகிற பழைமைவாதியாகவும் இல்லாமல் கலாசாரத்துக்கு உட்பட்ட பெண்ணியவாதியாக கதைகளில் வலம் வருகிறார் மீனாட்சி.

-கௌரி.

நன்றி: கல்கி, 12/1/2014

ஓநாய் குலச்சின்னம்

$
0
0

ஓநாய் குலச்சின்னம், ஜியாங் ரோங், தமிழில்-சி.மோகன், அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, ராமலிங்க நகர், விருகம்பாக்கம், சென்னை 93.

வரலாற்றில் படித்த செங்கிஸ்கான் மீது இன்னும் பலருக்கு அச்சம் நீங்கியிருக்காது. அவரும் அவரது மங்கோலியப் படையினரும் எப்படி உலகில் பல நாடுகளை அச்சுறுத்திப் பணிய வைத்தனர் என்பதற்கான விடைகளைத் தரும் வரலாற்றுப் புனைவு நாவல் ஓநாய்குலச் சின்னம்.

சீன எழுத்தாளரான ஜியாங் ரோங் என்பவர் எழுதிய புகழ்பெற்ற இந்நாவலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் சி.மோகன்.

கலாச்சார புரட்சி காலத்தில் உள்மங்கோலியாவில் வாழ்ந்த நாடோடி மக்களுடன் வாழ்வதற்காக பீஜிங்கிலிருந்து அனுப்பப்படும் ஹான் சீன மாணவன் ஒருவனது பார்வையில் முழு நாவலும் சொல்லப்படுகிறது.

ஓநாய்களின் வாழ்க்கை முறை அவற்றுடன் மங்கோலிய மேய்ச்சல் நில மக்கள் கொண்டிருந்த உறவு. சீன ஆதிக்கத்தில் எப்படி இந்த உறவு சிதைந்து ஓநாய்கள் முழுக்க கொல்லப்பட்டு மேய்ச்சல் நிலம் பாலைவனமாகப் போய் அந்த மேய்ச்சல் நாகரிகம் அழிக்கப்பட்டது என்பதை இந்நாவல் விளக்குகிறது.

ஓநாய்க் கூட்டங்களின் தாக்குதல் முறை, மேய்ச்சல் நிலத்தில் மான்களையும் வேறு பல தாவர உண்ணிகளையும் கொல்வதன் மூலம் அவை எப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மேய்ச்சல் நிலத்தைப் பேணுகின்றன போன்ற தகவல்கள் அழகாக சித்தரிக்கப்படுகின்றன.

பில்ஜி என்கிற மூத்த மேய்ச்சல் நிலக்குழு தலைவர் ஒருவருடன் நெருங்கிப் பழகும் இம்மாணவன் அவரிடமிருந்து ஓநாய்களைப் பற்றிக் கற்றுக்கொள்கிறான்.

மர்மோட்டுகள், எலிகள், மான்கள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் என நாவல் முழுக்க மேய்ச்சல் நிலத்தவர்களின் அசைவை உணவுப் பழக்கங்கள் வாசிக்கையில் எச்சில் ஊறச்செய்கின்றன.

எந்த இத்திலும் தொய்வு ஏற்படாமல் விறுவிறுப்பாக செல்கிறது.

நன்றி: அந்திமழை, 1/12/2014

கர்ணனின் கவசம்

$
0
0

கர்ணனின் கவசம், கே.என்.சிவராமன், சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 600004.

நாடி நரம்புகளில் எல்லாம் மகாபாரதமும், ராமாயணமும், பொன்னியின் செல்வனும் சாண்டில்யனின் சரித்திர நாவல்களும் ஊறிக்கிடக்கும் ஒருவர் விறுவிறுப்பான தொடர்கதை எழுதத் தொடங்கினால் எப்படி இருக்கும்? கர்ணனின் கவசம் என்ற நாவல் இதற்குப் பதிலாக இருக்கிறது.

முதல் அத்தியாயத்தில் தொடங்கும் ஓட்டம் சரித்திரத்தில், பூகோளத்தில், புராணத்தில், சொர்க்கத்தில், வைகுண்டத்தில் என எங்கெங்கு மனிதன் யோசிக்க முடியுமோ அங்கெங்கெல்லாம் சஞ்சரித்து கடைசியில் கபாடபுரத்தில் முடிவடைகிறது.

முடிவடைகிறது என்று சொல்வது தவறு. மீண்டும் ஆரம்பிக்கிறது. ஓர் அத்தியாயத்தில் காணாமல் போகும் பாத்திரம் சில அத்தியாயங்கள் கழித்து மீண்டும் தோன்றுகிறது. அது மீண்டும் காணாமல் போய் திரும்பவும் ஏதோ ஒரு பக்கத்தில் கண்விழிக்கிறது.

எல்லாம் எதிர்பாராத ஆச்சரியங்கள், திருப்பங்கள்தான். ராமாயண ஜடாயு, ஆதித்யாவையும் தாராவையும் தூக்கிக் கொண்டு பறக்கிறது. பிறகு அதைக் காணவில்லை. கடைசியில் சகுனி உருட்டும் தாயம் ஜடாயுவாக மாறி மாளிகையை உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது.

குந்தி, திரௌபதி, அம்பா, பீஷ்மர், கிருஷ்ணர், ஆதித்ய கரிகாலன், குந்தவை, ரவிதாசன், வியாசர், கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கணிதப் புதிர்கள், சிற்ப சாஸ்திரம், வெள்யிம்பல நடராஜர் சிலை, கிராபீன் மனிதன், எரிகல் மனிதன், நவக்கிரக மனிதன், எல்லா இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் சுரங்கங்கள் என நூலாசிரியர் தூள் கிளப்புகிறார்.

ஜெர்மனியிலிருந்தும் சீனத்திலிருந்தும் பொக்கிஷத்தைத் தேடி வரும் மனிதர்கள் நிலை, நாவலில் பெருந்திண்டாட்டமாக இருக்கிறது. யார் யார் வடிவை எடுக்கிறார்கள் என்பதே குழப்பமாக இருப்பதால் நாமும் நாம் படிக்கும் எதையும் நம்பாமல் ஒரு ஆச்சரியத்தை எதிர்பார்த்து காத்திருப்புடன் மேலே வாசிக்க பழகிவிடுகிறோம்.

பீஷ்மரிடம் இருக்கும் அஸ்வத்தாமன் ஏவிய பிரம்மாஸ்திரத்தைப் பெறுவதற்கு அசோகரின் ரகசியப் படை வீரர்கள் போடும் ஆள்மாறாட்ட உத்தி போன்ற பல சிலிர்ப்பூட்டும் சம்பவங்களுடன் ஜெட் வேகத்தில் பறந்து செல்கிறது நாவல். வாசித்துக் கொண்டிருக்கையில் அருகில் இருக்கும் நபர்கூட ஒரு மகாபாரதப் பாத்திரமாக மாறிவிடும் சாத்தியம் இருக்கிறது. ஜாக்கிரதை.

 

—-

 

துளிவிஷம், ஆனந்த் ராகவ், வாதினி, 19/29, ராணி அண்ணா நகர், ஆஃப் பி.டி.ராஜன் சாலை, கே.கே. நகர், சென்னை 78, விலை 120ரூ.

அவளைப் பார்த்தான். வசீகரமாயிருந்தாள். ஊதா நிற பளபளப்பு சிக்கன உடை, மெல்லிய மார்பு ஒட்டிச் சரிந்து, வயிற்றில் நின்று மஞ்சள் நிற வயிறு காட்டி, தொப்புள் கடந்தவுடன் இடுப்பில் தொடர்ந்து முழங்காலுக்குச் சற்று மேலே முடிந்து மெல்லிய கால்களை விடுவித்தது – இது எழுத்தாளர் ஆனந்த் ராகவின் துளிவிஷயம் சிறுகதைத் தொகுப்பில் முகம் என்ற சிறுகதையில் ஒரு பெண்ணைப் பற்றிய விவரிப்பு.

இப்படி செதுக்கிச் செதுக்கி எழுதுவதில் வல்லவராக இருக்கும் இவரது துள்ளலான மொழிநடை இத்தொகுப்பு முழுக்க விரவிக் கிடக்கிறது. முகம் சிறுகதை இறுதியில் தரும் அதிர்ச்சி அனுபவம் ஆக்குகிறது.

பல்வேறு ஊர்கள், நாடுகள், கலாச்சாரங்களின் பின்புலங்களில் அமைந்த 15 சிறுகதைகளின் தொகுப்பாக இது மலர்ந்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தவர்கள் ஒருவருக்கொருவர் பேசவிடாமல் அவதிப்படுத்துவதை மெல்லிசைக் கல்யாணம் என்ற கதை எள்ளலுடன் சித்தரிக்கிறது.

ஒரு கிரிக்கெட் வீரனின் சரிவைச் சொல்லும் சுழல்பந்து, படித்த பின் மனதைப் பிசையும் துளிவிஷம் போன்ற கதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நன்றி: அந்திமழை, 1/12/2014

சுவரொட்டி

$
0
0

சுவரொட்டி, கலாப்ரியா, கயல்கவின் புக்ஸ், 16/25, 2வது கடல்போக்கச் சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41.

வெளிப்படையான அனுபவங்களை எழுதுவது தங்களது பிம்பங்களை உடைத்துவிடும் என்பது அனேக தமிழ் எழுத்தாளர்களின் பயமாக இருக்கிறது. போலி முகமூடிகளின்றி நேர்பட பேசும் கலாப்ரியாவின் உரையாடல்களின் தொடர்ச்சிதான் அவரது கட்டுரைகள்.

கலாப்ரியாவின் நான்காவது கட்டுரைத் தொகுப்பான சுவரொட்டி வாழ்வின் பெரும்பகுதியை சினிமாவில் தொலைத்த தமிழர்களின் வாழ்வை சுவாரஸ்யமாக விவரிக்கிறது.

தீவிர சினிமா ரசிகர்களுக்கு தியேட்டரில் வேலை பார்ப்பவர்களுடனான உறவு பற்றி சொல்லும்போது, Murder She Said என்ற படம் திரையிடப்பட்ட அரங்கின் மேனேஜரிடம் இதுதான் என் கடமை படத்தின் கதை என்று கலாப்ரியா கூற உடனே அவர் வாசலில் இருக்கும் போர்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த என் கடமை திரைப்படத்தின் கதை என்று எழுதச் சொல்கிறார்.

காப்பி படத்தை முன்னிறுத்தி ஓரிஜினலுக்கு விளம்பரம். இந்த தொகுப்பிலுள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது அறுபதுகளில் தமிழர்கள் சினிமா என்ற போதையில் சிக்கியிருந்தார்களோ என்று தோன்றலாம். கலாப்ரியாவின் முதல் கவிதைக்கும் முதல் கட்டுரைக்கும் இடையில் 39 ஆண்டுகள் இடைவெளி. இந்த நீண்ட இடைவெளியில் அவர் மன அடுக்குகளில் சேமித்து வைத்திருக்கிற அனுபவங்களை கொஞ்சம் கொங்சமாக ரிலீஸ் செய்கிறார்.

60களின் தமிழ் சினிமா சூழலை துல்லியமாக படம்பிடித்துக் கூறும் இந்த சுவரொட்டி சினிமாவை விரும்பும் சகலருக்கும் பிடிக்கும்.

நன்றி: அந்திமழை, 1/12/2014

தமிழகத்தில் தேவதாசிகள்

$
0
0

தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே. சதாசிவன், தமிழில்-கமலாலயன்.

பெண்கள் சார்ந்தும், பெண்ணியம் சார்ந்தும் எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில மட்டுமே முழுமைபெற்றவையாக இருக்கின்றன. ஆனால் முனைவர் சே. சதாசிவன் எழுதி, கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் தமிழகத்தில் தேவதாசிகள் என்ற புத்தகம், தன் இலக்கைக் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இரந்துவந்த தேவதாசி நடைமுறையைப் பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். கோயில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்கள்தான் தேவதாசிகள் என்றழைக்கப்படும் தேவரடியார்கள்.

பக்தி இலக்கியம் கோலோச்சிய ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இவர்கள் சமூகத்தினரால் மரியாதையாகப் பார்க்கப்பட்டனர். காலப்போக்கில் அந்த மரபின் வழி வந்தவர்களுக்குப் போதிய அங்கீகாரமும் கவனிப்பும் இல்லாமல், தேவதாசிகள் என்பவர்கள் மிகக் கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டனர்.

தமிழ்க் கலாச்சாரத்துக்குச் செழுமை சேர்த்த ஒரு சமூக மரபு தன் சொந்த மண்ணில் இருந்து முற்றிலுமாக அழிந்து போனதன் பின்னணியைக் கவனத்துடன் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். எந்த ஒரு உன்னதமான நிறுவனமும்கூட, சமூக விரோதிகள் அதனுள் சுதந்திரமாக ஊடாட அனுமதிக்கப்படும் பட்சத்தில் உருச்சிதைந்து மிக மோசமான ஒரு நிறுவனமாகச் சீரழிந்து போய்விடும் என்ற உண்மையை தேவதாசி முறையின் அழிவு உணர்த்துவதாகக் குறிப்பிடுகிறார் இவர்.

நூல் முழுவதும் வியாபித்திருக்கும் அரிய தகவல்களும் அவற்றுக்கான ஆதாரங்களும் ஆசிரியரின் ஆழமான களப்பணியையும் வாசிப்பையும் பறைசாற்றுகின்றன.

புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்-

ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது மிக ஆர்வம் நிறைந்த சுவையான கதை. தேவதாசியாக வேண்டுமென்றால், எந்த ஓர் இளம் பெண்ணும் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் (சிலவற்றின்) ஊடாகப் பயணித்து வரவேண்டும். அவையாவன,

1. சடங்குபூர்வமான திருமணம்.
2. அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு
3. நிகழ்த்து கலைகளில் ஈடுபடுத்த முன் முயற்சி எடுத்தல்
4. அரங்கேற்றம்
5. கடமைகள் மற்றும்
6. இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள்.

இவை ஒரு சாதாரண இளம் பெண்ணை என்றைக்கும் புனிதமான பெண்ணாகப் பரிணாம மாற்றமடையச் செய்பவளாக அமைகின்றன. இந்த அடுத்தடுத்த படிநிலைகளையும், இவை உள்ளடங்கிய மற்ற பிற சடங்குகளையும் விவாதிப்பதில் கி.பி. ஆறாம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரையிலான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடமைகள்

பாடல்கள் இசைப்பதும், நடனமாடுவதும்தான் கோயில்களில் அவர்களின் பொதுவான கடமைகளாக இருந்தன. இந்த ஓர் அம்சத்தில் மட்டுமே இராஜராஜேஸ்வரம் கோயிலின் தேவதாசிகளுடைய கடமைகள். இதர கோயில்களி இணைந்திருந்த இவர்களுடைய சக தேவதாசிகளுடைய கடமைகளோடு ஒரே தன்மையுடையவையாக இருந்தன.

அரசின் உறுதுணை

தேவதாசி முறையை முன்னெடுத்துச் சென்றது அரசின் உறுதுணையாகும். காரணம் அரசுக்கு இது வருவாய் அளிக்கக்கூடிய ஒரு வழி. தேவதாசிகள், நுண்கலைகளின் பாதுகாவலர்களாக இருந்திருக்கின்றனர். மேலும் அரசர்களுக்கும், புரோகிதர்களும் இன்பம் பெறுவதற்கான ஒரு வழிவகையாக இது இருந்துள்ளது.

சமூக சேவை

தேவதாசிகள், பொதுமக்களுக்கான சமூக சேவைகள் மேற்கொண்டனர் என்று சாசனங்கள் பதிவு செய்துள்ளன. விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டுதோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன.

இரண்டு தேவதாசிகளான நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகியோர் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர்.

அன்னநாடு என்ற இடத்தில் அவர்கள் திருத்தகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தை தோண்டி ஆழப்படுத்தி கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர்.

-பிருந்தா.

நன்றி: தி இந்து, 19/1/2014

பாவேந்தம்

$
0
0

பாவேந்தம், பதிப்பாசிரியர்கள்-முனைவர்கள் இரா. இளங்குமரன், இரா. இளவரசு, கு. திருமாறன், பி. தமிழகன், கிடைக்குமிடம்-தமிழ் மண் பதிப்பகம், 2, சங்கார வேலர் தெரு, தி.நகர், சென்னை 17.

பாரதிதாசன் படைப்புகள் முழுவதும்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள் அனைத்தும் 25 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

பாரதிதாசன், தொடக்க காலத்தில் ஆத்திகராக இருந்தவர். அப்போது எழுதிய பக்திப் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 25 தொகுதிகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது.

பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து இவ்வளவு தொகுதிகளை வெளியிடுவது சாதாரண செயல் அல்லவே. சிறந்த கட்டமைப்புடன் வெளியிடப்பட்டுள்ள பரிசுப்பதிப்பு விலை ரூ. 6,640 என்றாலும், ஜனவரி 31ந்தேதி வரை ரூ. 5000க்கு கிடைக்கும் என்று தமிழ் மண் பதிப்பக அதிபர் இளவழகனார் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு புத்தகத்திலும் பாரதிதாசனின் மாறுபட்ட படங்கள் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு.

 

—-

 

மதிநுட்பக் கதைகள், வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன்ஸ், 8 மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 350ரூ.

67 சிறுகதைகளின் தொகுப்பு நூல். ராஜா ராணிக் கதைகள், மந்திரவாதிக் கதைகள், மர்மக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள், சீரியசான கதைகள், நீதிக் கதைகள், நற்பண்புகள்-நல்ல பழக்க வழக்கங்களை போதிக்கும் கதைகள் என பலவகையான கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படித்து ரசிக்கலாம்.

நன்றி: தினத்தந்தி, 16/1/2014.


தமிழர் வரலாறு

$
0
0

தமிழர் வரலாறு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 250ரூ.

தமிழர்களின் வரலாற்றை நம்முடைய தமிழ் அறிஞர்கள் பலர் விரிவாக ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர். இருந்தபோதிலும் பி.டி.சீனிவாச அய்யங்கார் ஆங்கிலத்தில் எழுதிய தமிழர் வரலாறு பல சிறப்புகளைக் கொண்டது. இதை புலவர் கா. கோவிந்தன் மொழிபெயர்த்துள்ளார்.

கி.பி. 600 வரையிலான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றை விளக்குகின்ற அருமையான நூல். பி.டி.சீனிவாச அய்யங்காரின் சில தவறான முடிவுகளை தக்க சான்றுகளோடு மறுத்து அந்தந்த அதிகாரங்களின் பின் இணைப்பாக சேர்த்திருபப்து இந்நூலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

 

—-

 

அதங்கோட்டாசான், வே. செல்லம், தமிழாலயம் பதிப்பகம், சாமிதோப்பு 629704, விலை 70ரூ.

தொல்காப்பியம் அரங்கேற்றத்திற்கு தலைமை தாங்கிய அதங்கோட்டாசானின் சிறப்புகளை கூறும் நூல் இது. வர்மக் கலை என்ற உடற்கூறு கலை பற்றி நூல் முழுவதும் கூறியுள்ளார் ஆசிரியர்.

மனித உடலில் காணப்படும் வர்மங்கள் படத்துடன் விளக்கி காட்டப்பட்டுள்ளது.

 

—-

 

தமிழ்ப் புலவர் வரலாறு, அருணா பப்ளிகேஷன்ஸ், 12, முதல் தெரு, வடக்கு ஜெகந்நாத நகர், வில்லிவாக்கம், சென்னை 49, விலை 55ரூ.

சங்க காலப் புலவர்கள், இடைக்காலப் புலவர்கள், தற்காலப் புலவர்கள் என்ற தலைப்பில் தமிழ்ப்பிரியன் எழுதிய நூல். பள்ளி மாணவர்களுக்கு பயன்படும்.

நன்றி: தினத்தந்தி, 16/1/2014.

டாலர் தேசத்து அனுபவங்கள்

$
0
0

டாலர் தேசத்து அனுபவங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை ரூ.100.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஆர். நல்லக்கண்ணு, தனது அமெரிக்க 20 நாள் சுற்றுப்பயண அனுபவத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அங்கு வாழும் தமிழ் பற்றாளர்களின் சந்திப்பு, வரலாற்று தலங்கள், தலைவர்களின் சிலைகள், அவர்களின் சிறப்புகளையும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஏகாதிபத்திய போக்கையைம் வெளிப்படுத்த தவறவில்லை.

 

—-

 

தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில், குடவாயில் பால சுப்ரமணியன், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி 612610, திரூவாரூர் மாவட்டம், விலை 1000ரூ.

கும்பகோணம் அருகே, ஏறத்தாழ 870 ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னர் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டு, தற்போது உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாகப் போற்றப்படும் தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலில் நாட்கள் கணக்கில் தங்கி இருந்து அங்குள்ள சிற்பங்களை அங்குலம் அங்குலமாகப் பார்த்தாலும் அறிய முடியாத பல அற்புத அதிசய தகவல்களை, நமது கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர்.

இதற்குத் துணையாக அவர் பயன்படுத்தி இருக்கும் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு மிகச் சிறப்பு. சேக்கிழாரின் பெரிய புராணத்தை இரண்டாம் ராஜராஜன் கற்களால் கோபுரமாக கட்டிய சாதனை போலவே, ஆசிரியர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து சொற்களால் உருவாக்கிய இந்த அரிய புத்தகமும் போற்த் தக்க சாதனை என்றால் மிகை இல்லை.

நன்றி: தினத்தந்தி, 16/1/2014.

வெல்லும் சொல்(வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள்)

$
0
0

வைகோவின் இலக்கியச் சொற்பொழிவுகள் – வெல்லும் சொல், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 300ரூ.

அரசியல் பற்றி மட்டுமல்ல, இலக்கியம் பற்றியும் மனதைக் கவரும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர் வைகோ. அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள் அடங்கிய நூல் வெல்லும் சொல்.

சிலப்பதிகாரம் பற்றிய அவருடைய விரிவான உரையில், கண்ணகி கோவலன் வரலாற்றை சிறந்த முறையில் எடுத்துக் கூறுவதுடன் சிலம்புக்கு நிகரான காப்பியம் வேறு எந்த மொழியிலும் கிடையாது என்று அடித்துக் கூறுகிறார்.

கல்கியின் அற்புத நாவல்களான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ஆகியவை பற்றிய வர்ணனையை மீண்டும் மீண்டும் படித்து ரசிக்கலாம். காரணம் இந்த இரண்டு மகத்தான கதைகளின் சுருக்கமும் அவர் உரையில் அடங்கியுள்ளது.

மொத்தத்தில், சிறந்த இலக்கிய விருந்து இந்தப் புத்தகம்.

 

—-

 

நுனிப்புல் மேய்தல், காந்தளகம், 4, முதல்மாடி, ரகிசா கட்டிடம், 68, அண்ணாசாலை, சென்னை 2, விலை 100ரூ.

நூலாசிரியர் சுவிஸ் மூர்த்தி மாஸ்ரர், இலங்கைத் தமிழர், இனக்கலவரம் காரணமாக சுவிட்சர்லாந்தில் குடியேறியவர். அவர் தமது அனுபவங்களை கட்டுரைகளாக வடித்துள்ளார்.

இலங்கையில் நிகழ்ந்த சிலகொடுமைகளை அவர் விவரிக்கும்போது, நமது கண்கள் கலங்குகின்றன. இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகள் உணர்ச்சிமயமானவை.

 

—-

 

சித்தர்களை அறிவோம், எம். ஆழகர்சாமி, எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8/2, போலீஸ் குவாட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ.

இறை நிலை ஞானிகளான சித்தர்கள் குறித்து படங்களுடன் சுருக்கமாக எளிமையாக தொகுத்து கூறப்பட்டுள்ளது. சித்தர்களின் சக்தி குறித்து தெரிந்து கொள்ள விரும்புவோர் படித்து பயன்பெறலாம்.

நன்றி: தினத்தந்தி, 16/1/2014.

தமிழ்ச்சுடர் மணிகள்

$
0
0

தமிழ்ச்சுடர் மணிகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 230ரூ.

மறைந்த தமிழறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதிய இந்நூல் மிகப் புகழ் பெற்றது. தொல்காப்பியர், திருவள்ளுவர், கபிலர், கம்பர், சடையப்ப வள்ளல், பரிமேலழகர் உள்பட 24 தமிழ்ச்சான்றோர்களின் வரலாறுகளை விரிவாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் வையாபுரிப்பிள்ளை.

நீண்ட இடைவெளிக்குப் பின் சிறந்த கட்டமைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது. திருவள்ளுவர் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து இவர் எழுதிய வாழ்க்கைக்குறிப்பு குறிப்பிடத்தக்கது.

அதில் ஒரு பகுதி வருமாறு,

இவர் வள்ளுவர் குடியிற் பிறந்தவர். இதனாலேயே இவர் வள்ளுவர் என வழங்கப்படுகிறார். வள்ளுவர்களுடைய சாதித்தொழில் அரசனுடைய ஆணையை யானை மூலம் பறை சாற்றி தெரிவிப்பதாகும்.

இக்குலத்தில் பிறந்த ஒருவருக்கு இவ்வளவு, கல்வியும், அறிவும் எவ்வாறு உண்டாகும் என்று பலர் ஐயப்பாடு கொண்டார்கள்.

அதனாலேயே வள்ளுவருடைய பிறப்பைக் குறித்துப் பல்வேறு கதைகளும் தோன்றின…

தமிழ் ஆர்வம் கொண்டோருக்கு நல் விருந்து படைக்கும் நூல்.

 

—-

 

நம் மண் போற்றும் மாதரசிகள், வெ. இன்சுவை, கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 80ரூ.

இந்தியாவில் வாழ்ந்த புராண இதிகாச சரித்திர பெண்களான சீதாதேவி, கண்ணகி, காரைக்கால் அம்மையார், ஜான்சிராணி, டாக்டர் முத்துலட்சமி ரெட்டி உள்பட 18 பெண்களை பற்றிய பல அரிய தகவல்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினத்தந்தி, 16/1/2014.

ஓவியமாய் ஒரு பெண்

$
0
0

ஓவியமாய் ஒரு பெண், யோகா, யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ.

பிரபல புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ஓவியமாய் ஒரு பெண். 11 கதைகளில் முதல் கதையாக அமைந்து நூலின் தலைப்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது ஓவியமாய் ஒரு பெண் சிறுகதை.

அவரவர் துறையில் பிரபலமாயிருக்கிற தம்பதிகளின் அன்பின் நேசத்தை ஆழமாகவே பதிவு செய்திருக்கிறது.

கணவர் குடும்பத்தில் அவரது சகோதர வட்டம் எல்லாரும், 58 வயதுக்குள் இறைவனடி சேர்ந்துவிட, ஐம்பத்தெட்டை தொடப்போகும் தன் கணவனுக்கும் அப்படியான விபரீதம் நேர்ந்து விடுமோ என்று கலங்கித் தவிக்கிற மனைவி எடுக்கும் தெய்வீக முயற்சியை சிலிர்ப்புடன் சொல்கிறது பெருமாளே காப்பாத்து சிறுகதை.

கதைகள் ஒவ்வொன்றுமே எங்கோ யாருக்கோ நடந்ததுபோல் அத்தனை இயல்பு. கேமரா கலைஞனின் பேனாவும், சாட்சிப் பதிவில் ப்ளாஷ் அடித்திருக்கிறது என்பது பளிச்சிட்ட நிஜம்.

 

—-

 

ஆங்கிலப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும், வீ. செந்தில்குமார், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.

ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளோடு, மேலோரின் மேற்கோள்களும் தொகுக்கப்பட்ட இந்நூல், மாணவர்களுக்கு மிகவும் பயன்படும்.

 

—-

 

தித்திக்கும் தேன் தமிழ் இலக்கியம், செ. ஞானன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ.

34 இலக்கிய கட்டுரைகள் அடங்கிய நூல். ஒவ்வொரு கட்டுரைக்குள்ளும் அடங்கியுள்ளது சுவையான கதை.

நன்றி: தினத்தந்தி, 16/1/2014.
ஓவியமாய் ஒரு பெண், யோகா, யோக சாவித் பப்ளிகேஷன்ஸ், 15/90, பாண்டி பஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ.
பிரபல புகைப்படக் கலைஞர் கலைமாமணி யோகா எழுதிய 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே ஓவியமாய் ஒரு பெண். 11 கதைகளில் முதல் கதையாக அமைந்து நூலின் தலைப்புக்கு பெருமை சேர்த்திருக்கிறது ஓவியமாய் ஒரு பெண் சிறுகதை. அவரவர் துறையில் பிரபலமாயிருக்கிற தம்பதிகளின் அன்பின் நேசத்தை ஆழமாகவே பதிவு செய்திருக்கிறது. கணவர் குடும்பத்தில் அவரது சகோதர வட்டம் எல்லாரும், 58 வயதுக்குள் இறைவனடி சேர்ந்துவிட, ஐம்பத்தெட்டை தொடப்போகும் தன் கணவனுக்கும் அப்படியான விபரீதம் நேர்ந்து விடுமோ என்று கலங்கித் தவிக்கிற மனைவி எடுக்கும் தெய்வீக முயற்சியை சிலிர்ப்புடன் சொல்கிறது பெருமாளே காப்பாத்து சிறுகதை. கதைகள் ஒவ்வொன்றுமே எங்கோ யாருக்கோ நடந்ததுபோல் அத்தனை இயல்பு. கேமரா கலைஞனின் பேனாவும், சாட்சிப் பதிவில் ப்ளாஷ் அடித்திருக்கிறது என்பது பளிச்சிட்ட நிஜம்.

ஆங்கிலப் பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும், வீ. செந்தில்குமார், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.
ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளோடு, மேலோரின் மேற்கோள்களும் தொகுக்கப்பட்ட இந்நூல், மாணவர்களுக்கு மிகவும் பயன்படும்.

தித்திக்கும் தேன் தமிழ் இலக்கியம், செ. ஞானன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ.
34 இலக்கிய கட்டுரைகள் அடங்கிய நூல். ஒவ்வொரு கட்டுரைக்குள்ளும் அடங்கியுள்ளது சுவையான கதை.
நன்றி: தினத்தந்தி, 16/1/2014.

Viewing all 3876 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>